திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - முதல் நூல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
சாலமோன் அரசரின் "லெபனோனின் வனம்" என்ற அரண்மனையின் மாதிரி வரைவு. மூலம்: விவிலிய கலைக்களஞ்சியம். ஆண்டு: 1903.

1 அரசர்கள் (The First Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

சாலமோனின் அரண்மனை[தொகு]


1 சாலமோன் தம் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்கப் பதின்மூன்று ஆண்டுகள் ஆயின.
2 அவர் 'லெபனோனின் வனம்' எனப்பட்ட மாளிகையையும் கட்டினார். அதன் நீளம் நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம். நான்கு வரிசையாக கேதுருத் தூண்களை நிறுத்தி, அவற்றின் மேல் கேதுரு விட்டங்களைப் பொருத்தி அம்மாளிகையை அவர் கட்டினார்.
3 வரிசைக்குப் பதினைந்தாக நின்ற நாற்பத்தைந்து தூண்களின்மேல் அமைந்திருந்த அறைகள், கேதுரு மரங்களாலேயே மச்சுப் பாவபட்டிருந்தன. பலகணிகள் மூன்று வரிசையாக அமைந்திருந்தன.
4 மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.
5 எல்லா கதவுகளும் கதவு நிலைகளும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.


6 அவர் 'தூண்-மண்டபம்' ஒன்றும் கட்டினார். அதன் நீளம் ஐம்பது முழம்; அகலம் முப்பது முழம். அதற்கு முன் தூண்களும் விதானமும் கொண்ட வேறோரு மண்டபமும் அவர் அமைத்தார்.


7 நீதி வழங்குவதற்கென்று அரியணை மண்டபம் ஒன்றையும் கட்டினார். அது 'நீதி மண்டபம்' எனப்படும். அது தளம் முழுவதும் கேதுருப் பலகைகளால் பாவப் பெற்றிருந்தது.


8 இம்மண்டபத்திற்குப் பின்புறம் இருந்த முற்றத்தில், அவர் குடியிருப்பதற்காகக் கட்டிய அரண்மனையும் அதே வேலைப்பாடு கொண்டதாய் இருந்தது. சாலமோன் தாம் மணந்து கொண்ட பார்வோனின் மகளுக்கென்று அம்மண்டபத்தைப் போன்ற ஒரு மாளிகையையும் கட்டினார். [1]


9 இவையனைத்தும், அளவுக்கேற்ப இருபுறமும் வெட்டிச் செதுக்கிய விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டன. அடித்தளம் முதல் கூரை வரை, வெளிச்சுற்று முதல் பெரு முற்றம் வரை, இவ்வாறே செய்யப்பட்டன.
10 அடித்தளம் பத்து, எட்டு முழ அரிய பெரிய கற்களால் ஆனது.
11 அதன் மேல் அளவுக்கேற்பச் செதுக்கப் பெற்ற தரமான கற்களும் கேதுருப் பலகைகளும் பொருத்தப் பெற்றிருந்தன.
12 பெரு முற்றத்தைச் சுற்றிலும் இருந்த சுவர்கள் மூன்று வரிசை செதுக்கப் பெற்ற கற்களாலும், ஒரு வரிசை கேதுரு கட்டைகளாலும் அமைக்கப் பெற்றிருந்தன. ஆண்டவரின் இல்லத்தின் உள்முற்றமும் கோவிலின் முன்மண்டபமும் அவ்வாறே அமைக்கப்பெற்றிருந்தன.

சிறப்புச் சிற்பி ஈராம்[தொகு]


13 அரசர் சாலமோன் தீரிலிருந்து ஈராமை வரவழைத்திருந்தார்.
14 இவர் நப்தலி குலத்தைச் சார்ந்த ஒரு கைம்பெண்ணின் மகன். இவர் தந்தை தீர் நகரத்தவர்; வெண்கல வேலையில் கை தேர்ந்தவர். ஈராமும் எல்லா வகையான வெண்கல வேலையும் செய்யத்தக்க அறிவுக்கூர்மையும் நுண்ணறிவும் கைத்திறனும் கொண்டிருந்தார். இவர் அரசர் சாலமோனிம் வந்து அவர் இட்ட வேலையை எல்லாம் செய்தார்.

