திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/எஸ்தர் (கிரேக்கம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை எஸ்தர் பின்வருமாறு மன்றாடினார்: அனைத்தின் மேலும் அதிகாரம் செலுத்தும் கடவுளே, நம்பிக்கை இழந்த எங்களது குரலுக்குச் செவிசாயும். தீயோரின் கைகளினின்று எங்களைக் காப்பாற்றும்; அச்சத்தினின்று என்னை விடுவியும்." - எஸ்தர் (கி) 4:17k, 17z


எஸ்தர் (கிரேக்கம்) (The Book of Esther [Greek])[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]


1 இதன்பின் அர்த்தக்சஸ்தா மன்னர்
பூகையனும் அம்மதாத்தாவின் மகனுமான
ஆமானைப் பெருமைப்படுத்தி,
தம் நண்பர்களிடையே மிகச் சிறந்த இடத்தை அவனுக்கு வழங்கினார்.
2 மன்னரின் கட்டளைப்படி
அரண்மனையில் பணிபுரிந்த அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தினர்;
ஆனால், மொர்தெக்காய் அவனுக்கு வணக்கம் செலுத்தவில்லை.
3 "நீர் ஏன் மன்னரின் கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை?"
என்று அரண்மனையில் பணிபுரிந்தவர்கள் மொர்தெக்காயை வினவினார்கள்.
4 இவ்வாறு அவர்கள் அவரை ஒவ்வொரு நாளும் கேட்டு வந்தார்கள்.
ஆனால் அவர் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை.
எனவே மன்னரின் கட்டளைக்கு அவர் பணிய மறுப்பதாக
ஆமானிடம் அவர்கள் அறிவித்தார்கள்.
தாம் ஒரு யூதர் என்று அவர் அவர்களுக்குக் தெரிவித்திருந்தார்.
5 தனக்கு மொர்தெக்காய் வணக்கம் செலுத்தாததை அறிந்த ஆமான்
கடுஞ்சீற்றங் கொண்டான்;
6 அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக்கு உட்பட்ட
யூதர்கள் அனைவரையும் அடியோடு அழித்து விடச் சூழ்ச்சி செய்தான்.

யூதர்களைக் கொன்றொழிப்பதற்கான அரசாணை[தொகு]


7 அர்த்தக்சஸ்தாவினுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில்,
மொர்தெக்காயின் இனம் முழுவதையும்
ஒரே நாளில் அழிப்பதற்கு ஏற்ற நாளையும் மாதத்தையும்
அறிந்து கொள்ளச் சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்து,
ஆமான் ஒரு முடிவுக்கு வந்தான்;
இவ்வாறு, சீட்டுக்குலுக்கல் முறையில்
அதார் மாதம் பதினான்காம் நாளைத் தெரிவு செய்தான்.


8 அர்த்தக்சஸ்தா மன்னரிடம் ஆமான்,
"உமது பேரரசெங்கும் உள்ள பல மக்களினத்தாரிடையே
ஓரினம் சிதறுண்டு வாழ்கிறது.
மற்ற இனங்களின் சட்டங்களினின்னறு அவர்களின் சட்டங்கள் மாறுபட்டவை.
அவர்கள் மன்னரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்லை.
எனவே மன்னர் அவர்களை இப்படியே விட்டு வைப்பது நல்லதல்ல.
9 மன்னருக்கு விருப்பமானால் அவர்களை அழிப்பதற்கு
அவர் ஓர் ஆணை பிறப்பிக்கட்டும்.
அவ்வாறாயின் நான் அரச கருவூலத்தில்
நானூறு டன் வெள்ளியைச் செலுத்துவேன்" என்று கூறினான்.


10 அப்போது மன்னர் தம் கணையாழியைக் கழற்றி
யூதருக்கு எதிரான ஆணையில் முத்திரையிடுவதற்காக
அதை ஆமானிடம் கொடுத்தார்.
11 "பணத்தை நீரே வைத்துக் கொள்ளும்.
அந்த இனத்தாரை உம் விருப்பப்படியே நடத்திக் கொள்ளும்"
என்று மன்னர் அவனிடம் சொன்னார்.
12 எனவே முதல் மாதம் பதின்மூன்றாம் நாள்
மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டார்கள்;
இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த
நூற்று இருபத்தேழு மாநிலங்களின் படைத்தலைவர்களுக்கும்
ஆளுநர்களுக்கும் அர்த்தக்சஸ்தா மன்னரின் பெயரால்
ஆமான் விதித்தவாறே அந்தந்த மாநில மொழியில் எழுதினார்கள்.


