பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

உந்தூழ்–பெருமூங்கில்–கழை
பாம்பூசா அருண்டினேசியா
(Bambusa arundinacea, willd.)

குறிஞ்சிப் பாட்டில் இடம் பெற்ற ‘உந்தூழ்’ எனப்படும் பெருமூங்கில் புறக்காழ் உடைமையின் புல்லெனப்படும். இது ஒரு வலிய பல்லாண்டு வாழ்ந்து ஒரு முறை பூக்கும் புதர்ச்செடி.

இதன் அரிசிக்கு ‘அரி’ என்று பெயர். ‘அரி’ என்பதற்கு ‘மூங்கிலரிசி’ என்று உரை கூறுவர்.

சங்க இலக்கியப் பெயர் : உந்தூழ்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : கழை, வெதிர், வெதிரம்
தாவரப் பெயர் : பாம்பூசா அருண்டினேசியா
(Bambusa arundinacea, willd.)

உந்தூழ் இலக்கியம்

‘உந்தூழ்’ என்பதற்குப் ‘பெருமூங்கில் பூ’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். குறிஞ்சிப் பாட்டில் கபிலர் இதனை,

“உரிதுகாறு அவிழ் தொத்து உந்தூழ்” -குறிஞ். 65

என்று இதற்கு மூன்று அடைகொடுத்துப் பாடினார். ‘தொத்துந்தூழ்’ என்னும் கபிலர் தொடரை, தொத்து உந்தூழ் என்றே பிரித்தனர் நச்சினார்க்கினியர். மலைபடுகடாத்தில் ‘அலமரு முந்தூழ்’ என்று இது கூறப்படுகின்றது.

“. . . . . . . . . . . . பயம்புக்கு
 ஊழ்உற்று அலமரும் உந்தூழ். . . . ”
-மலைப. 132-133

‘அலமருமுந்தூழ்’ என்ற தொடரை அலமரும் உந்தூழ் என்றும் பிரிக்கலாம். அலமரும் முந்தூழ் என்றும் பிரிக்கலாம். நச்சினார்க்கினியர் இங்கேயும் ‘உந்தூழ்’ என்றே பிரித்து உரை கண்டார்.