திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எண்ணிக்கை (எண்ணாகமம்)/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
பிலயாமின் கழுதை பேசுகிறது. ஓவியர்: ரெம்ப்ராண்ட் (1606-1669).

எண்ணிக்கை[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

கானானியர்மேல் வெற்றி[தொகு]


1 இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்; அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான். [1]


2 உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, "நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அவர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன்" என்று கூறியது.
3 அவ்வாறே ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்; அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்; எனவே அந்த இடத்தின் பெயர் 'ஓர்மா' [2] என்று வழங்கியது.

வெண்கலப் பாம்பு[தொகு]


4 ஏதோம் நாட்டைச் சுற்றிப்போகும்படி ஓர் என்ற மலையிலிருந்து அவர்கள் 'செங்கடல் சாலை' வழியாகப் பயணப்பட்டனர்; அவ்வழியை முன்னிட்டு மக்கள் பொறுமையிழந்தனர். [3]
5 மக்கள் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசினர்: "இந்தப் பாலைநிலத்தில் மாளும்படி எங்களை எகிப்திலிருந்து கொண்டு வந்தது ஏன்? இங்கு உணவுமில்லை, தண்ணீருமில்லை, அற்பமான இந்த உணவு எங்களுக்கு வெறுத்துப் போய்விட்டது" என்றனர்.
6 உடனே ஆண்டவர் கொள்ளிவாய்ப் பாம்புகளை [ ] மக்களிடையே அனுப்பினார்; அவை கடிக்கவே இஸ்ரயேல் மக்களில் பலர் மாண்டனர். [4]
7 அப்போது மக்கள் மோசேயிடம் வந்து, "நாங்கள் பாவம் செய்துள்ளோம்; நாங்கள் ஆண்டவருக்கும் உமக்கும் எதிராகப் பேசியுள்ளோம்; அவர் இந்தப் பாம்புகளை அகற்றி விடும்படி நீர் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளும்" என்றனர். அவ்வாறே மோசே மக்களுக்காக மன்றாடினார்.
8 அப்போது ஆண்டவர் மோசேயிடம், "கொள்ளிவாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்" என்றார்.
9 அவ்வாறே மோசே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தினார்; பாம்பு கடித்த எந்த ஒரு மனிதனும் இந்த வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைப்பான். [5]

கோர் மலை முதல் மோவாபியர் பள்ளத்தாக்கு வரை[தொகு]


10 பின், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு ஓபோத்தில் பாளையம் இறங்கினர்.
11 அடுத்து ஓபோத்திலிருந்து பயணமாகிக் கதிரவன் உதயம் நோக்கி மோவாபுக்கு எதிரேயுள்ள பாலை நிலத்தில் இய்யா அபாரிமில் பாளையம் இறங்கினர்.
12 அங்கிருந்து அவர்கள் புறப்பட்டுச் செரத் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.
13 அங்கிருந்து அவர்கள் பயணமாகி அர்னோனுக்கு அப்பால் பாளையம் இறங்கினர்; அது எமோரியர் எல்லையிலிருந்து தொடங்கும் பாலைநிலத்தில் உள்ளது; அர்னோன் மோவாபுக்கும் எமோரிய நாட்டுக்குமிடையேயான மோவாபிய எல்லையாகும்.
14 'ஆண்டவரின் போர்கள்' என்ற நூல் இவ்வாறு கூறுகிறது: "சூப்பாவிலுள்ள வாகேபும் அர்னோன் சிற்றாறுகளும்,
15 ஆர் என்னும் பகுதியை நோக்கி விரிவதும் மோவாபு எல்லை மேல் சாய்வதுமான பள்ளத்தாக்குகளின் சரிவு ".
16 அங்கிருந்து தொடர்ந்து அவர்கள் பெயேருக்குச் சென்றனர். "மக்களை ஒன்றுகூட்டு; நான் அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன்" என்று ஆண்டவர் மோசேக்குக் கூறிய கிணறு இதுவே.


17 பின், இஸ்ரயேல் பாடிய பாடல்:


'ஊறிப் பெருகிடு கிணறே!
அதைப் புகழ்ந்து பாடுங்கள்;
18 இளவரசர்கள் செங்கோலால் அகழ்ந்த கிணறு இதுவே;
மேன்மக்கள் கோல்கொண்டு குடைந்த கிணறும் இதுவே.'