13 பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதத்தில்
ஒரே நாளில் யூத இனத்தை அடியோடு அழித்து
அவர்களின் செல்வத்தைக் கொள்ளையிடுமாறு
அர்த்தக்சஸ்தாவின் பேரரசெங்கும் தூதர் வழியே
அரசாணை அனுப்பி வைக்கப்பட்டது.
13a பின்வருவது அம்மடலின் நகலாகும்:
"இந்தியா முதல் எத்தியோப்பியா வரை
நூற்று இருபத்தேழு மாநிலங்களின் ஆளுநர்களுக்கும்
அவர்களுக்குக்கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கும்
அர்த்தக்சஸ்தா மாமன்னர் எழுதுவது:
13b பல நாடுகளுக்கு மன்னரும்
உலகம் முழுமைக்கும் தலைவருமாகிய நான்
அதிகாரச் செருக்கின்றி நேர்மையோடும் பரிவோடும் ஆட்சிபுரிந்து,
என் குடிமக்களை எப்போதும் குழப்பமின்றி வாழச் செய்யவும்,
என் பேரரசில் நாகரிகம் நிலவச் செய்யவும்,
நாட்டின் கடையெல்லைவரை மக்கள் பாதுகாப்பாகப்
பயணம் செய்ய வழிகோலவும்,
எல்லா மனிதரும் விரும்பும் அமைதியை
நிலைநாட்டவும் திட்டமிட்டிருந்தேன்.
13c இத்திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று
என் ஆலோசகர்களைக் கேட்டேன்.
அப்போது, நம்மிடையே நுண்ணறிவாற்றல் மிக்கவரும்,
இடையறாத நல்லெண்ணமும்
மாறாத உண்மையும் கொண்டு விளங்குபவரும்,
நமது பேரரசில் இரண்டாம் இடத்தை வகிப்பவருமாகிய ஆமான்,
13d 'உலகில் உள்ள பல மக்களினத்தாரிடையே
பகைமை உணர்வு கொண்ட ஓரினம் கலந்து வாழ்கிறது;
அது மற்ற இனங்களின் சட்டங்களுக்கு மாறானவற்றைக் கடைப்பிடித்து,
மன்னர்களின் ஆணைகளைத் தொடர்ந்து மீறிவருகிறது.
இதனால் நாம் மனமார விரும்பும் வகையில்
பேரரசின் ஒருமைப்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லை'
என்று நம்மிடம் தெரிவித்தார்.
13e எல்லா இனங்களிலும் இந்த இனம் மட்டுமே
தொடர்ந்து அனைவருக்கும் எதிராகச் செயல்பட்டுவருவதையும்,
அன்னியமான பழக்கவழக்கங்களையும்
சட்டங்களையும் பின்பற்றிவருவதையும்,
நமது நலனுக்கு எதிராகத் தீயன நினைத்துக்
கொடிய குற்றங்களைப் புரிவதால்
நிலையான ஆட்சிக்கு ஊறு விளைவித்துவருவதையும் நாம் அறிவோம்.


13f "எனவே எம் ஆணைப்பேராளரும்
உங்களின் இரண்டாம் தந்தையுமாகிய ஆமான்
உங்களுக்கு எழுதியுள்ள மடலில் குறித்துள்ளவர்களையும்
அவர்களின் மனைவி மக்களையும்
இவ்வாண்டு பன்னிரண்டாம் மாதமாகிய அதார் மாதம் பதினான்காம் நாள்
எவ்வகைப் பரிவும் இரக்கமுமின்றி,
யாரையும் விட்டுவிடாமல்
அனைவரையும் பகைவரின் வாளால் கொன்றொழிக்குமாறு
நாம் ஆணை பிறப்பித்துள்ளோம்.
13g இவ்வாறு, நீண்டகாலமாக எதிர்ப்பு மனப்பான்மை கொண்டுள்ள அவர்கள்
ஒரே நாளில் வன்முறையில் கொல்லப்பட்டுப்
பாதாளத்தில் தள்ளப்படுவார்கள்.
இதனால் நமது பேரரசில் இனிமேல் குழப்பம் ஒழிந்து
நிலையான அமைதி நிலவும்."


14 இம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்திலும் வெளியிடப்பட்டது;
அந்த நாளுக்கு முன்னேற்பாடாய் இருக்குமாறு
பேரரசின் எல்லா இனத்தாருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
15 இவ்வாணை சூசாவிலும் விரைவில் அறிவிக்கப்பட்டது.
மன்னரும் ஆமானும் குடிமயக்கத்தில் ஆழ்ந்தனர்;
நகரமோ குழப்பத்தில் ஆழ்ந்தது!


அதிகாரம் 4[தொகு]

அழிவைத் தவிர்க்க மொர்தெக்காய், எஸ்தரின் முயற்சி[தொகு]


1 நிகழ்ந்தையெல்லாம் அறிந்த மொர்தெக்காய்
தம் ஆடைகளைக் கிழித்துவிட்டு,
சாக்கு உடை அணிந்து கொண்டு,
தம்மேல் சாம்பலைத் தூவிக் கொண்டார்;
"மாசற்ற ஓரினம் அழிக்கப்படுகிறது"
என்று உரத்த குரலில் கூவிக்கொண்டே
நகரின் தெருக்கள் வழியாக ஓடினார்.
2 அவர் அரண்மனையின் வாயிலுக்கு வந்ததும் அங்கே நின்றுவிட்டார்;
ஏனெனில் சாக்கு உடை அணிந்துகொண்டும்
சாம்பலைத் தூவிக்கொண்டும்
அரண்மனைக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
3 ஆரசாணை வெளியிடப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும்
யூதர்கள் பெரிதும் துயருற்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்;
சாக்கு உடை அணிந்து சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்.


4 அரசியின் பணிப்பெண்களும் அண்ணகர்களும் உள்ளே சென்று
நடந்ததுபற்றி எஸ்தரிடம் கூறினார்கள்.
அதைக் கேள்வியுற்றதும் அவர் மிகவும் கலக்கமுற்றார்;
சாக்கு உடைக்குப் பதிலாக அணிந்து கொள்ள
மொர்தெக்காய்க்கு ஆடைகளை அனுப்பிவைத்தார்.
அவரோ அதற்கு இசையவில்லை.
5 பின்னர் எஸ்தர் தமக்குப் பணிபுரிந்த அண்ணகரான
அக்ரத்தையோனை அழைத்து,
மொர்தெக்காயிடமிருந்து உண்மையை அறிந்து வருமாறு அனுப்பினார்.
6 [1].
7 நிகழ்ந்தை மொர்தெக்காய் அந்த அண்ணகரிடம் தெரிவித்தார்;
யூதர்களை அழிக்கும்பொருட்டு அரச கருவூலத்தில்
நானூறு டன் [2] வெள்ளியைச் செலுத்துவதாக
ஆமான் மன்னருக்கு அளித்திருந்த வாக்குறுதிபற்றிக் கூறினார்;
8 யூதர்களை அழித்தொழிப்பது பற்றிச்
சூசா நகரில் வெளியிடப்பட்ட ஆணையின் நகல் ஒன்றையும்
எஸ்தரிடம் காட்டுமாறு அவரிடம் கொடுத்தார்;
மன்னரிடம் எஸ்தர் சென்று அவருடைய ஆதரவை வேண்டி,
தம் மக்களுக்காக அவரிடம் மன்றாட வேண்டும் என்று
அவரிடம் தெரிவிக்குமாறு அந்த அண்ணகரைக் கேட்டுக் கொண்டார்.
"நீ என் ஆதரவில் ஓர் எளிய பெண்ணாக
வளர்ந்துவந்த நாள்களை நினைத்துப்பார்.
மன்னருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆமான்
நமக்கு எதிராகப் பேசி,
நம் இனத்தைக் கொல்லுமாறு மன்னரைக் கேட்டுக்கொண்டுள்ளான்.
எனவே ஆண்டவரிடம் மன்றாடு;
பிறகு நமக்காக மன்னரிடம் பரிந்து பேசு;
நம்மைச் சாவினின்று காப்பாற்று" என்றும்
அவரிடம் தெரிவிக்கச் சொன்னார்.


