திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 51 முதல் 52 வரை

விக்கிமூலம் இலிருந்து
"என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும்" - எசாயா 51:4.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 51 முதல் 52 வரை

அதிகாரம் 51[தொகு]

எருசலேமுக்கு ஆண்டவரின் ஆறுதல் மொழி[தொகு]


1 விடுதலையை நாடுவோரே, ஆண்டவரைத் தேடுவோரே,
எனக்குச் செவிகொடுங்கள்.
நீங்கள் எந்தப் பாறையினின்று செதுக்கப்பட்டீர்களோ,
எந்தக் குழியினின்று தோண்டப்பட்டீர்களோ, அதை நோக்குங்கள்.


2 உங்கள் தந்தை ஆபிரகாமையும்
உங்களைப் பெற்றெடுத்த சாராவையும் நினைத்துப் பாருங்கள்;
தனியனாய் இருந்த அவனை அழைத்தேன்;
அவனுக்கு ஆசி வழங்கிப் பெரும் திரளாக்கினேன்.


3 ஆண்டவர் சீயோனைத் தேற்றுவார்;
பாழடைந்த அதன் பகுதிகள் அனைத்திற்கும் ஆறுதல் அளிப்பார்;
அதன் பாலைநிலத்தை ஏதேன்போல் அமைப்பார்;
அதன் பாழ் இடங்களை ஆண்டவரின் தோட்டம்போல் ஆக்குவார்.
மகிழ்ச்சியும் அக்களிப்பும் அதில் காணப்படும்;
நன்றிப்பாடலும் புகழ்ச்சிப் பண்ணும் அங்கே ஒலிக்கும்.


4 என் மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்;
என் இனமே, எனக்குச் செவிகொடு;
ஏனெனில் திருச்சட்டம் என்னிடமிருந்து புறப்பட்டுச் செல்லும்;
என் நீதி மக்களினங்களுக்கு ஒளியாகத் திகழும்.


5 நான் அளிக்கும் விடுதலை அண்மையில் உள்ளது;
நான் வழங்கும் மீட்பு வெளிப்பட்டு விட்டது;
என் புயங்கள் மக்களினங்கள்மேல் ஆட்சி செலுத்தும்;
என் கைவன்மைமீது அவை நம்பிக்கை கொள்ளும்.


6 வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்;
கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்;
ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்;
மண்ணுலகம் உடையென நைந்துபோம்;
அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்;
என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்;
என் விடுதலைக்கு முடிவே இராது.


7 நேர்மைதனை அறிந்தோரே,
என் சட்டத்தை இதயத்தே தாங்கும் மக்களினத்தாரே,
எனக்குச் செவி கொடுங்கள்;
மானிடரின் நிந்தைக்கு அஞ்சாதீர்கள்;
அவர்தம் இழிசொல் கேட்டுக் கலங்காதீர்கள்.


8 ஏனெனில், பொட்டுப்பூச்சி அவர்களை ஆடையெனத் தின்றழிக்கும்;
அரிப்புழு அவர்களை ஆட்டு மயிரென அரித்தொழிக்கும்;
நான் அளிக்கும் விடுதலையோ என்றென்றும் நிலைக்கும்;
நான் வழங்கும் மீட்போ தலைமுறைதோறும் நீடிக்கும்.


9 விழித்தெழு, விழித்தெழு,
ஆண்டவரின் புயமே,
ஆற்றலை அணிந்து கொள்;
பண்டைய நாள்களிலும்
முந்தைய தலைமுறைகளிலும் செய்ததுபோல் விழித்தெழு;
இராகாபைத் துண்டு துண்டாக வெட்டியதும்
பறவை நாகத்தை ஊடுறவக் குத்தியதும் நீ அன்றோ?


10 பேராழ நீர்த்திரளாம் கடலை வற்றச்செய்து,
ஆழ்பகுதிகளில் பாதை அமைத்து,
மீட்கப்பட்டோரை கடக்கச் செய்ததும் நீயே அன்றோ?


11 ஆண்டவரால் மீட்கப்பட்டோர் திரும்பி வருவர்;
மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர்;
முடிவில்லா மகிழ்ச்சி அவர்கள் தலைமேல் தங்கும்;
அக்களிப்பும் அகமகிழ்ச்சியும் அடைவர்;
துயரமும் பெருமூச்சும் ஒழிந்துபோம்.


12 உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்!
மடிந்து போகும் மனிதருக்கும்
புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்?


13 உன்னை உருவாக்கிய ஆண்டவரை நீ ஏன் மறந்துவிட்டாய்?
வானங்களை விரித்துப் பரப்பியவரும்,
மண்ணுலகிற்கு அடித்தளமிட்டவரும் அவர் அன்றோ?
உன்னை ஒடுக்கி அழித்துவிட முயன்றவன்
சீற்றத்தை முன்னிட்டு
நீ ஏன் எந்நாளும் ஓய்வின்றி நடுங்குகிறாய்?
உன்னை ஒடுக்கியவனின் சினம் எங்கே?


14 கூனிக் குறுகியவன் விரைவில் விடுதலை பெறுவான்;
அவன் குழியில் செத்து வீழ்வதில்லை;
அவனுக்கு உணவு இல்லாமல் போகாது.


15 உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!
கடலைக் கலக்கி அலைகளைக் கொந்தளிக்கச் செய்பவர் நானே!
"படைகளின் ஆண்டவர்" என்பது அவர்தம் பெயராம்!


