திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
எரிகோ நகரைக் கைப்பற்றுதல். ஓவியர்: ழான் ஃபூக்கே (1420-1480). காப்பிடம்: பாரிசு.

யோசுவா[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

லேவியர்க்குரிய நகர்கள்[தொகு]


1 லேவியரின் முதுபெரும் தலைவர்கள், குரு எலயாசரையும் நூனின் மகன் யோசுவாவையும், இஸ்ரயேல் மக்கள் குலங்களின் முதுபெரும் தலைவர்களையும் அணுகி,
2 கானான் நாட்டில் சீலோவில் கூறியது: "நாங்கள் வாழ நகர்களையும், எங்கள் கால்நடைகள் மேய நிலங்களையும் கொடுக்கும்படி ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டார்." [*]
3 இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் கட்டளைப்படி தங்கள் பங்கிலிருந்து லேவியருக்குப் பின்வருமாறு நகர்களையும் நிலங்களையும் கொடுத்தனர்:


4 கோகாத்தியரின் குடும்பங்களுக்காகச் சீட்டுப் போட்டனர். லேவியருள் குரு ஆரோனின் மக்களுக்கு, யூதா குலத்திலிருந்தும் சிமியோன் குலத்திலிருந்தும் பென்யமின் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.


5 கோகாத்தியரில் ஏனைய மக்களுக்கு, எப்ராயிம் குலத்தின் குடும்பத்திலிருந்தும், தாண் குலத்திலிருந்தும் மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பத்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.


6 கேர்சோன் மக்களுக்கு இசக்கார் குலத்தின் குடும்பங்களிலிருந்தும், ஆசேர் குலத்திலிருந்தும், நப்தலி குலத்திலிருந்தும், பாசானிலிருந்த மனாசேயின் பாதிக் குலத்திலிருந்தும் பதின்மூன்று நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கிடைத்தன.


7 மெராரியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் குலத்திலிருந்தும், காத்துக் குலத்திலிருந்தும், செபுலோன் குலத்திலிருந்தும் பன்னிரு நகர்கள் கிடைத்தன.


8 ஆண்டவர் மோசே வழியாகக் கட்டளையிட்டபடி, சீட்டுப் போட்டு, இஸ்ரயேல் மக்கள் லேவியருக்கு இந்நகர்களையும் மேய்ச்சல் நிலங்களையும் அளித்தனர்.


9 யூதா மக்களின் குலத்திலிருந்தும் சிமியோன் மக்களின் குலத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நகர்களின் பெயர்ப்பட்டியல்:
10 லேவியரின் மக்கள் கோகாத்தியரின் குடும்பத்தைச் சார்ந்த ஆரோனின் மக்களுக்கு முதல் சீட்டு விழுந்ததால் அவர்களுக்குப் பின்வருமாறு நகர்கள் கிடைத்தன.
11 யூதா மலைநாட்டில் உள்ள எபிரோன் என்னும் கிரியத்து அர்பாவைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலம் அவர்களுக்குக் கிடைத்தது. அர்பா ஆனாக்கின் தந்தை.
12 நகரின் விளைநிலமும் அதன் சிற்றூர்களும் எபுன்னேயின் மகன் காலேபுக்கு உடைமையாகக் கிடைத்தன.


13 குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான எபிரோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; லிப்னா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;
14 யாத்திர், அதன் மேய்ச்சல் நிலம்; எசுத்தமோவா, அதன் மேய்ச்சல் நிலம்;
15 கோலோன், அதன் மேய்ச்சல் நிலம்; தெபீர், அதன் மேய்ச்சல் நிலம்;
16 அயின், அதன் மேய்ச்சல் நிலம்; யுற்றா, அதன் மேய்ச்சல் நிலம்; பெத்சமேசு, அதன் மேய்ச்சல் நிலம் ஆக, இவ்விரு குலங்களினின்று ஒன்பது நகர்கள்.
17 பென்யமின் குலத்திலிருந்து கொடுக்கப்பட்டவை; கிபயோன், அதன் மேய்ச்சல் நிலம்; கேபா, அதன் மேய்ச்சல் நிலம்;
18 அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; அல்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
19 குரு ஆரோனின் மக்களுக்குக் கிடைத்தவை மொத்தம் பதின் மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.