பின் பாலை நிலத்திலிருந்து அவர்கள் மத்தானாவுக்குச் சென்றனர்.
19 மத்தானாவிலிருந்து நகலியேலுக்குச் சென்றனர்; நகலியேலிலிருந்து பாமோத்துக்குச் சென்றனர்.
20 பாமோத்திலிருந்து பாலை நிலத்தை நோக்கி நிற்கும் பிஸ்காவின் கொடுமுடிக்கருகில் மோவாபு பகுதியில் இருந்த பள்ளத்தாக்குக்குச் சென்றனர்.

சீகோன், ஓகு மன்னர்களை வெல்லுதல்[தொகு]


21 இஸ்ரயேல் எமோரியர் மன்னன் சீகோனிடம் தூதர்களை அனுப்பிக் கூறியது:
22 "உம் நாடு வழியே நான் செல்ல அனுமதியும்; நாங்கள் வயல் பக்கமோ திராட்சைத் தோட்டப் பக்கமோ திரும்ப மாட்டோம்; நாங்கள் யாதொரு கிணற்றிலிருந்தும் தண்ணீர் குடிக்கவுமாட்டோம்; நாங்கள் உம் எல்லையைத் தாண்டும் வரை அரச நெடுஞ்சாலை வழியாகவே செல்வோம்."
23 ஆனால் தன் எல்லை வழியே இஸ்ரயேல் கடந்து செல்ல சீகோன் இடந்தரவில்லை. அவன் தன் ஆள்கள் எல்லாரையும் சேர்த்துக் கொண்டு இஸ்ரயேலுக்கு எதிராகப் பாலை நிலத்துக்குச் சென்றான்; யாகாசுக்கு வந்து இஸ்ரயேலை எதிர்த்துப் போரிட்டான்.
24 இஸ்ரயேல் வாள் முனையில் அவனைக் கொன்று அர்னோன் தொடங்கி அம்மோனியர் வரையுள்ள யாப்போகு மட்டும் அவன் நாட்டைக் கைப்பற்றியது; அம்மோனியர் எல்லை அரணாய் அமைந்திருந்தது.
25 இஸ்ரயேல் இந்த நகர்கள் அனைத்தையும் சொந்தமாக்கிக் கொண்டது; இஸ்ரயேல் எமோரியரின் அனைத்து நகர்களிலும் எஸ்போனிலும் அதன் எல்லாக் கிராமங்களிலும் குடியிருந்தது.
26 எஸ்போன் என்பது எமோரிய மன்னன் சீகோனின் நகர்; அவன் மோவாபின் முன்னைய மன்னனோடு போரிட்டு அவன் கையிலிருந்து அர்னோன் வரை இருந்த நாடு முழுவதையும் கைப்பற்றி இருந்தான்.
27 எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்:
"எஸ்போனுக்கு வாருங்கள்;
அது கட்டப்படட்டும்; சீகோன் நகர் நிறுவப்படட்டும்.
28 நெருப்பு, எஸ்போனிலிருந்தும் நெருப்புத் தழல் சீகோன் நகரிலிருந்தும் சென்றது;
அது மோவாபிலுள்ள அர் நகரையும் அர்னோன் மேடுகளிலுள்ள தலைவர்களையும் விழுங்கிவிட்டது.
29 மோவாபு! உனக்கு ஐயோ கேடு;
கெமொசின் மக்களே, உங்களுக்கு முடிவு வந்துவிட்டது;
எமோரிய அரசன் சீகோனுக்கு கெமோசின் காரணமாய் அவன் புதல்வர் புறங்காட்டி ஓடினர்;
அவன் புதல்வியர் சிறைக் கைதிகளாயினர்; [6]
30 எனவே எஸ்போன் முதல் தீபோன் வரை அழிந்தது;
மேதபா வரையுள்ள நோபுபாக்குப் பகுதியைப் பாழாக்கினோம்."