16 நான் வானங்களை விரித்துப் பரப்பினேன்;
மண்ணுலகிற்கு அடித்தளம் அமைத்தேன்;
சீயோனை நோக்கி, "நீ என் மக்கள்" என்றேன்;
என் சொற்களை உன் நாவில் அருளினேன்;
என் கை நிழலில் உன்னை மறைத்துக்கொண்டேன்.

எருசலேமின் துன்பம் தீர்தல்[தொகு]


17 விழித்தெழு, விழித்தெழு,
ஆண்டவர் கையினின்று, சினக் கிண்ணத்தைக் குடித்தவளே,
மதியை மயக்கும் அக்கிண்ணத்தை
அடிமண்டிவரை குடித்தவளே,
எருசலேமே, எழுந்து நில். [*]


18 அவள் பெற்றெடுத்த புதல்வருள்
அவளுக்கு வழிகாட்டுவார் எவருமில்லை;
அவள் வளர்த்துவிட்ட ஆண் மக்களுள்
அவளுக்குக் கைகொடுப்பார் யாருமில்லை!


19 இருவகைத் தீங்குகள் உனக்கு நேரிட்டன,
உனக்காகப் புலம்பியழுபவன் எவன்?
வீழ்ச்சி - அழிவு, பஞ்சம் - வாள் இவை உன்னை வாட்டின;
யார் உன்னைத் தேற்றுவார்?


20 உன் பிள்ளைகள் மயக்கமுற்றனர்;
வலையில் சிக்கிய கலைமான் போல் அவர்கள்
ஒவ்வொரு தெருமுனையிலும் வீழ்ந்துகிடக்கின்றனர்;
ஆண்டவரின் சினத்திற்கும் உன் கடவுளின் கண்டிப்புக்கும் உள்ளாயினர்.


21 ஆதலால், சிறுமையுற்றவளே,
திராட்சை இரசம் இன்றியே குடிவெறி கொண்டவளே, இதைக் கேள்.


22 தம் மக்கள் சார்பாக வழக்காடும் உன் கடவுளாகிய ஆண்டவர்,
உன் தலைவர் கூறுவது இதுவே:
"இதோ, உன்னை மதிமயக்கும் கிண்ணத்தை
உன் கையினின்றும் அகற்றிவிட்டேன்;
என் சினக் கிண்ணத்தினின்று நீ இனிக் குடிக்கவே மாட்டாய்."


23 அக்கிண்ணத்தை உன்னை ஒடுக்கினோர் கையில் திணிப்பேன்;
"நாங்கள் கடந்து செல்வதற்கு நீ முகங்குப்புற விழுந்துகிட"
என்று அவர்கள் உன்னிடம் சொன்னார்களே!
உன் முதுகை அவர்கள் தரையாகவும்,
கடந்து செல்வோருக்குக்குத் தெருவாகவும் மாற்றினார்களே!


குறிப்பு

[*] 51:17 = திவெ 14:10; 16:19.


அதிகாரம் 52[தொகு]

எருசலேமின் மீட்பு[தொகு]


1 விழித்தெழு, விழித்தெழு, சீயோனே,
உன் ஆற்றலை அணிந்து கொள்;
திரு நகர் எருசலேமே,
உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்;
விருத்தசேதனம் செய்யாதவனும்
தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான். [1]


2 சிறைப்பட்ட எருசலேமே,
புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்;
அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே,
உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.


3 ஆண்டவர் கூறுவது இதுவே:
விலையின்றி விற்கப்பட்டீர்கள்;
பணமின்றி மீட்கப்படுவீர்கள்.
4 ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே:
முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்;
அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.
5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர்.
ஈட்டுத் தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்க்ள்.
அவர்களை ஆளுவோர் தற்பெருமை பேசுகின்றனர்;
எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது, என்கிறார் ஆண்டவர். [2]
6 ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள்.
இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை
அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்;
இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.


7 நற்செய்தியை அறிவிக்கவும்,
நல்வாழ்வைப் பலப்படுத்தவும்
நலம்தரும் செய்தியை உரைக்கவும்,
விடுதலையைப் பறைசாற்றவும்,
சீயோனை நோக்கி, 'உன் கடவுள் அரசாளுகின்றார்'
என்று கூறவும் வருவோனின் பாதங்கள்
மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! [3]


8 இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்;
அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்;
ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை
அவர்கள் தம் கண்களாலேயே காண்பர்.


9 எருசலேமின் பாழ் இடங்களே,
ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்;
ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்;
எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.


10 பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண
ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்;
மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.


11 திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்;
அங்கிருந்து வெளியேறுங்கள்;
தீட்டானதைத் தொடாதீர்கள்;
ஆண்டவரின் கலங்களை ஏந்திச் செல்வோரே,
அந்நாட்டினின்று வெளியேறுங்கள்;
உங்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். [4]


12 நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை;
தப்பியோடுவது போல் செல்வதுமில்லை;
ஏனெனில், ஆண்டவர் உங்கள்முன்னே செல்வார்;
இஸ்ரயேலின் கடவுள் உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.

துன்புறும் ஊழியர்[தொகு]


13 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்;
அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு,
பெரிதும் மாட்சியுறுவார்.


14 அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்;
அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால்
மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது;
மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.


15 அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை
அதிர்ச்சிக்குள்ளாக்குவார்;
அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்;
ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்;
தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர். [5]


குறிப்புகள்

[1] 52:1 = திவெ 21:2,27.
[2] 52:5 = உரோ 2:24.
[3] 52:7 = நாகூ 1:15; உரோ 10:15; எபே 6:15.
[4] 52:11 = 2 கொரி 6:17.
[5] 52:15 = உரோ 15:21.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 53 முதல் 54 வரை