20 லேவியரைச் சார்ந்த கோகாத்தின் ஏனைய குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் உடைமைகளிலிருந்து நகர்கள் சீட்டு விழுந்ததன்படி கொடுக்கப்பட்டன.
21 அவர்களுக்குக் கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான எப்ராயிம்; மலையில் அமைந்துள்ள செக்கெம் நகர், அதன் மேய்ச்சல் நிலம்; கேசேர், அதன் மேய்ச்சல் நிலம்
22 கிபட்சயிம், அதன் மேய்ச்சல் நிலம், பெத்கோரோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
23 தாணின் குலத்திலிருந்து கிடைத்தவை: எல்தக்கே, அதன் மேய்ச்சல் நிலம்; கிபத்தோன், அதன் மேய்ச்சல் நிலம்;
24 அய்யலோன், அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
25 மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை: தானாக்கு, அதன் மேய்ச்சல் நிலம்; கத்ரிம்மோன், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள்.
26 இவ்வாறு கோகாத்தின் எஞ்சிய குடும்பங்களுக்குப் பத்து நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.


27 லேவியரின் குடும்பத்தைச் சார்ந்த கேர்சோனின் குடும்பங்களுக்கு மனாசேயின் பாதிக் குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான பாசானில் கோலான், அதன் மேய்ச்சல் நிலம்; பெயசுதரா, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, இரண்டு நகர்கள்.
28 இசக்காரின் குலத்திலிருந்து கிடைத்தவை: கிசியோன், அதன் மேய்ச்சல் நிலம்; தாபராத்து, அதன் மேய்ச்சல் நிலம்;
29 யார்முத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஏன்கன்னிம், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
30 ஆசேரின் குலத்திலிருந்து கிடைத்தவை: மிசால், அதன் மேய்ச்சல் நிலம்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலம்,
31 எல்காத்து, அதன் மேய்ச்சல் நிலம்; இரகோபு, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
32 நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான கலிலேயாவின் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலம்; அம்மோத்தோர், அதன் மேய்ச்சல் நிலம்; காத்தான், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக மூன்று நகர்கள்.
33 இவ்வாறு கேர்சோனின் குடும்பங்களுக்குக் கிடைத்தவை இப் பதின்மூன்று நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.


34 எஞ்சிய லேவியருள் மெராரி மக்களின் குடும்பத்தினருக்கு செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை: யோக்னயாம், அதன் மேய்ச்சல் நிலம்; கர்த்தா, அதன் மேய்ச்சல் நிலம்.
35 திம்னா, அதன் மேய்ச்சல் நிலம்; நகலால், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
36 ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை: பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலம்; யாகசு, அதன் மேய்ச்சல் நிலம்;
37 கெதமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மேபாத்து, அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
38 காத்துக் குலத்திலிருந்து கிடைத்தவை: கொலையாளியின் அடைக்கல நகரான கிலயாத்து ராமோத்து, அதன் மேய்ச்சல் நிலம்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலம்;
39 எஸ்போன், அதன் மேய்ச்சல் நிலம்; யாசேர், அதன் மேய்ச்சல் நிலம்; ஆக, நான்கு நகர்கள்.
40 இவ்வாறு எஞ்சிய லேவியருள் மெராரி குடும்பங்களுக்குச் சீட்டு விழுந்ததன்படி கிடைத்த மொத்த நகர்கள் பன்னிரண்டு.
41 இஸ்ரயேல் மக்களுக்குரிய நிலப்பகுதியில் லேவியருக்கு ஆங்காங்கே விடப்பட்டவை நாற்பத்தெட்டு நகர்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும்.
42 எல்லா நகர்களைச் சுற்றிலும் மேய்ச்சல் நிலங்கள் இருந்தன.
43 இவ்வாறு ஆண்டவர் அவர்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக வாக்களித்த நாடு முழுவதையும் இஸ்ரயேலுக்குக் கொடுத்தார். அவர்கள் அதனை உடைமையாக்கிக் கொண்டு அதில் வாழ்ந்தார்கள்.
44 அவர்கள் மூதாதையருக்கு வாக்களித்தபடி ஆண்டவர் அவர்களுக்கு நாட்டின் எல்லை எங்கும் அமைதி நிலவச் செய்தார். பகைவர்களில் எவனாலும் அவர்களை எதிர்த்து நிற்க இயலவில்லை. கடவுள் அவர்களுடைய பகைவர்களை அவர்கள் கையில் ஒப்படைத்தார்.
45 ஆண்டவர் இஸ்ரயேல் வீட்டாருக்கு உரைத்த எல்லா நல்வாக்குகளும் தவறாமல் நிறைவேறின.

குறிப்பு

[*] 21:2 = எண் 35:1-8.

அதிகாரம் 22[தொகு]

கிழக்கே குடியேறிய குலத்தார்[தொகு]


1 யோசுவா ரூபன் குலத்தாரையும், காத்துக் குலத்தாரையும், மனாசேயின் குலத்தாரையும் அழைத்து,
2 அவர்களிடம், "நீங்கள் ஆண்டவரின் ஊழியர் மோசே கட்டளையிட்ட அனைத்தையும் கைக்கொண்டீர்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டுக் கூறிய அனைத்திற்கும் கீழ்ப்படிந்தீர்கள். [1]
3 நீங்கள் இதுவரை பலநாள்களாக உங்கள் சகோதரர்களைக் கைவிடாமல், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டவற்றைக் கைக்கொண்டீர்கள்.
4 அவர்களுக்கு வாக்களித்தபடி உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரர்களுக்கு இப்போது அமைதிக் காலம் அளித்துள்ளார். இப்பொழுது உங்கள் கூடாரங்களுக்கு யோர்தானுக்கு அப்பால் ஆண்டவரின் ஊழியர் மோசே உங்களுக்கு உடைமையாகக் கொடுத்த பகுதிக்குச் செல்லுங்கள்.
5 உங்கள் முழு இதயத்துடனும் உங்கள் முழு உள்ளத்துடனும் ஆண்டவராகிய கடவுள்மீது அன்பு கூருமாறும், அவருடைய வழிகள் அனைத்திலும் நடக்குமாறும், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுமாறும், அவரைப் பற்றிக்கொள்ளுமாறும், அவருக்குப் பணிபுரியுமாறும், ஆண்டவரின் ஊழியராகிய மோசே உங்களுக்கு இட்ட கட்டளைகளையும் சட்டத்தையும் நிறைவேற்றுவதில் மிகவும் கவனமாயிருங்கள்" என்றார்.
6 யோசுவா ஆசி வழங்கி அவர்களை அனுப்பினார். அவர்களும் தங்கள் கூடாரங்களுக்குச் சென்றார்கள்.


7 மோசே மனாசேயின் குலத்தில் ஒரு பாதிக்கு பாசானில் நிலம் கொடுத்தார். யோசுவா அக்குலத்தின் மறுபாதிக்கு அவர்களுடைய சகோதரர்களிடையே யோர்தானுக்கு மேற்கில் நிலம் கொடுத்தார். யோசுவா அவர்களை அவர்களுடைய கூடாரங்களுக்கு அனுப்பியபொழுது அவர்களுக்கு ஆசி வழங்கி,
8 "மிகுந்த செல்வத்துடன் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிச் செல்லுங்கள். உங்கள் எதிரிகளிடமிருந்து கொள்ளை கொண்ட மிகுதியான கால்நடைகள், வெள்ளி, பொன், வெண்கலம், இரும்பு, மிகுதியான ஆடைகள் ஆகியவற்றை உங்கள் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று அவர்களிடம் கூறினார்.
9 ரூபனின் மக்களும் காத்தின் மக்களும் மனாசேயின் பாதிக் குலத்தினரும் கானானில் உள்ள சீலோவில் இஸ்ரயேல் மக்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, மோசே வழியாக ஆண்டவர் கட்டளையிட்டபடி அவர்கள் பெற்றுக்கொண்ட தம் சொந்த நாடான கிலயாதுக்குச் சென்றனர்.

