திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 37 முதல் 38 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்" (திபா 38 [37]). விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

திருப்பாடல்கள்[தொகு]

முதல் பகுதி (1-41)
திருப்பாடல்கள் 37 முதல் 38 வரை

திருப்பாடல் 37[தொகு]

பொல்லார், நல்லார் முடிவுகள்[தொகு]

(தாவீதுக்கு உரியது)


1 தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே;
பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே;


2 ஏனெனில், அவர்கள் புல்லைப் போல்
விரைவில் உலர்ந்து போவர்;
பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.


3 ஆண்டவரை நம்பு;
நலமானதைச் செய்;
நாட்டிலேயே குடியிரு;
நம்பத் தக்கவராய் வாழ்.


4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;
உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.


5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;
அவரையே நம்பியிரு;
அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.


6 உன் நேர்மையைக் கதிரொளி போலும்,
உன் நாணயத்தை நண்பகல் போலும்
அவர் விளங்கச் செய்வார்.


7 ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு;
தம் வழியில் வெற்றி காண்போரையும்
சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து
எரிச்சல் கொள்ளாதே.


8 வெஞ்சினம் கொள்ளாதே;
வெகுண்டெழுவதை விட்டுவிடு;
எரிச்சலடையாதே;
அதனால் தீமைதான் விளையும்.


9 தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்;
ஆண்டவருக்காகக் காத்திருப்போரே
நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.


10 இன்னும் சிறிதுகாலம்தான்;
பிறகு பொல்லார் இரார்;
அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால்
அவர்கள் அங்கே இரார்.


11 எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்;
அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர். [*]


12 பொல்லார் நேர்மையாளருக்குத்
தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்;
அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர்.


13 என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்;
அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார்.


14 எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும்,
நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும்
பொல்லார் வாளை உருவுகின்றனர்;
வில்லை நாணேற்றுகின்றனர்.


15 ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்;
அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.


16 பொல்லாரின் திரளான செல்வத்தைவிட
நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.


17 பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்;
ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார்.


18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்;
அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.


19 கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை;
பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள்.


20 ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்;
ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர்.
அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.


21 பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்;
நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.


22 இறைவனின் ஆசி பெற்றோர்
நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;
அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.


23 தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட
மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.


24 அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்;
ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்.


25 இளைஞனாய் இருந்திருக்கிறேன்;
இதோ! முதியவன் ஆகிவிட்டேன்;
ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை;
அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.


26 நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்;
அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர்.


27 தீமையினின்று விலகு;
நல்லது செய்;
எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.


28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்;
தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;
அவர்களை என்றும் பாதுகாப்பார்.
பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர்.


29 நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;
அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.


30 நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்;
அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.


31 கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது;
அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.


32 பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்;
அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.


33 ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை
அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்;
நீதி விசாரணையின்போது அவர்களைத்
தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார்.


34 ஆண்டவருக்காகக் காத்திரு;
அவர்தம் வழியைப் பின்பற்று;
அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி
அவர் உன்னை உயர்த்துவார்.
பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய்.


35 வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல்
கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன்.


36 ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்;
அந்தோ! அவர்கள் அங்கில்லை;
தேடிப் பார்த்தேன்; அவர்களைக் காணவில்லை.


37 சான்றோரைப் பார்;
நேர்மையானவரைக் கவனி;
அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர்.


38 அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்;
பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர்.


39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது,
நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.


40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்;
பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்;
அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.


குறிப்பு

[*] 37:11 = மத் 5:5.


திருப்பாடல் 38[தொகு]

துன்புற்றவரின் மன்றாட்டு[தொகு]

(தாவீதின் புகழ்ப்பா; நினைவுகூர்தலுக்காகப் பாடியது)


1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்;
என் மீது சீற்றம்கொண்டு என்னைத் தண்டியாதேயும்;


2 ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன;
உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது.


3 நீர் கடுஞ்சினங்கொண்டதால் என் உடலில் நலமே இல்லை;
என் பாவத்தால் என் எலும்புகளில் வலுவே இல்லை.


4 என் குற்றங்கள் தலைக்குமேல் போய்விட்டன;
தாங்கவொண்ணாச் சுமைபோல
அவை என்னை வெகுவாய் அழுத்துகின்றன.


5 என் புண்கள் அழுகி நாற்றமெடுக்கின்றன;
என் மதிகேடுதான் இதற்கெல்லாம் காரணம்.


6 நான் மிகவும் ஒடுங்கிப்போனேன்;
நாளெல்லாம் துயருற்றுத் திரிகின்றேன்.


7 என் குடல் முற்றிலும் வெந்து போயிற்று;
என் உடலில் சற்றேனும் நலம் இல்லை.


8 நான் வலுவற்றுப் போனேன்;
முற்றிலும் நொறுங்கிப்போனேன்;
என் உள்ளக் கொதிப்பினால் கதறுகின்றேன்.


9 என் தலைவரே, என் பெருமூச்செல்லாம் உமக்குத் தெரியும்;
என் வேதனைக் குரல் உமக்கு மறைவாயில்லை.


10 என் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது;
என் வலிமை என்னைவிட்டு அகன்றது;
என் கண்களும்கூட ஒளி இழந்தன.


11 என் நண்பர்களும் தோழர்களும்
நான் படும் வாதை கண்டு விலகி நிற்கின்றனர்;
என் உறவினரும் என்னைவிட்டு ஒதுங்கி நிற்கின்றனர்.


12 என் உயிரைப் பறிக்கத்தேடுவோர்
எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;
எனக்குத் தீங்கிழைக்கத் துணிந்தோர்
என் அழிவைப் பற்றிப் பேசுகின்றனர்;
எப்போதும் எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.


13 நானோ செவிடர்போல் காது கேளாமலும்
ஊமைபோல் வாய் திறவாமலும் இருக்கின்றேன்.


14 உண்மையாகவே, நான் செவிப்புலனற்ற மனிதர்போலும்
மறுப்புரை கூறாத நாவினர் போலும் ஆனேன்;


15 ஏனெனில் ஆண்டவரே,
நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்;
என் தலைவராகிய கடவுளே, செவிசாய்த்தருளும்.


16 'அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க விடாதேயும்;
என் கால் தடுமாறினால் அவர்கள் பெருமை கொள்வர்' என்று சொன்னேன்.


17 நான் தடுமாறி விழும் நிலையில் இருக்கின்றேன்;
நான் எப்போதும் வேதனையில் உள்ளேன்.


18 என் குற்றத்தை நான் அறிக்கையிடுகின்றேன்;
என் பாவத்தின் பொருட்டு நான் அஞ்சுகின்றேன்.


19 காரணமின்றி என்னைப் பகைப்போர் வலுவாய் உள்ளனர்;
வீணாக என்னை வெறுப்போர் பலராய் உள்ளனர்;


20 நன்மைக்குப் பதிலாக அவர்கள் எனக்குத் தீமை செய்கின்றனர்;
நன்மையே நாடும் என்னைப் பகைக்கின்றனர்;


21 ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்;
என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும்.


22 என் தலைவரே! மீட்பரே!
எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 39 முதல் 40 வரை