இரு வெண்கலத் தூண்கள்[தொகு]

(2 குறி 3:15-17)


15 அவர் இரண்டு வெண்கலத் தூண்களை வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை.
16 அத்தூண்களின் உச்சியல் வைப்பதற்கென்று வெண்கலத்தால் இரு போதிகைகள் வார்த்தார். ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம்.


17 அவர் அவ்விரு தூண்களின் மேல் இருந்த போதிகைகளுக்கென வலைப்பின்னல்களும் சங்கிலித் தொங்கல்களும் ஏழேழு செய்தார்.
18 மேலும் அவர் இரண்டு வரிசை மாதுளம் பழ வடிவங்கள் செய்து அவற்றைத் தூணின் உச்சியிலுள்ள போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலின் மேல் இரு வரிசையாக அமைத்தார்; மற்றதற்கும் அவ்வாறே செய்தார்.
19 முன்மண்டபத் தூண்களின் உச்சியில் இருந்த போதிகைகள் அல்லி மலர் வடிவாய் இருந்தன. அவற்றின் உயரம் நான்கு முழம்.
20 மேலும் தூண்களின் மேலுள்ள போதிகைகளின் பின்னல்களை ஒட்டிப் புடைத்திருந்த பகுதிகளைச் சுற்றிலும் தூணுக்கு இருநூறு மாதுளம் பழ வடிவங்கள் இரண்டு வரிசையில் இருந்தன.
21 இவ்விரு தூண்களையும் தூயகத்தின் முன்மண்டபத்தின் முன் அவர் நாட்டினார். அவர் தென்புறம் நாட்டிய தூணுக்கு 'யாக்கின்' என்றும் வடபுறம் நாட்டிய தூணுக்குப் 'போவாசு' என்றும் பெயரிட்டார்.
22 தூண்களின் உச்சியில் அல்லி மலர் வேலைப்பாடு இருந்தது. இவ்வாறு தூண்களின் வேலைப்பாடு முடிவுற்றது.

வார்ப்புக் கடல்[தொகு]

(2 குறி 4:2-5)


23 அவர் 'வார்ப்புக்கடல்' அமைத்தார். அது வட்ட வடிவமாய் இருந்தது. அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.
24 அதன் விளிம்பைச் சுற்றிலும் கீழே முழத்திற்குப் பத்தாக மொக்கு வடிவங்கள் செய்யப்பட்டிருந்தன. இரு வரிசையில் இருந்த மொக்குகளும் அந்த வார்ப்புக் கடலோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தன.
25 அது பன்னிரு காளை வடிவங்களின்மேல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கி இருந்தன. அவற்றின்மேல் வார்ப்புக்கடல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் பின்புறங்கள் உள்நோக்கி இருந்தன.
26 வார்ப்புக் கடலின் கன அளவு நான்கு விரற்கடை; அதன் விளிம்பு பானையின் விளிம்பைப் போலவும் அல்லி மலரைப் போலவும் விரிந்து இருந்தது. அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் கொள்ளும்.

வெண்கலத் தள்ளுவண்டிகள்[தொகு]


27 மேலும் அவர் பத்து வெண்கலத் தள்ளுவண்டிகளைச் செய்தார். ஒவ்வொரு வண்டியும் நான்கு முழ நீளமும், நான்கு முழ அகலமும், மூன்று முழ உயரமும் கொண்டது.
28 வண்டிகளின் அமைப்பு பின்வருமாறு: அவற்றுக்குக் குறுக்குக் கம்பிகள் இருந்தன. அவை சட்டங்களின் மேல் இணைக்கப்பட்டிருந்தன.
29 சட்டங்களில் இணைக்கப் பெற்றிருந்த கம்பிகளின்மேல் சிங்கங்கள், காளைகள், கெருபுகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் மேலும் கீழும், சட்டங்களின் மேல் கைவினைத் தோரணங்கள் இருந்தன.
30 ஒவ்வொரு வண்டிக்கும் நான்கு வெண்கலச் சக்கரங்களும், வெண்கல அச்சுகளும், அதன் நான்கு மூலைகளிலும் தொட்டியைத் தாங்க நான்கு முட்டுகளும் இருந்தன. அந்த முட்டுகள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் தோரணங்கள் பதிக்கப் பெற்றிருந்தன.
31 அதன் வாய்ப்பகுதி ஒரு வளையத்தினுள் ஒரு முழ உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது வட்டமாகவும், ஒன்றரை முழ ஆழம் உடையதாகவும் ஒரு தாங்கியைப் போல் செய்யப்பட்டிருந்தது. வாய்ப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இருந்தன. அதன் குறுக்குக் கம்பிகள் வட்டமாக இல்லாமல், சதுரமாக அமைக்கப்பட்டிருந்தன.
32 நான்கு சக்கரங்களும் குறுக்குக் கம்பிகளின் கீழே இருந்தன. சக்கரங்களின் அச்சுகள், வண்டியுடன் ஒரே வார்ப்பாய் இருந்தன. சக்கரங்களின் உயரம் ஒன்றரை முழம்.
33 சக்கரங்கள் தேர்ச்சக்கரங்கள் போல் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் அச்சுகள், வட்டைகள், ஆரக்கால்கள், குடங்கள் ஆகியவை வார்ப்பால் ஆனவை.


34 வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு பிடிகள் இருந்தன.
35 அவையும் வண்டியும் ஒரே வார்ப்பாய் இருந்தன. ஒவ்வொரு வண்டியின் மேற்பகுதியிலும் அரை முழ உயரமான வட்ட விளிம்பு இருந்தது. வண்டியின் மேற்பகுதியில் அதன் பிடிகளும் குறுக்குக் கம்பிகளும் ஒரே வார்ப்பாய் இருந்தன.
36 அதன் பிடிகள், குறுக்குக் கம்பிகள் ஆகியவற்றின் மேல் கெருபுகள், சிங்கங்கள், ஈச்ச மரங்கள் ஆகியவற்றை அவற்றுக்குரிய இடத்தில் சுற்றுத் தோரணங்களோடு அவர் செதுக்கினார். இவ்வாறு பத்து வண்டிகள் செய்தார்.
37 இதே முறையில் பத்து வண்டிகளையும் அவர் செய்தார்; அவை யாவும் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரே வடிவமும் கொண்டனவாய் இருந்தன.


38 அவர் பத்து வெண்கலத் தொட்டிகளைச் செய்தார். ஒவ்வொரு தொட்டியும் நாற்பது குடம் கொள்ளும். ஒவ்வொன்றின் அகலமும் நான்கு முழம், வண்டிக்கு ஒரு தொட்டியாக பத்து வண்டிகளிலும் தொட்டிகள் இருந்தன. [2]
39 அவர் ஐந்து வண்டிகளைக் கோவிலின் தென்புறத்திலும் ஐந்து வண்டிகளைக் கோவிலின் வடபுறத்திலும் நிறுத்தினார். ஆனால் வார்ப்புக் கடலைத் தென்கிழக்கு மூலையில் வைத்தார்.

திருக்கோவிலுக்கான பொருள்களின் பட்டியல்[தொகு]

(2 குறி 4:11-5:1)


40 பின்னர் கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றை ஈராம் செய்தார். ஆண்டவரின் இல்லத்திற்காக அரசர் சாலமோன் பணித்தபடி ஈராம் செய்து முடித்த அனைத்துப் பணிகள்:
41 இரு தூண்கள், தூண்களின் உச்சியில் வைக்க இரு கிண்ணப் போதிகைகள்; அவற்றை மூட இரு வலைப் பின்னல்கள்;
42 நானூறு மாதுளம் பழ வடிவங்கள். இவை ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும், இரு வரிசைகளாக அமைக்கப்பட்டுத் தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணப் போதிகைகளை மூடியிருந்தன.
43 பத்து வண்டிகள், அவற்றின் மேல் வைக்கப் பத்துத் தொட்டிகள்.
44 'வார்ப்புக் கடல்' ஒன்று; அதைத் தாங்கப் பன்னிரு காளை வடிவங்கள்.


45 கொப்பரைகள், கரண்டிகள், கிண்ணங்கள். அரசர் சாலமோன் கட்டளைப்படி ஆண்டவரின் இல்லத்திற்காக ஈராம் செய்த துணைக் கலன்கள் எல்லாம் பளபளக்கும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன.
46 அரசர் இவற்றை யோர்தானுக்கடுத்த சமவெளியில் சுக்கோத்துக்கும் சாரத்தானுக்கும் நடுவேயுள்ள களிமண் களத்தில் வார்ப்பித்தார்.
47 இந்தத் துணைக்கலன்கள் ஏராளமாய் இருந்தமையால், சாலமோன் அவற்றை எடை பார்க்கவில்லை. வெண்கலத்தின் எடையும் கணிக்கப்படவில்லை.


48 மேலும் சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகப் பின்வரும் பொருள்கள் அனைத்தையும் செய்தார்: பொன் பலிபீடம், திருமுன்னிலை அப்பத்திற்கான பொன் மேசை; [3]
49 கருவறையின் முன்னே, தென்புறம் ஐந்தும் வடபுறம் ஐந்துமாக வைக்க, பசும்பொன் விளக்குத் தண்டுகள்; பொன்னாலான மலர் வடிவங்கள், அகல்கள், குறடுகள்; [4]
50 பசும் பொன்னாலான மலர்க் குவளைகள், அணைப்பான்கள், கிண்ணங்கள், தட்டுகள், தீச்சட்டிகள்; உட்கோவிலின் திருத்தூயகத்தின் கதவுகளுக்கும் கோவிலின் தூயகத்தின் கதவுகளுக்கும் வேண்டிய பொன் முளைகள்.


51 இவ்வாறு, அரசர் சாலமோன் ஆண்டவரின் இல்லத்திற்காகச் செய்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. மேலும் சாலமோன் தம் தந்தை தாவீது அர்ப்பணித்திருந்த வெள்ளி, பொன், துணைக்கலன்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆண்டவரின் இல்லத்துக் கருவூலத்தில் வைத்தார். [5]

குறிப்புகள்

[1] 7:8 = 1 அர 3:1.
[2] 7:38 = விப 30:17-21.
[3] 7:48 = விப 25:23-30; 30:1-3.
[4] 7:49 = விப 25:31-40.
[5] 7:51 = 2 சாமு 8:11; 1 குறி 18:11.

அதிகாரம் 8[தொகு]

உடன்படிக்கைப் பேழை திருக்கோவிலுக்குக் கொண்டுவரப்படல்[தொகு]

(2 குறி 5:2-6:2)


1 பின்னர், சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தலைவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார். [1]
2 அதற்கிணங்க, அவர்கள் அனைவரும் ஏழாம் மாதமாகிய 'ஏத்தானிம்' மாதத்தின் பண்டிகையின் போது, அரசர் சாலமோன் முன் கூடினர். [2]
3 இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் வந்தனர். குருக்கள் பேழையைத் தூக்கிக் கொண்டனர்.
4 ஆண்டவரின் பேழை, சந்திப்புக் கூடாரம், கூடாரத்தின் தூய கலன்கள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் சுமந்துசென்றனர்.
5 அரசர் சாலமோனும், அவரிடம் வந்து குழுமிய இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும், எண்ணவோ கணக்கிடவோ முடியாத அளவு திரளான ஆடுகளையும் மாடுகளையும் பேழைக்கு முன்னால் பலியிட்டனர்.
6 பின்னர், குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைக் கோவில் கருவறையாகிய திருத்தூயகத்தில் அதற்குரிய இடத்தில் கெருபுகளின் இறக்கைகளின் கீழே கொண்டு வந்து வைத்தனர்.
7 அக்கெருபுகள் பேழை இருக்கும் இடத்தில் தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, பேழையையும், அதன் தண்டுகளையும் மூடியவாறு இருந்தன.
8 தண்டுகள் நீளமாய் இருந்ததால், அவற்றின் முனைகள் கருவறைக்கு முன்னுள்ள தூயகத்திலிருந்து காணக் கூடியவையாய் இருந்தன; ஆனால், வெளியினின்று தெரியாது. இன்றுவரை அந்தத் தண்டுகள் அங்கேதான் இருக்கின்றன.
9 இரு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் பேழைக்குள் இல்லை; இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறியபொழுது அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட ஓரேபு மலையில் மோசே அதற்குள் வைத்தவை அவை. [3]


10 குருக்கள் தூயகத்தினின்று வெளியே வருகையில் ஒரு மேகம் ஆண்டவரின் இல்லத்தை நிரப்பிற்று.
11 அம்மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்க இயலவில்லை. ஏனெனில் ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பிற்று. [4]
12 அப்பொழுது சாலமோன், "ஆண்டவரே! நீர் கரிய மேகத்தில் உறைவதாகக் கூறினீர். [5]
13 நீர் என்றென்னும் தங்கி வாழ உயர் இல்லம் ஒன்றை உமக்காக நான் கட்டியுள்ளேன்" என்றார்.

சாலமோன் மக்களை நோக்கிக் கூறல்[தொகு]

(2 குறி 6:3-11)


14 பின்னர் அரசர் மக்கள் பக்கம் திரும்பி, இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கினார். அப்பொழுது இஸ்ரயேல் சபையார் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
15 அப்போது அவர் உரைத்தது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் என் தந்தை தாவீதுக்கு வாயால் உரைத்ததைக் கையால் செய்து முடித்தார்.
16 'என் மக்களாகிய இஸ்ரயேலை எகிப்திலிருந்து அழைத்து வந்த நாள் முதல் இன்றுவரை, என் பெயர் விளங்கும்படி ஒரு கோவிலைக் கட்டுவதற்காக, இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்குச் சொந்தமான எந்த நகரையும் நான் தேர்ந்து கொள்ளவில்லை. ஆனால் தாவீதாகிய உன்னை என் மக்களாகிய இஸ்ரயேலை ஆளும்படி தேர்ந்து கொண்டேன்.' [6]
17 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் என் தந்தை தாவீதின் உள்ளத்தில் இருந்தது.
18 ஆயினும் ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, 'என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் உள்ளத்தில் இருக்கிறது. அது நல்லதுதான், [7]
19 ஆயினும் நீ அக்கோவிலைக் கட்டபோவதில்லை. உனக்குப் பிறக்கும் உன் மகனே என் பெயருக்கு அக்கோவிலைக் கட்டுவான்' என்றார். [8]
20 இவ்வாறு, ஆண்டவர் தாம் உரைத்த வாக்கை இப்போது நிறைவேற்றியுள்ளார். ஆண்டவர் சொன்னடியே நான் என் தந்தை தாவீதின் இடத்திற்கு உயர்ந்து, இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்துள்ளேன். மேலும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு இந்தக் கோவிலையும் கட்டியுள்ளேன்.
21 இதனுள் ஆண்டவர் நம் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த போது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை வைக்க, ஒரு தனி இடத்தையும் ஏற்பாடு செய்துள்ளேன்."

சாலமோனின் மன்றாட்டு[தொகு]

(2 குறி 6:12-42)


22 பின்னர், சாலமோன் ஆண்டவரின் பலிபீடத்தை நோக்கி நின்று கொண்டு, இஸ்ரயேல் சபையார் அனைவர் முன்னிலையில் வானத்திற்கு நேரே தம் கைகளை உயர்த்தி
23 அவர் மன்றாடியது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை. உமது முன்னிலையில் முழு உள்ளத்தோடு உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் உம்முடைய அடியார்க்கு உமது உடன்படிக்கையின்படி தவறாது பேரன்பு காட்டி வருகிறீர்.
24 நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு உரைத்ததை நிறைவேற்றினீர். அன்று உம் வாயால் உரைத்ததை இன்று கையால் செய்து முடித்தீர்.
25 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதை நோக்கி, 'நீ என்னை மறவாமல் நடந்து கொண்டதுபோல் உன் பிள்ளைகள் என்னை மறவாது தக்க நெறியில் நடப்பார்களேயாகில், இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க அவர்களுள் ஒருவன் இல்லாமல் போகமாட்டான்" என்று சொன்னதை நிறைவேற்றும்! [9]
26 இஸ்ரயேலின் கடவுளே! உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு நீர் சொன்ன உமது வார்த்தை நிலை பெறுவதாக!


27 கடவுள் உண்மையில் இந்த மண்ணுலகில் தங்கியிருப்பாரா? வானமும் வான மண்டலங்களும் உம்மைக் கொள்ள இயலாதிருக்க நான் கட்டியுள்ள இக்கோவில் எப்படி உம்மைக் கொள்ளும்? [10]
28 என் கடவுளாகிய ஆண்டவரே! உம் அடியான் செய்கிற வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டருளும்; உம் அடியான் இன்று உம் முன்னிலையில் எழுப்பும் கூக்குரலுக்கும் செய்யும் வேண்டுதலுக்கும் செவிசாய்த்தருளும்!
29 'என் பெயர் இவ்விடத்தில் விளங்கும்' என்று இக்கோவிலைப் பற்றி நீர் சொல்லியிருக்கிறீர்! இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக! [11]
30 உம் அடியானின் விண்ணப்பத்திற்கும் இவ்விடத்தை நோக்கிச் செய்கிற உம் மக்கள் இஸ்ரயேலர் வேண்டுதலுக்கும் செவிசாய்ப்பீராக! உமது உறைவிடமாகிய விண்ணகத்திலிருந்து கேட்டு அருள்வீராக! கேட்டு மன்னிப்பு அருள்வீராக!
31 ஒருவர் தமக்கு அடுத்திருப்பவர்க்கு எதிராகப் பாவம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இந்தக் கோவிலில் உமது பீடத்தின் முன் ஆணையிடுமாறு கொண்டு வரப்பட்டால்,
32 விண்ணிலிருந்து நீர் அதைக் கேட்டுச் செயல்பட்டு உமது அடியாருக்குத் தீர்ப்பு வழங்குவீராக! தீயவரை தீயவராகக் கணித்து, அதற்குரிய பழியை அவர் தலைமேல் சுமத்துவீராக! நேர்மையானவருக்கு அவரது நேர்மைக்குத் தக்கவாறு, அவர் நேர்மையாளர் எனத் தீர்ப்பளிப்பீராக!


33 உம் மக்களாகிய இஸ்ரயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததனால், எதிரியிடம் தோல்வியுற்றுப் பின் உம்மிடம் திரும்பி வந்து, உம் திருப்பெயரை ஏற்றுக்கொண்டு, இக்கோவிலில் உம்மை நோக்கி வேண்டுதலையும், விண்ணப்பத்தையும் செய்தால்,
34 விண்ணிலிருந்து நீர் அவர்களுக்கு செவிசாய்த்து உம் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் மூதாதையர்க்கென நீர் அளித்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பி வரச் செய்வீராக!
35 அவர்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்ததனால், வானம் அடைப்பட்டு மழை பெய்யாதிருக்கும்போது அவர்கள் இவ்விடத்தை நோக்கி வேண்டுதல் செய்து, உம் பெயரை ஏற்றுக் கொண்டு, நீர் அனுப்பும் துன்பத்தினால் பாவம் செய்வதிலிருந்து மனம் மாறினால்,


36 விண்ணிலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் அடியாரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரும் செய்த பாவத்தை மன்னிப்பீராக! அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குக் காட்டுவீராக! நீர் உம் மக்களுக்கு உரிமைச் சொத்தாக அளித்த நாட்டில் மழை பொழியச் செய்வீராக!
37 நாட்டில் பஞ்சம், கொள்ளை நோய் உண்டாகும் போதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, தத்துக்கிளி ஆகியவற்றால் பயிர் அழிவுறும் போதும், நாட்டின் எந்த நகரையாவது எதிரிகள் முற்றுகையிடும் போதும், கொள்ளை நோயோ வேறெந்த நோயோ வரும் போதும்,
38 உம் மக்களாகிய இஸ்ரயேலருள் யாராவது மனம் நொந்து, இக்கோவிலை நோக்கித் தம் கைகளை உயர்த்திச் செய்யும் எல்லா வேண்டுதலுக்கும், விண்ணப்பத்திற்கும்,
39 உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் செவி சாய்த்து மன்னிப்பீராக! ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறியும் நீர் அவரவர் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பீராக! ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மானிடரின் உள்ளங்களையும் அறிபவர்.
40 இதனால் அவர்கள் தங்கள் மூதாதையருக்கு நீர் அளித்த நாட்டில் தம் வாழ்நாள் எல்லாம் உமக்கு அஞ்சி நடப்பார்கள்.


41 இஸ்ரயேல் மக்களைச் சாராத அன்னியர் ஒருவர் உமது பெயரை முன்னிட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து,
42 மாண்புமிக்க உமது பெயரையும், வலிமை வாய்ந்த உமது கையையும், ஆற்றல் மிகுந்த உமது புயத்தையும் பற்றிக் கேள்விப்பட்டு வந்து, இந்தக் கோவிலை நோக்கி வேண்டுதல் செய்தால்,
43 உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவி சாய்த்து அந்த அன்னியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால் உலகின் மக்கள் எல்லோரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரைப் போல், உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள். மேலும் நான் எழுப்பியுள்ள இக்கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள்.
44 உம் மக்கள் தங்கள் பகைவர்களோடு போரிடச் செல்லும் பொழுது, நீர் காட்டும் வழியில் அவர்கள் செல்கையில் நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும் உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இக்கோவிலையும் நோக்கி ஆண்டவராகிய உம்மிடம் வேண்டினால்,
45 விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக!
46 அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தால் - பாவம் செய்யாத மனிதர் ஒருவருமில்லை - நீர் அவர்கள்மேல் சினம் கொண்டு அவர்களை எதிரிகளிடம் ஒப்படைக்க, அவர்கள் தொலையிலோ அருகிலோ இருக்கும் எதிரியின் நாட்டுக்குக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டால்,
47 அப்படிக் கொண்டு செல்லப்பட்ட நாட்டில் உணர்வு பெற்று, மனம் மாறி 'நாங்கள் பாவம் செய்தோம்; நெறி தவறினோம்; தீய வழியில் நடந்தோம்' என்று விண்ணப்பம் செய்தால்,
48 தங்களைக் கைதிகளாகக் கொண்டுசென்ற பகைவரின் நாட்டில் தங்கள் முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உம்மிடம் திரும்பி வந்து, நீர் அவர்கள் மூதாதையர்க்கு அளித்த தங்கள் நாட்டையும், நீர் தேர்ந்து கொண்ட இந்நகரையும், உமது பெயருக்கு நான் கட்டியுள்ள இந்தக் கோவிலையும் நோக்கி நின்று, உம்மிடம் வேண்டுதல் செய்தால்,


49 உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களுடைய வேண்டுதலுக்கும் விண்ணப்பத்திற்கும் செவிசாய்த்து அவர்களுக்கு நீதி வழங்குவீராக! உமக்கு எதிராகப் பாவம் செய்த உம் மக்களை மன்னிப்பீராக! உமக்கு எதிராக அவர்கள் செய்த எல்லாத் தவறுகளையும் மன்னிப்பீராக!
50 அவர்களைக் கைதிகளாகக் கொண்டு சென்றவர்களின் பார்வையில் நீர் அவர்களுக்குக் கருணை காட்டும்! இதனால் அவர்களும் உம் மக்களுக்குக் கருணை காட்டுவார்களாக!
51 ஏனெனில் அவர்கள் உம்முடையவர்கள், உமது உரிமைச் சொத்து. அவர்களை எகிப்து என்ற இரும்பு உலைக்களத்தினின்று நீர் அழைத்து வந்தீர்!


52 உம் அடியானின் விண்ணப்பத்திற்கும், உம் மக்களாகிய இஸ்ரயேலரின் விண்ணப்பத்திற்கும், அவர்கள் உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம் நீர் உம் அவர்களுக்குச் செவிசாய்க்கும்படி உம் கண்கள் திறந்திருப்பதாக!
53 ஏனெனில், என் தலைவராகிய ஆண்டவரே! நீர் எம் மூதாதையரை எகிப்திலிருந்து அழைத்து வந்தபோது, உம் ஊழியர் மோசேயைக் கொண்டு நீர் சொன்னபடியே செய்திருக்கிறீர்! உமது உரிமைச் சொத்தாக இருக்குமாறு, உலகின் எல்லா இனத்தவரிடமிருந்தும் அவர்களையே நீர் பிரித்தெடுத்தீர்!"


54 இவ்வாறு சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு ஆண்டவரிடம் இந்த வேண்டுதல், விண்ணப்பத்தை எல்லாம் சொல்லி, மன்றாடினார். வேண்டி முடித்தபின் ஆண்டவரது பலிபீடத்தின்முன் எழுந்துநின்றார்.
55 மேலும் அவர் இஸ்ரயேல் சபையார் அனைவருக்கும் ஆசி வழங்கி உரத்த குரலில் சொன்னது:
56 "தாம் வாக்களித்தபடியெல்லாம் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு அமைதியை அருளிய ஆண்டவர் போற்றி! போற்றி! அவர் தம் ஊழியர் மோசேயின் மூலம் கொடுத்த நல்வாக்குகள் அனைத்தும் நிறைவேறின; ஒன்றேனும் பொய்க்கவில்லை. [12]
57 நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரோடு இருந்தது போல, நம்மோடும் இருப்பாராக! நம்மைக் கைவிடாமலும் நம்மை விட்டுப் பிரியாமலும் இருப்பாராக!
58 நம் மூதாதையருக்கு அவர் கொடுத்த விதிமுறைகளையும், நியமங்களையும், நீதிச் சட்டங்களையும் நாமும் கடைப்பிடித்து, அவர் வகுத்த வழிகளிலெல்லாம் நடக்கும் வண்ணம், நம் உள்ளங்களைத் தம் பக்கம் ஈர்ப்பாராக!
59 ஆண்டவர் முன்னிலையில் நான் செய்த இவ்விண்ணப்பம் இரவும் பகலும் நம் கடவுளாகிய ஆண்டவர் அருகில் இருப்பதாக! அவர் அடியேனுக்கும் நம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் நாள்தோறும் தேவைக்கேற்ப நீதி வழங்குவாராக!
60 'ஆண்டவரே! கடவுள்; வேறு எவரும் இல்லை' என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக!
61 நீங்களும் இன்றுபோல் அவருடைய நியமங்களின்படி நடக்கவும், விதி முறைகளைக் கடைப்பிடிக்கவும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உங்கள் உள்ளம் முற்றிலும் பணிந்திருப்பதாக!"

திருக்கோவிலின் அர்ப்பணம்[தொகு]

(2 குறி 7:4-10)


62 பின்பு அரசரும் அவருடன் இருந்த இஸ்ரயேலர் அனைவரும் ஆண்டவர் முன்னிலையில் பலி செலுத்தினர்.
63 சாலமோன் ஆண்டவர் முன்னிலையில் இருபத்திரண்டாயிரம் காளைகளையும், ஓர் இலட்சத்து இருபதினாயிரம் ஆடுகளையும் நல்லுறவுப் பலியாகச் செலுத்தினார். இவ்வாறு செய்து, அரசரும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர்.
64 ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் மிகச் சிறியதாய் இருந்தது. எனவே அரசர் ஆண்டவரது இல்லத்தின் முன்னேயுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை இந்த நாளன்று திருநிலைப்படுத்தி அங்கே எரிபலிகளையும் உணவுப் படையல்களையும் நல்லுறவுப்பலிகளின் கொழுப்பையும் படைத்தார்.
65 அந்த நாள்களில் சாலமோனும் இலெபோயாமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் ஓடை வரையுள்ள பகுதிகளிலிருந்து வந்த இஸ்ரயேல் சபையார் அனைவரும், அவரோடு சேர்ந்து ஆண்டவர் முன்னிலையில் விழாக்கொண்டாடினர். இந்த விழா ஏழு நாள்கள் [13] கொண்டாடப்பட்டது.


66 எட்டாம் நாளன்று அவர் மக்களை அனுப்பி வைத்தார். அவர்கள் அரசரை வாழ்த்தி ஆண்டவர் தம் அடியார் தாவீதுக்கும் தம் மக்கள் இஸ்ரயேலருக்கும் செய்தருளிய எல்லா நன்மைகளையும் நினைத்து மகிழ்ச்சியோடும் உள்ளத்து உவகையோடும் தம் இல்லங்களுக்குத் திரும்பினார்கள்.

குறிப்புகள்

[1] 8:1 = 2 சாமு 6:12-16; 1 குறி 15:25-29.
[2] 8:2 = லேவி 23:24.
[3] 8:9 = இச 10:5.
[4] 8:10-11 = விப 40:34-35.
[5] 8:12 = திபா 18:11; 97:2.
[6] 8:16 = 2 சாமு 7:4-11; 1 குறி 17:3-10.
[7] 8:17-18 = 2 சாமு 7:1-3; 1 குறி 17:1-2.
[8] 8:19 = 2 சாமு 7:12-13; 1 குறி 17:11-12.
[9] 8:25 = 1 அர 2:4.
[10] 8:27 = 2 குறி 2:6.
[11] 8:29 = இச 12:11.
[12] 8:56 = இச 12:10; யோசு 21:44-45.
[13] 8:65 'இன்னும் ஏழு நாள்கள்; மொத்தம் பதினான்கு நாள்கள்' என்பது எபிரேய பாடம்.


(தொடர்ச்சி): அரசர்கள் - முதல் நூல்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை