12 ’லா.சா.ராமாமிருதம்'
தேவி அப்படியல்ல. அவள் உருவமும் ஆராதனையும் மனத்தில் பக்தியை உண்டாக்குகிறது.
ஆசை, அன்பு, பக்தி, பாசம், பட்சம்- இத்தனைக்கும் வித்தியாசங்களின் அத்தனை நுணுக்கங்களும் நான் அறிவேன்.
கல்யாணத்துக்குப் பிறகு என் கண்ணால் காணாத என் மனைவி, இன்னும் ஏன் என்னிடம் வரவில்லை என்று எனக்கு வயது ஆகஆக நாளுக்கு நாள்-நான் அதிசயித்ததுண்டு.
எனக்கு வயதாக ஆக, அவள் உருவம் இப்பொழுது எப்படியிருக்கும் என்று நான் அதிசயித்ததுண்டு.
அம்பாளைப்போல் இருப்பாளா?
அம்பாளை நான் நன்கு அறிவேன்.
அம்பாளுக்கு நான் அபிஷேகம் செய்கிறேன்.
அர்ச்சிக்கிறேன்.
தீப ஆராதனை செய்கிறேன்.
அம்பாளை நான் பக்தி பண்ணுகிறேன்.
ஒர் இரவு நான் சாப்பிட உட்கார்ந்தேன். அம்மா என்னிடம் என்னவோ சொல்ல வந்தாள். அவள் முகம் வெளுத்துப் போயிருந்தது. அதில் நான் கண்டது பயமா, துக்கமா, வெறுப்பா, குரூரமா? என்று என்னால் நிச்சயமாய்க் கண்டு பிடிக்க முடியவில்லை. அத்தனையுமிருந்தது.
"அம்பி, உன் ஆம்படையாள் செத்துப்போயிட்டாள் என்று சமாச்சாரம் வந்தது. என்னமோ மூணு நாள் ஜுர மாம்......”
"ஹா?---" என்று என்னிடமிருந்து ஒரு மூச்சு திணறிய ஞாபகமிருக்கிறது.
அம்மாவின் முகம் இன்னமும் கூரிட்டது.