31 இவ்வாறு இஸ்ரயேல் எமோரியர் நாட்டில் தங்கிற்று.
32 பின்னர் யாசேரை உளவு பார்க்கும்படி மோசே ஆளனுப்பினார்; அவர்கள் அதன் கிராமங்களைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியரைத் துரத்தி விட்டனர்.
33 அதன் பிறகு அவர்கள் திரும்பிப் பாசான் நெடுஞ்சாலை வழியாகப் போனார்கள்; பாசான் மன்னன் ஓகு என்பவனும் அவன் மக்கள் அனைவரும், எதிரேயி என்னுமிடத்தில் போர் புரியும்படி அவர்களுக்கு எதிராக வந்தனர்.
34 ஆனால் ஆண்டவர் மோசேயிடம், "அவனுக்கு அஞ்ச வேண்டாம், நான் அவனையும் அவன் மக்கள் அனைவரையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்படைத்து விட்டேன்; நீ எஸ்போனில் வாழ்ந்த எமோரியர் மன்னன் சீகோனுக்குச் செய்தது போல இவனுக்கும் செய்வாய்" என்றார்.
35 அங்ஙனமே அவர்கள் அவனையும் அவன் புதல்வரையும் அவன் மக்கள் அனைவரையும் ஒருவர் கூட எஞ்சியிராதபடி கொன்றொழித்தனர்; அவன் நாட்டையும் அவர்கள் கைப்பற்றினர்.


குறிப்புகள்

[1] 21:1 = எண் 33:40.
[2] 21:3 எபிரேயத்தில் 'அழிவு' என்பது பொருள்.
[3] 21:4 = இச 2:1.
[4] 21:5-6 = 1 கொரி 10:9.
[5] 21:9 = 2 அர 18:4; யோவா 3:14.
[6] 21:28-29 = எரே 48:45-46.


அதிகாரம் 22[தொகு]

பிலயாமுக்காக மோவாபு மன்னன் ஆளனுப்புதல்[தொகு]


1 அதன் பின்னர் இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள்.
2 சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான்.
3 இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று; அம்மக்களைப் பற்றிய அச்சம் மோவாபை மேற்கொண்டது.
4 மோவாபு மிதியானின் மூப்பர்களிடம், "மாடு வயல்வெளியில் புல்லை வேரற மேய்வது போல் இக்கும்பலும் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மேய்ந்துவிடும்" என்று கூறிற்று. அச்சமயம் மோவாபிய மன்னன், சிப்போர் மகன் பாலாக்கு.
5 அவன் பெத்தோரைச் சார்ந்த பெகோரின் மகன் பிலயாமை அழைத்துவரத் தூதரை அனுப்பினான்; அந்த இடம் ஆமாபு நாட்டின் ஆற்றருகே இருந்தது. அவன் கூறியது: இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் எனக்கு எதரில் குடியேறியிருக்கிறார்கள். [*]
6 இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக இம்மக்களைச் சபித்துவிடும்; அவர்கள் என்னிலும் மிகவும் வலிமை மிக்கவராய் இருக்கின்றனர்; ஒரு வேளை நான் அவர்களை முறியடித்து நாட்டிலிருந்து துரத்தக்கூடும்; ஏனெனில், நீர் எவனுக்கு ஆசி வழங்குவீரோ அவன் ஆசிபெறுவான், நீர் எவனைச் சபிப்பீரோ அவன் சாபம் அடைவான் என்று நான் அறிவேன்.


7 அங்ஙனமே மோவாபு மூப்பரும் மிதியான் மூப்பரும் குறிசொல்வதற்கான கட்டணத்தையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போயினர். அவர்கள் பிலயாமிடம் வந்து பாலாக்கு அனுப்பிய செய்தியைச் சொன்னார்கள்.
8 அவர் அவர்களிடம், "இந்த இரவில் இங்குத் தங்கியிருங்கள்; ஆண்டவர் என்னோடு பேசுகிறபடி நான் உங்களுக்கு வார்த்தை தருவேன்" என்றார். அவ்வாறே மோவாபின் தலைவர்கள் பிலயாமுடன் தங்கினார்கள்.
9 கடவுள் பிலயாமிடம் வந்து, "உன்னோடிருக்கிற இந்த ஆள்கள் யார்?" என்று கேட்டார்.
10 பிலயாம் கடவுளிடம், "மோவாபின் மன்னனான சிப்போர் மகன் பாலாக்கு என்னிடம் அனுப்பியுள்ளான்;
11 'இதோ ஒரு மக்கள் கூட்டம் எகிப்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது; அவர்கள் நிலம் முழுவதையும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இப்போதே நீர் புறப்பட்டு வந்து எனக்காக அவர்களைச் சபித்துவிடும்; ஒரு வேளை நான் அவர்களுடன் போரிட்டு அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிடக்கூடும்' என்று கூறியனுப்பியுள்ளான்" என்றார்.