யோர்தானுக்கருகே எழுப்பப்பட்ட பலிபீடம்[தொகு]


10 அவர்கள் கானான் நாட்டில் யோர்தானுக்கருகே இருந்த கெலிலோத்திற்கு வந்தனர். ரூபனின் மக்களும், காத்தின் மக்களும், மனாசேயின் பாதிக் குலத்தினரும், யோர்தான் அருகில் மிகப்பெரிய பலிபீடம் ஒன்று எழுப்பினர்.
11 'ரூபனின் மக்களும் காத்தின் மக்களும் மனாசேயின் பாதிக் குலத்தாரும் கானான் நாட்டின் எதிரில் யோர்தான் பகுதிகளில் இஸ்ரயேல் மக்களுக்கு அண்மையில் ஒரு பீடம் எழுப்பியுள்ளனர்' என்று இஸ்ரயேல் மக்கள் கேள்வியுற்றனர்.
12 இஸ்ரயேல் மக்கள்பேரவை இதைக் கேள்வியுற்று, அவர்களுக்கு எதிராகப் படையுடன் செல்லும் நோக்கத்துடன் சீலோவில் கூடியது.
13 இஸ்ரயேல் மக்கள் குரு எலயாசரின் மகன் பினகாசைக் கிலயாது நாட்டில் இருந்த ரூபனின் மக்கள், காத்தின் மக்கள், மனாசேயின் பாதிக் குலத்தினர் ஆகியவரிடம் அனுப்பினர்.
14 அவருடன் இஸ்ரயேலின் எல்லாக் குலங்களிலிருந்தும் குடும்பத்துக்கு ஒரு தலைவராகப் பதின்மரை அனுப்பினர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தவர் தலைவர்.
15 அவர்கள் கிலயாது நாட்டில் இருந்த ரூபன் மக்களிடமும் காத்து மக்களிடமும் மனாசே பாதிக்குலத்தினரிடமும் சென்று பின்வருமாறு கூறினர்:
16 "ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் இவ்வாறு சொல்கின்றது: இந்நாளில் உங்களுக்கென்று இஸ்ரயேல் கடவுளுக்கு எதிராக ஒரு பலிபீடம் எழுப்பியதால் ஆண்டவரை விட்டு விலகி விட்டீர்கள். ஆண்டவருக்கு எதிராக ஏன் இந்தத் துரோகம்? [2]
17 பெகோரில் நாம் செய்த பாவம் நமக்குப் போதாதா? இந்நாள் வரை நாம் அதற்குக் கழுவாய் தேடவில்லை. அதற்குரிய தண்டனை ஆண்டவரின் மக்கள் கூட்டமைப்புக்குக் கிடைத்துவிட்டது. [3]
18 நீங்கள் இன்று ஆண்டவரை விட்டு விலகிவிட்டீர்கள். இன்று நீங்கள் ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்திருக்கின்றீர்கள். நாளை இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம்கொள்வார்.
19 உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் தூய்மையற்றதாயின் ஆண்டவருக்கு உரிய நிலத்திற்கு வாருங்கள். அங்கு ஆண்டவரின் திருஉறைவிடம் அமைந்துள்ளது. எங்கள் நடுவில் தங்குங்கள். ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்யவேண்டாம். நம் கடவுளாகிய ஆண்டவரின் பலிபீடத்தை விட்டு வேறொரு பலிபீடத்தைக் கட்டும் உங்கள் குற்றத்திற்கு எங்களை ஆளாக்க வேண்டாம்.
20 செராகின் மகன் ஆக்கான் கொள்ளைப் பொருளைத் திருடியதால் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதன்மீதும் அவர் சினம் கொள்ளவில்லையா? தன் குற்றத்திற்காக அவன் ஒருவன் மட்டுமா அழிந்தான்?" [4]


21 அப்பொழுது ரூபன் மக்களும் காத்து மக்களும் மனாசேயின் அரைக்குலத்தாரும் இஸ்ரயேலின் ஆயிரத்தவர் தலைவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது:
22 "உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! உன்னத கடவுளாகிய ஆண்டவரே இறைவன்! அவர் இதை அறிவார். இஸ்ரயேலும் இதை அறிவதாக! இது ஆண்டவருக்கு எதிரான கலகமும் துரோகமுமானால் நீங்கள் எங்களை இன்று தப்பிப் போக விடாதீர்கள்.
23 நாங்கள் ஆண்டவரைவிட்டு விலகவா இப்பலிபீடத்தை எழுப்பினோம். அதன்மீது எரிபலி, உணவுப்படையல், நல்லுறவுப்பலி செலுத்துவதாக இருந்தால் ஆண்டவர்தாமே எங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்.
24 எங்களுக்கு ஏற்பட்ட ஓர் அச்சத்தினால் இவ்வாறு செய்தோம். பிற்காலத்தில் உங்கள் மக்கள் எங்கள் மக்களிடம் 'உங்களுக்கும் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கும் என்ன தொடர்பு?
25 ரூபன், காத்து ஆகியோரின் மக்களே! ஆண்டவர் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே யோர்தானை எல்லையாக வைத்தார். உங்களுக்கு ஆண்டவரிடத்தில் பங்கு இல்லை' என்று சொல்லி, உங்கள் மக்கள் எங்கள் மக்களை ஆண்டவரை வழிபடுவதிலிருந்து நிறுத்தக்கூடும்.
26 எனவே, நமக்கென ஒரு பலிபீடம் எழுப்புவோம். இது எரி பலிக்கோ வேறு பலிக்கோ அன்று.
27 மாறாக, ஆண்டவர் திருமுன் எரிபலிகளையும் வேறு பலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அவரை வழிபடுகிறோம் என்பதற்கு, இது நமக்கிடையிலும் நம் வழிமரபினரிடையிலும் சான்றாக இருக்கும். அதனால் உங்கள் மக்கள் எதிர்காலத்தில் எங்கள் மக்களிடம் 'உங்களுக்கு ஆண்டவரிடத்தில் பங்கு இல்லை' என்று சொல்லமாட்டார்கள்.
28 அப்படி எதிர்காலத்தில் எங்களுக்கும் எங்கள் வழிமரபினருக்கும் சொல்லப்பட்டால் நாங்கள் 'எங்கள் தந்தையர் செய்த பலிபீடத்தின் படிவத்தைப் பாருங்கள். எரிபலியோ வேறு பலியோ செலுத்த அன்று; மாறாக, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே சான்றாக இருந்திடவே' என்று கூறுவோம்.
29 ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்வதோ, ஆண்டவரை விட்டு விலகுவதோ, எரிபலி, உணவுப் படையல், வேறுபலிகள் ஆகியவற்றுக்காக பலிபீடம் எழுப்புவதோ எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அவரது திரு உறைவிடத்தின்முன் இருக்கும் பலிபீடத்தைத் தவிர வேறொன்றும் வேண்டாம்".


30 ரூபன் மக்களும், காத்து மக்களும், மனாசே மக்களும் கூறியதைக் குரு பினகாசும் அவருடன் இருந்த இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களான ஆயிரத்தவர் தலைவர்களும் கேட்டனர். அவர்களுக்கு அது நலமெனப்பட்டது.
31 எலயாசரின் மகனும் குருவுமான பினகாசு, ரூபன் மக்களிடமும், காத்து மக்களிடமும், மனாசே மக்களிடமும், "ஆண்டவர் நம் நடுவில் உள்ளார் என்று இன்று நாங்கள் அறிந்து கொண்டோம். ஆண்டவருக்கு எதிராக நீங்கள் இந்தத் துரோகத்தைச் செய்யாதிருந்ததால், ஆண்டவரின் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை நீங்கள் காப்பாற்றினீர்கள்." என்று கூறினர்.


32 எலயாசரின் மகனும் குருவுமான பினகாசும் தலைவர்களும் ரூபன் மக்களிடமிருந்தும் காத்து மக்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டு கிலயாது நாட்டிலிருந்து கானான் நாட்டுக்கு இஸ்ரயேல் மக்களிடம் திரும்பிவந்து அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தனர்.
33 அந்தப் பதில் இஸ்ரயேல் மக்களுக்கு நலமெனத் தோன்றியது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வாழ்த்தினர். அவர்கள் ரூபன் மக்களும் காத்து மக்களும் வாழும் நாட்டின்மீது போரிடச் செல்வதுபற்றியோ, அதை அழிப்பது பற்றியோ மேற்கொண்டு பேசவில்லை.
34 ரூபன் மக்களும் காத்து மக்களும், 'ஆண்டவரே கடவுள் என்பதற்கு நம் அனைவருக்கும் இப்பலிபீடமே சான்று' என்று சொல்லி அதற்குக் 'கிலயாது' [5] என்று பெயரிட்டனர்.

குறிப்புகள்

[1] 22:2 = எண் 32:20-32; யோசு 1:12-15.
[2] 22:16 = இச 12:13-14.
[3] 22:17 = எண் 25:1-9.
[4] 22:20 = யோசு 7:1-26.
[5] 22:34 எபிரேயத்தில், 'சான்று' என்பது இதன் பொருள்.

(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 23 முதல் 24 வரை