20
வ. உ. சி.
இதனால் பாமரரையும் பண்டிதரையும் ஒருங்கே கவர்ந்தார்.
பொது வாழ்வு
வ.உ.சி. ஏழைகளது நியாயத்துக்காகப் போராடுகிற வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு பிரிட்டிஷ் ஆட்சியே, ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குக் காரணம் என்பதை உணர்ந்து, போலீசையும், அதிகாரிகளில் ஊழல்காரர்களையும் எதிர்த்தார். பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியையே எதிர்க்கும் இயக்கத்தோடு ஒன்றினார். பிரிட்டிஷ் ஆட்சியையே ஒழிப்பதற்காக மக்களைத் திரட்ட வேண்டும் என்ற திலகர் கொள்கையைக் கடைப்பிடித்துப் பல துறை இயக்கங்களில் ஈடுபடலானார். அவரது பணிகள் விரிவடைந்தன.
மூன்று இயக்கங்களில் அவர் கவனம் செலுத்தினார். அவை கூட்டுறவு இயக்கம், தொழிலாளர் இயக்கம், சுதேசி இயக்கம் என்பவை.
தூத்துக்குடியில் ‘சுதேசிப் பண்டசாலை’ என்ற பெயரில் , சுதேசப் பொருள்களை வாங்க விற்பனை செய்யும் நிறுவனத்தை அமைத்தார். ஒரு நூற்பாலையைக் கட்டி வேலை தொடங்கினார். ‘சென்னை விவசாய சங்கம்’ என்றதோர் அமைப்பையும் தோற்றுவித்தார். இவற்றின் நோக்கம் சுதேசி இயக்கத்தை வலுவாக வளர்ப்பதாகும். இது அந்நியப் பொருள் வணிகத்தைக் குறைத்துப் படிப்படியாக ஒழிப்பதற்கான அடிப்படையாகும்.
இவற்றின் பொது நோக்கம் தொழிலாளி, விவசாயி, நடுத்தர வர்க்கத்தார் ஆகியவர்களிடையே, நம்பிக்கையை வளர்த்து, தேசிய இயக்கம் என்னும் பிரதான வெள்ளத்தில், இந்த நீரோடைகளைச் சங்கமிக்கச் செய்வதாகும். இந்நிறுவனம் ஒவ்வொன்றும் தேசிய இயக்கத்தின் பயிற்சிப் பள்ளிகளாகப் பணிபுரிந்தன.
‘சென்னை விவசாய சங்கத்தின்’ நோக்க அறிக்கையில் கீழ்வரும் வரிகள் காணப்பட்டன:
1 தொழிலாளர், விவசாயிகளது வாழ்க்கைத் தரத்தை மேம்பாடடையச் செய்வது.
2 தொழிலிலும் விவசாயத்திலும், நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி, அவற்றை வளர்ப்பது.
3 நமது மாணவர்களுக்காக சுதேசியத் தொழிற் பள்ளிகள் ஆரம்பித்துப் பயிற்சியளிப்பது.