9 அக்ரத்தையோன் திரும்பிவந்து
எஸ்தரிடம் இவையனைத்தையும் தெரிவித்தார்.
10 மோர்தெக்காயிடம் போய்க் கூறுமாறு எஸ்தர் அவரிடம்.
11 "ஆண் பெண் யாராயினும்,
மன்னர் அழைக்காமல் உள்மண்டபத்துக்குள் சென்றால்
அவர் உயிர்வாழ முடியாது என்பதைப்
பேரரசின் எல்லா நாடுகளும் அறியும்.
மன்னர் யாரை நோக்கித் தம் பொற் செங்கோலை உயர்த்துகிறாரோ
அவர் மட்டுமே உயிர்பிழைப்பார்.
நானோ மன்னரிடம் வருமாறு அழைக்கப்பட்டு
இன்றோடு முப்பது நாள் ஆகிறது" என்றார்.
12 எஸ்தர் சொன்னதை அக்ரததையோன்
மொர்தெக்காயிடம் எடுத்துரைத்தார்.
13 எஸ்தரிடம் சென்று தெரிவிக்குமாறு மொர்தெக்காய்,
"எஸ்தர், பேரரசில் உள்ள எல்லா யூதர்களுள்ளும்
நீ மட்டும் பிழைத்துக் கொள்வாய் என எண்ணவேண்டாம்.
14 இத்தகைய நேரத்தில் நீ வாளாவிருந்து விட்டாலும்,
யூதர்களுக்கு வேறு வழியாக உதவியும் பாதுகாப்பும் கிடைக்கும்;
ஆனால் நீயும் உன் தந்தையின் குடும்பத்தாரும் அழிவீர்கள்.
இத்தகைய ஒரு வாய்ப்புக்காகவே நீ அரசியாக்கப்பட்டாயோ என்னவோ,
யார் அறிவார்!" என்று அக்ரத்தையோனிடம் கூறினார்.


15 தம்மிடம் வந்தவரை மொர்தெக்காயிடம் எஸ்தர் அனுப்பி,
16 "நீர் போய், சூசாவில் உள்ள யூதர்களை ஒன்றுகூட்டும்.
எல்லாரும் எனக்காக உண்ணா நோன்பிருங்கள்.
இரவு பகலாக மூன்று நாள்களுக்கு உண்ணவோ பருகவோ வேண்டாம்.
நானும் என் பணிப்பெண்களுங்கூட நோன்பிருப்போம்.
அதன்பின் சட்டத்துக்கு எதிராக நான் மன்னரிடம் செல்வேன்.
இதனால் நான் இறக்க வேண்டியிருந்தாலும் சரியே" என்றார்.


17 பின் மொர்தெக்காய் அங்கிருந்து சென்று
எஸ்தர் கேட்டுக்கொண்டவாறே செய்தார்.

மொர்தெக்காயின் மன்றாட்டு[தொகு]


17a மோர்தெக்காய் ஆண்டவரின் செயல்களையெல்லாம் நினைவு கூர்ந்து
அவரிடம் பின்வருமாறு மன்றாடினார்:


17b "ஆண்டவரே, அனைத்தையும் ஆளும் மன்னராகிய ஆண்டவரே,
அனைத்தும் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன.
நீர் இஸ்ரயேலைக் காக்கத் திருவுளம் கொள்ளும்போது
எவராலும் உம்மை எதிர்த்து நிற்கமுடியாது.


17c விண்ணையும் மண்ணையும்
விண்ணின்கீழ் உள்ள ஒவ்வொரு வியத்தகு பொருளையும்
படைத்தவர் நீரே.
நீரே அனைத்திற்கும் ஆண்டவர்.
ஆண்டவராகிய உம்மை எதிர்ப்பவர் எவரும் இலர்.


17d ஆண்டவரே, நீர் அனைத்தையும் அறிவீர்.
தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்குக் காரணம்
செருக்கோ இறுமாப்போ வீண்பெருமையோ அல்ல
என்பதையும் நீர் அறிவிர்.
இஸ்ரயேலின் மீட்புக்காக
நான் அவனுடைய உள்ளங்கால்களைக்கூட முத்தமிட்டிருப்பேன்.


17e ஆனால் கடவுளைவிட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக்கூடாது
என்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டேன்.
ஆண்டவரே, உம்மைத்தவிர வேறு யாரையும் நான் வணங்கமாட்டேன்.
நான் ஆமானை வணங்க மறுப்பது செருக்கினாலன்று.


17f ஆண்டவரே, கடவுளே, மன்னரே,
ஆபிரகாமின் கடவுளே,
இப்போது உம் மக்களைக் காப்பாற்றும்.
எங்களுடைய பகைவர்கள் எங்களை ஒழித்துவிடக்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்;
தொடக்கமுதல் உம்முடையதாய் விளங்கும் உரிமைச்சொத்தை அழித்துவிட
ஆவல் கொண்டுள்ளார்கள்.


17g எகிப்து நாட்டிலிருந்து நீர் உமக்காகவே மீட்டுவந்த
உம் உடைமையைப் புறக்கணித்துவிடாதீர்.


17h என் மன்றாட்டைக் கேட்டருளும்;
உமது மரபுரிமைமீது இரக்கங்கொள்ளும்.
ஆண்டவரே, நாங்கள் உயிர்வாழ்ந்து
உமது பெயரைப் புகழ்ந்து பாடும் பொருட்டு,
எங்கள் அழுகையை மகிழ்ச்சியாக மாற்றுவீர்;
உம்மைப் புகழ்ந்தேத்தும் வாயை அடைத்துவிடாதீர்."


17i இஸ்ரயேல் மக்கள் அனைவரும்
தங்கள் ஆற்றலெல்லாம் கூட்டிக் கத்தினார்கள்;
ஏனெனில் தங்களது சாவு பற்றியே
சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.

எஸ்தரின் மன்றாட்டு[தொகு]


17k சாவுக்குரிய துன்பத்தில் துடித்த எஸ்தர் அரசி
ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தார்;
பகட்டான தம் ஆடைகளைக் களைத்துவிட்டுத்
துயரத்துக்கும் புலம்பலுக்கும் உரிய ஆடைகளை அணிந்து கொண்டார்;
சிறந்த நறுமணப் பொருள்களுக்கு மாறாகத்
தம் தலைமீது சாம்பலையும் சாணத்தையும் இட்டுக் கொண்டார்;
தம் உடலை அலங்கோலப்படுத்திக் கொண்டு,
தாம் வழக்கமாக ஒப்பனை செய்யும் உடலுறுப்புகளைத்
தம் அவிழ்த்த கூந்தலால் மூடிக் கொண்டார்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை
அவர் பின்வருமாறு மன்றாடினார்:


17l "என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர்.
ஆதரவற்றவளும் உம்மைத்தவிர வேறு துணையற்றவளுமாகிய
எனக்கு உதவி செய்யும்;
ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன்.


17m ஆண்டவரே, நீர் எல்லா இனங்களிலிருந்தும்
இஸ்ரயேலைத் தெரிந்தெடுத்தீர் என்றும்,
அவர்களின் மூதாதையர் அனைவரிடையிலிருந்தும்
எங்கள் முன்னோரை
என்றென்றைக்கும் உம் உரிமைச்சொத்தாகத் தெரிந்தெடுத்தீர் என்றும்,
நீர் அவர்களுக்கு வாக்களித்ததையெல்லாம் நிறைவேற்றினீர் என்றும்,
நான் பிறந்த நாள்தொட்டு
என் குலத்தாரும் குடும்பத்தாரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். [3]


17n நாங்களோ உம் முன்னிலையில் பாவம் செய்து விட்டோம்;
நீரும் எங்கள் பகைவர்களிடத்தில் எங்களை ஒப்புவித்துவிட்டீர்.
ஏனெனில் நாங்கள் அவர்களின் தெய்வங்களை மாட்சிப்படுத்தினோம்.
ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர்.


17o-p நாங்கள் கொடிய அடிமைத்தனத்தில் உழல்வதுகூட
அவர்களுக்கு மனநிறைவு தரவில்லை.
உமது வாக்குறுதியைச் செயலற்றதாக்கவும்,
உமது உரிமைச்சொத்தை ஒழிக்கவும்,
உம்மைப் புகழ்ந்தேத்தும் வாயை அடைக்கவும்,
உம் இல்லத்தின் மாட்சியைக் குலைக்கவும்,
உமது பீடத்தில் பலி நிகழாமல் தடுக்கவும்,
தகுதியற்ற தெய்வச் சிலைகளைப் புகழும்படி
வேற்றினத்தாரின் வாயைத் திறக்கவும்,
சாகக்கூடிய ஒரு மன்னரை என்றென்றும் போற்றவும்,
அவர்கள் தங்கள் தெய்வங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.


17q ஆண்டவரே, உயிரில்லாத தெய்வங்களிடம்
உமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்கவேண்டாம்;
எங்கள் வீழ்ச்சியைக் கண்டு பகைவர்கள் எள்ளி நகையாட
இடம் கொடுக்க வேண்டாம்.
அவர்களின் சூழ்ச்சியை அவர்களுக்கு எதிராகவே திருப்பி,
அதைச் செய்தவனைப் பிறருக்கு எச்சரிக்கையாக மாற்றும்.


17r ஆண்டவரே, எங்களை நினைவுகூரும்;
எங்கள் துன்ப வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தும்;
தெய்வங்களுக்கெல்லாம் மன்னரே,
அரசுகள் அனைத்துக்கும் ஆண்டவரே,
எனக்குத் துணிவைத் தாரும்.


17s சிங்கத்துக்குமுன் நாவன்மையுடன் பேசும் வரத்தை எனக்கு வழங்கும்;
எங்களுக்கு எதிராகப் போரிடுபவனை மன்னர் வெறுக்கச் செய்யும்;
இதனால் அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியச் செய்யும்.


17t ஆண்டவரே, உமது கைவன்மையால் எங்களைக் காப்பாற்றும்;
ஆதரவற்றவளும் உம்மைத்தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு
உதவி செய்யும்.


17u அனைத்தையும் நீர் அறிவீர்;
தீயோரின் ஆடம்பரத்தை நான் வெறுக்கின்றேன்;
விருத்தசேதனம் செய்து கொள்ளாதோர்,
அன்னியர்கள் ஆகிய அனைவருடைய மஞ்சத்தையும் அருவருக்கிறேன்
என்பது உமக்குத் தெரியும்.


17w என் இக்கட்டான நிலையை நீர் அறிவிர்.
பொதுவில் தோன்றும்போது
தலைமீது அணிந்துகொள்ளும் என் உயர்நிலையின் அடையாளத்தை
நான் அருவருக்கிறேன்;
தீட்டுத் துணிபோல் வெறுக்கிறேன்.
தனியாக இருக்கும்போது நான் அதை அணிவதில்லை.


17x ஆமானின் உணவறையில் உம் அடியவளாகிய நான் உணவருந்தியதில்லை;
அரச விருந்துகளை நான் சிறப்பித்ததில்லை;
தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட திராட்சை மதுவை
நான் அருந்தியதுமில்லை.


17y ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே,
உம் அடியவளாகிய நான் இங்கு வந்த நாள் முதல் இன்றுவரை
உம்மிலன்றி வேறு எவரிடமும் மகிழ்ச்சி கொண்டதில்லை.


17z அனைத்தின் மேலும் அதிகாரம் செலுத்தும் கடவுளே,
நம்பிக்கை இழந்த எங்களது குரலுக்குச் செவிசாயும்.
தீயோரின் கைகளினின்று எங்களைக் காப்பாற்றும்;
அச்சத்தினின்று என்னை விடுவியும்."


குறிப்புகள்

[1] 4:6 - "எனவே அக்ரத்தையோன் அரண்மனை வாயிலுக்கு எதிரே இருந்த
சதுக்கத்தில் நின்றுகொண்டிருந்த மொர்த்தகாயிடம் சென்றார்"
என்னும் பாடம் சில பிரதிகளில் 4:6 -ஆக
இடம்பெறுகிறது.
[2] 4:7 - காண்க: தோபி 1:14 அடிக்குறிப்பு.
[3] 4:17m = இச 4:20; 7:6; 9:29; 14:21; 26:18; 32:9


(தொடர்ச்சி): எஸ்தர் (கிரேக்கம்): அதிகாரங்கள் 5 முதல் 6 வரை