12 கடவுள் பிலயாமிடம், "நீ அவர்களோடு போக வேண்டாம்; அம்மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர்கள் ஆசி பெற்றோர்" என்று கூறினார்.
13 அப்படியே பிலயாம் காலையில் எழுந்து பாலாக்கு அனுப்பிய தலைவர்களிடம், "உங்கள் சொந்த நாட்டுக்குப் போங்கள்; நான் உங்களோடு வருவதற்கு ஆண்டவர் அனுமதி மறுத்துவிட்டார்" என்று சொன்னார்.
14 அதன்படி மோவாபின் தலைவர்கள் எழுந்து பாலாக்கிடம் போய், "பிலயாம் எங்களுடன் வர மறுக்கிறார்" என்றார்கள்.


15 மீண்டும் பாலாக்கு அவர்களைவிட மதிப்பில் உயர்ந்த இன்னும் பல தலைவர்களை அனுப்பினான்.
16 அவர்கள் பிலயாமிடம் வந்து, "சிப்போர் மகன் பாலாக்கு கூறுவது, "என்னிடம் நீர் வருவதைத் தடுக்க எதற்கும் இடம் கொடாதேயும் ;
17 உறுதியாக நான் உமக்கு மிகுந்த மரியாதை செய்வேன்; நீர் எனக்குச் சொல்லுவதையெல்லாம் நான் செய்வேன்; வாரும், இந்த மக்களை எனக்காகச் சபியும்" என்றனர்.
18 ஆனால் பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;
19 இன்றிரவு நீங்கள் தங்கிச் செல்லுங்கள்; ஆண்டவர் கூடுதலாக எனக்கு அறிவிக்கலாம்.


20 கடவுள் இரவில் பிலயாமிடம் வந்து அவரிடம், "இந்த ஆள்கள் உன்னை அழைக்க வந்தால் நீ எழுந்து அவர்களுடன் போ; ஆயினும் நான் சொல்வதை மட்டுமே நீ செய்ய வேண்டும்" என்றார்.
21 அங்ஙனமே பிலயாம் காலையில் எழுந்து தம் கழுதைக்குச் சேணங்கட்டி மோவாபின் தலைவர்களோடு போனார்.

பிலயாமும் அவர் கழுதையும்[தொகு]


22 ஆயினும், அவர் போனதை முன்னிட்டுக் கடவுளின் சினம் மூண்டது; ஆண்டவரின் தூதர் வழியிலே அவருக்கு எதிரியாக நின்றார். அப்போது அவர் தம் கழுதைமேல் ஏறித் தம் பணியாளர் இருவருடன் சென்று கொண்டிருந்தார்.
23 ஆண்டவரின் தூதர் கையில் உருவிய வாளுடன் பாதையில் நின்றுகொண்டிருப்பதைக் கழுதை கண்டது; எனவே கழுதை பாதையை விட்டு விலகி வயலுக்குள் சென்றது; பாதைக்கு அது திரும்பும்படி பிலயாம் கழுதையை அடித்தார்.
24 அடுத்து ஆண்டவரின் தூதர் திராட்சைத் தோட்டங்களிடையே இருபறமும் சுவர்களுள்ள ஒரு குறுகிய பாதையில் நின்றார்.
25 ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை சுவரில் முட்டிப் பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கியது; ஆதலால் அதை அவர் மறுபடியும் அடித்தார்.
26 பின் ஆண்டவரின் தூதர் முன்னதாகவே சென்று வலப்புறமோ இடப்புறமோ திரும்ப முடியாத ஒரு குறுகிய இடத்தில் நின்றார்.


27 ஆண்டவரின் தூதரைக் கண்ட கழுதை பிலயாமுக்கு அடியில் படுத்துக்கொண்டது; பிலயாம் சினம் கொண்டு தம் கோலால் கழுதையை அடித்தார்.
28 உடனே ஆண்டவர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது அவரிடம், "நீர் மூன்று முறை இவ்வாறு என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்?" என்றது.
29 பிலயாம் கழுதையிடம், "நீதான் என்னை ஏளனம் செய்து கொண்டிருக்கிறாய்; என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்தால் உன்னை இந்நேரம் கொன்றிருப்பேன்" என்றார்.
30 கழுதை பிலயாமிடம், "நான் உம் கழுதையன்றோ? இன்றுவரை உம் வாழ்நாளெல்லாம் என் மீது ஏறி வந்துள்ளீரே! எப்போதாவது நான் இப்படிச் செய்து பழக்கமுண்டா?" என்றது. அதற்கு அவர், "இல்லை" என்றார்.


31 ஆண்டவர் பிலயாமின் கண்களைத் திறந்தார். கையில் உருவிய வாளுடன் ஆண்டவரின் தூதர் பாதையில் நின்றுகொண்டிருப்பதை அவர் கண்டார்; அவர் தலை வணங்கி முகங்குப்புற விழுந்தார்.
32 ஆண்டவரின் தூதர் அவரிடம் கூறியது: "ஏன் மூன்று முறை இவ்வாறு கழுதையை அடித்தாய்? இதோ நான் உனக்கு எதிரியாக வந்திருக்கிறேன்; ஏனெனில் என் பார்வையில் உன் வழி தவறானது.
33 இந்தக் கழுதை என்னைக் கண்டு இந்த மூன்று முறையும் என் முன்னின்று திரும்பி விலகியது. அது என் முன்னின்று திரும்பி விலகாதிருந்தால் உறுதியாக இப்போதே உன்னை நான் கொன்று, அதை வாழ விட்டிருப்பேன்."
34 பிலயாம் ஆண்டவரின் தூதரிடம், "நான் பாவம் செய்துவிட்டேன்; நீர் பாதையிலே எனக்கு எதிராக நின்றதை நான் அறிந்து கொள்ளவில்லை; எனவே இப்போதும் இது உம் பார்வையில் தீயதாக இருப்பின் நான் திரும்பிப் போய்விடுகிறேன்" என்றார்.
35 ஆண்டவரின் தூதர் பிலயாமிடம், "இந்த ஆள்களுடன் நீ போ; ஆயினும் நான் சொல்லும் வார்த்தையை மட்டுமே நீ பேச வேண்டும்" என்றார். அவ்வாறே பிலயாம் பாலாக்கு அனுப்பிய தலைவர்களுடன் போனார்.

பாலாக்கு பிலயாமை வரவேற்றல்[தொகு]


36 பிலயாம் வந்திருப்பதைப் பாலாக்கு கேட்டதும் அவரைச் சந்திக்கும்படி அவன் மோவாபு நகருக்குப் புறப்பட்டுப்போனான்; அது அர்னோன் எல்லையின் இறுதியில் இருந்தது.
37 பாலாக்கு பிலயாமிடம், "நான் உம்மை அழைத்து வர ஆளனுப்பவில்லையா? பின்னர் ஏன் நீர் வரவில்லை? உமக்கு மரியாதை செய்ய நான் இயலாதவனோ?" என்று கேட்டான்.
38 பிலயாம் பாலாக்கிடம், "இதோ நான் உம்மிடம் வந்துள்ளேன்; நானாக எதையும் பேச இப்போது என்னால் இயலாதே! கடவுள் என் வாயில் வைக்கும் வார்த்தையாலேயே நான் பேச வேண்டும்" என்றார்.
39 அதன் பின் பிலயாம் பாலாக்குடன் போனார்; அவர்கள் கிர்யத்து குசோத்துக்கு வந்தனர்.
40 பாலாக்கு ஆடு மாடுகளைப் பலியிட்டு அவற்றிலிருந்து பிலயாமுக்கும் அவரோடிருந்த தன் அலுவலர்க்கும் கொடுத்தனுப்பினான்.

பிலயாமின் முதல் உரை[தொகு]

41 மறுநாள் பாலாக்கு பிலயாமை பாமோத்து பாகாலுக்குக் கூட்டிக் கொண்டு வந்தார்; அங்கிருந்து அவன் இஸ்ரயேல் மக்களில் மிகவும் அண்மையிலிருந்தோரைப் பார்த்தான்.


குறிப்பு

[*] 22:5 = எண் 31:8; 2 பேது 2:15-16; யூதா 11.


(தொடர்ச்சி): எண்ணிக்கை: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை