திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசேக்கியேல்/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆதலால் நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அவர்களுக்கு நான் வேறோர் இதயத்தையும் புதியதோர் ஆவியையும் வழங்குவேன். கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து விட்டு, சதையாலான இதயத்தை அருளுவேன்." - எசேக்கியேல் 11:17,19

எசேக்கியேல் (The Book of Ezekiel)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

எருசலேம் தண்டனைத் தீர்ப்புப் பெறல்[தொகு]


1 பின்னர் ஆவி என்னைத் தூக்கி
ஆண்டவரது இல்லத்தின் கிழக்கு நோக்கி இருக்கும்
கீழை வாயிலுக்குக் கொண்டுவந்தது.
அவ்வாயிற்பகுதியில் இருபத்தைந்து பேர் இருந்தனர்.
அவர்கள் நடுவே மக்கள் தலைவர்களான
அசூரின் மகன் யாசனியாவையும்
பெனாயாவின் மகன் பெலற்றியாவையும் கண்டேன்.
2 அவர் என்னை நோக்கி,
"மானிடா! இந்நகரில் கெடுதலானவற்றைத் திட்டமிடுபவர்களும்
தீய அறிவுரை கூறுபவர்களும் இவர்களே.
3 'வீடுகட்டும் காலம் அருகில் உள்ளது அன்றோ!
இந்நகர் ஒரு பாண்டம், நாமோ இறைச்சி' என அவர்கள் சொல்கிறார்கள்.
4 ஆகவே, அவர்களுக்கெதிராக இறைவாக்குரை!
மானிடா! இறைவாக்கு உரை!" என்றார்.
5 அப்போது ஆண்டவரது ஆவி என்மீது இறங்கியது.
ஆண்டவர் என்னிடம் கூறியது:
"நீ சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே:
இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் இவ்வாறெல்லாம் எண்ணுகிறீர்கள்.
உங்கள் உள்ளத்தில் உள்ளதை நான் அறிவேன்.
6 நீங்கள் இந்நகரில் பலரைக் கொலை செய்துள்ளீர்கள்.
இதன் தெருக்களைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள்.
7 ஆகையால், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
"உங்களால் கொலை செய்யப்பட்டு
இதனுள் போடப்பட்டவர்கள்தான் இறைச்சி;
இந்நகர் ஒரு பாண்டம்.
உங்களையோ நான் இதனுள்ளிருந்து வெளியேற்றுவேன்.
8 வாளுக்கு நீங்கள் அஞ்சினீர்கள்;
ஆனால் வாளையே உங்கள் மீது கொணர்வேன்,"
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
9 நான் உங்களை இந்நகரினின்று வெளியேற்றி
உங்களை மாற்றாரிடம் கையளித்து
உங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவேன்.
10 உங்களுக்கு நான் வழங்கும் தீர்ப்பு:
நீங்கள் இஸ்ரயேலின் எல்லையில் வாளால் வீழ்வீர்கள்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
11 இந்நகர் உங்களுக்கு ஒரு பாண்டமாக இராது;
நீங்களும் இதிலுள்ள இறைச்சியாக இருக்கமாட்டீர்கள்;
இஸ்ரயேலின் எல்லையில் நான் உங்களைத் தீர்ப்பிடுவேன்.
12 நீங்கள் மீறிய நியமங்களின் ஆண்டவர் நானே
என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
என் நீதி நெறிகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லை.
மாறாக, உங்களைச் சுற்றியுள்ள வேற்றினத்தாரின்
நீதிநெறிகளைப் பின்பற்றினீர்கள்.
13 நான் இறைவாக்குரைத்தபோது,
பெனாயாவின் மகன் பெலற்றியா செத்துப்போனான்.
நான் முகம்குப்புற விழுந்து, உரத்த குரலில்,
"ஐயோ, தலைவராகிய ஆண்டவரே!
இஸ்ரயேலின் எஞ்சியிருப்போரை முற்றிலும் அழிக்கப் போகிறீரோ?"
என்று கதறினேன்.

நாடு கடத்தப்பட்டோருக்குக் கடவுளின் வாக்குறுதி[தொகு]


14 அப்போது, ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
15 "மானிடா! உன் சகோதரர், உன் உறவின் முறையினர்
மற்றும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்து,
'அவர்கள் ஆண்டவரை விட்டுத் தொலைவில் போய்விட்டார்கள்;
எங்களுக்குத்தான் இந்நாடு உரிமையாய்க் கொடுக்கப்பட்டுள்ளது' என
எருசலேமில் வாழ்வோர் கூறுகின்றனர்.
16 எனவே நீ சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
'நான் அவர்களைத் தொலையில்
வேற்றினத்தாரிடையே அனுப்பி இருந்தாலும்,
நாடுகளிடையே அவர்களைச் சிதறடித்திருந்தாலும்
அவர்கள் சென்ற அந்நாடுகளில்
அவர்களுக்கு நான் ஒரு சிறிய தூயகமாக இருந்துள்ளேன்.
17 ஆதலால் நீ சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நான் உங்களை மக்களினங்களிடையே இருந்து
கூட்டிச் சேர்த்து நீங்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று
உங்களை ஒன்று சேர்த்து
இஸ்ரயேல் நாட்டை உங்களுக்குத் தருவேன்.
18 அவர்கள் அங்கு வந்ததும்,
வெறுக்கத்தக்க எல்லாவற்றையும்,
அருவருப்புகள் அனைத்தையும் அதனின்று களைவார்கள்.
19 அவர்களுக்கு நான் வேறோர் இதயத்தையும்
புதியதோர் ஆவியையும் வழங்குவேன்.
கல்லான இதயத்தை அவர்கள் உடலினின்று களைந்து விட்டு,
சதையாலான இதயத்தை அருளுவேன்.
20 அப்போது அவர்கள் என் நியமங்களின்படி நடப்பார்கள்.
என் நீதிநெறிகளுக்குச் செவி கொடுத்து
அவற்றைக் கடைப்பிடிப்பார்கள்;
அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்;
நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். [1]
21 ஆனால், வெறுக்கத்தக்கவற்றையும்
அருவருப்புகளையும் நாடிச்செல்லும்
இதயம் கொண்டவர்களின் வழிமுறைகளை
அவர்களின் தலைமீதே சுமத்துவேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

கடவுளின் மாட்சி எருசலேமை விட்டு விலகல்[தொகு]


22 கெருபுகள் தங்கள் இறக்கைகளை விரிக்க,
சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன.
இஸ்ரயேலின் கடவுளது மாட்சி அவற்றின்மேல் இருந்தது.
23 ஆண்டவரது மாட்சி நகரின் நடுவினின்று எழுந்து
நகருக்குக் கிழக்கே உள்ள மலைமீது போய் நின்றது. [2]
24 அப்போது, இறைக்காட்சியில்
ஆவி என்னைத் தூக்கிக்
கல்தேயாவிலிருந்த நாடுகடத்தப்பட்டோரிடம் கொண்டு சென்றது.
பின்னர் நான் கண்ட காட்சி என்னை விட்டு அகன்றது.
25 நானும் ஆண்டவர் எனக்குக் காண்பித்த அனைத்தையும்
நாடுகடத்தப்பட்டோரிடம் எடுத்துச் சொன்னேன்.


குறிப்புகள்

[1] 11:19-20 = எசே 36:26-28.
[2] 11:22-23 = எசே 43:2-5.


அதிகாரம் 12[தொகு]

அகதியான இறைவாக்கினர் எசேக்கியேல்[தொகு]


1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 "மானிடா! கலகம் செய்யும் வீட்டாரிடையே நீ வாழ்கின்றாய்.
காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை;
கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை;
ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார். [1]
3 மானிடா! நீயோ நாடுகடத்தப்படும் ஒருவர் போல்
பொருள்களைத் தயார் செய்து கொண்டு,
அவர்கள் கண்ணெதிரே பகல் நேரத்தில் புறப்படு.
உன் உறைவிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு,
அவர்கள் கண்ணெதிரே, நாடுகடத்தப்படுபவர் போல் வெளியேறு.
கலகம் செய்யும் வீட்டாராக இருப்பினும்
ஒருவேளை அவர்கள் அதைக் கண்டுணரலாம்.
4 நாடுகடத்தப்படும் ஒருவர்போல்,
அவர்கள் கண்ணெதிரே பகல்நேரத்தில்
உன் பொருள்களை எடுத்து வை.
மாலை வேளையில், அவர்கள் கண்ணெதிரே
நாடுகடத்தப்படுபவர்போல் புறப்படு.
5 அவர்கள் கண்முன்னே,
சுவரில் துளையிட்டு அதன் வழியாய்
அவற்றை வெளிக்கொணர்வாய்.
6 அவர்கள் கண்முன்னே
அவற்றைத் தோள்மேல் வைத்து
இருள் சூழ்ந்ததும் வெளியே தூக்கிச்செல்.
நிலத்தைப் பார்க்காதபடி உன் முகத்தை மூடிக்கொள்.
ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாருக்கு உன்னை
ஓர் அடையாளமாக வைத்திருக்கிறேன்."
7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்.
நாடுகடத்தப்படுகையில் கொண்டு போவதுபோல
என் பொருள்களைப் பகல் வேளையில் வெளிக் கொணர்ந்தேன்.
மாலையில் என் கைகளால் சுவரில் துளையிட்டேன்.
இருள் சூழ்ந்ததும் அவற்றைத் தோளில் தூக்கிக்கொண்டு
அவர்கள் கண்முன்னே வெளியேறினேன்.

8 காலையில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9 "மானிடா! கலகம் செய்யும் வீடாகிய
இஸ்ரயேல் வீட்டார் உன்னிடம்,
'நீ செய்கிறது என்ன?' என்று கேட்கவில்லையா?
10 நீ அவர்களுக்குச் சொல்:
எருசலேமில் இருக்கும் மக்கள் தலைவனையும்
அவனுடனிருக்கும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறித்துத்
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
11 நீ சொல்: உங்களுக்கு நான் ஓர் அடையாளமாய் இருக்கிறேன்;
நான் செய்ததுபோல் அவர்களுக்கும் செய்யப்படும்.
அவர்கள் நாடுகடத்தப்பட்டோராயும் சிறைப்பட்டோராயும் செல்வர்.
12 அவர்களின் தலைவன் இருளில்
தோளில் சுமையுடன் மதிலினூடே வெளியேறுவான்.
அவனை வெளிக்கொணர்வதற்காக மதிலைக் குடைவார்கள்.
கண்களால் நாட்டைப் பார்க்காதபடி
அவன் தன் முகத்தை மூடிக்கொள்வான்.
13 நான் அவன்மீது என் வலையை வீசுவேன்.
அவனும் என் கண்ணில் சிக்கிக்கொள்வான்.
நான் அவனைக் கல்தேயரின் நாடாகிய
பாபிலோனுக்குக் கொண்டு வருவேன்.
அந்த நாட்டைப் பார்க்காமலேயே
அவன் அங்குச் செத்துப் போவான். [2]
14 அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும்
இருக்கும் அனைவரையும்,
அவனுடைய படைகள் அனைத்தையும்,
நான் எப்பக்கமும் சிதறடித்து,
அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வேன்.
15 நான் அவர்களை வேற்றினத்தாரிடையே ஓடச்செய்து,
நாடுகளிடையே சிதறடிப்பேன்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
16 ஆயினும் அவர்களுள் சிலரை வாளுக்கும், பஞ்சத்துக்கும்,
கொள்ளைநோய்க்கும் இரையாக்காமல் விட்டுவைப்பேன்.
அவர்கள் தாங்கள் போய்ச்சேரும் வேற்றினத்தாரிடையே
தங்கள் அருவருப்புகள் எல்லாவற்றையும்பற்றி எடுத்துக்கூறுவர்.
அப்போது அவர்கள் நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வர்.

நடுநடுங்கும் இறைவாக்கினரின் அடையாளம்[தொகு]


17 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
18 "மானிடா! நடுக்கத்தோடு உன் அப்பத்தை உண்டு,
அதிர்ச்சியோடும் அச்சத்தோடும் நீரைப் பருகு.
19 பின்னர், நாட்டின் மக்களை நோக்கிக் கூறு:
இஸ்ரயேல் நாட்டிலுள்ள எருசலேமில் வாழ்வோரைப்பற்றித்
தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
அச்சத்தோடு தங்கள் அப்பத்தை உண்டு,
திகைப்போடு நீரைப் பருகுவர்.
ஏனெனில், அங்கு வாழ்வோரின் வன்செயல்களை முன்னிட்டு
அவர்களது நாட்டில் உள்ள அனைத்தும் பறிக்கப்படும்.
20 மக்கள் வாழும் நகர்கள் பாலைநிலமாகும்;
நாடு பாழாய்ப் போகும்.
அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

ஏற்புடைய பழமொழியும் எடுபடாத பேச்சும்[தொகு]


21 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
22 "மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே
வழங்கிவரும் பழமொழி என்ன?
'நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன;
காட்சிகளோ பலிப்பதில்லை' என்கிறீர்கள்.
23 ஆகையால் அவர்களுக்குச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
அந்தப் பழமொழிக்கு நான் ஒரு முடிவு கட்டுவேன்.
இனி அதை இஸ்ரயேலில் வழங்கமாட்டார்கள்.
ஏனெனில் அவர்களுக்குச் சொல்:
நாள்கள் நெருங்கிவிட்டன.
முன்னறிவிப்புக் காட்சிகள் யாவும் நிறைவேறும்.
24 இஸ்ரயேல் வீட்டினுள் இனிப்
பொய்யான காட்சியும் குறி சொல்லலும் இல்லாமற்போம்.
25 ஏனெனில், நானே ஆண்டவர்;
நானே உரைத்திடுவேன்;
நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்;
இனிமேல் காலந்தாழ்த்தாது;
கலகம் செய்யும் வீட்டாரே, நானே உரைத்திடுவேன்;
அவ்வாக்கை நானே நிறைவேற்றுவேன்,
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
26 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
27 மானிடா! 'இவன் காணும் காட்சிகள்
நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை;
இவன் உரைக்கும் இறைவாக்கும்
தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது' என
இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர்.
28 எனவே அவர்களுக்குச் சொல்:
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது.
நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்,"
என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 12:2 எசா 6:9-10; எரே 5:21; மாற் 8:18.
[2] 12:13 = 2 அர 25:7; எரே 52:11.


(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 13 முதல் 14 வரை