நெ. து. சுந்தரவடிவேலு 17
நல்ல அலுவலர்களைத் தட்டிக் கொடுத்து, முன்னர் நினைத்துக்கூட பார்க்க முடியாத, பொதுத் தொண்டுகளை நிறைவேற்றி வைக்க முடிந்தது. அதைவிடப் பெரியதையும் மகத்தானதையும் செய்யவும் முடிந்தது.
பதினோர்.ஆண்டு காலம், எல்லா நிலைக் கல்விக்கும் பொதுக் கல்வி இயக்குநராக இயங்கிய போதும், எவர் ஒருவரையும் வேலை நீக்கம் செய்யாமலும், ஊழல் கண்காணிப்புத் துறையிடம் யாரையும் பலி கொடுக்காமலும் காப்பாற்றி, வேலை வாங்க முடிந்தது.
பெரியவர்களின் நேரடி உதவியைக் காட்டிலும் அவர்களுடைய நற்கருத்துகள் பெருந்துணையாக இருந்தன.
இயக்குநர் ஸ்டேதம் அவ் வழியில் எனக்கு உதவி செய்தார்.
இது இளைஞர்களின் உள்ளங்களில் பதிந்துவிட்டால், பெரியவர் களின் பட்டறிவைத் தங்களுடையதாக்கிக் கொண்டால், எவ்வளவோ உயரலாம்!
பெறவேண்டியவர்களிடம் வாழ்த்தினைப் பெற்ற பின், கோவை செல்வதைப் பற்றிச் சிந்தித்தேன்.
கோவைக்குச் சென்றேன்
அங்கே எங்கே தங்குவது? ஊர் சுற்றிப் பழக்கப்படாத எனக்கு, அது மலைப்பாக இருந்தது.
நண்பர் டி. டி. அய்யாசாமியோடு தொடர்பு கொண்டேன்; ஆலோசனை கேட்டேன்; உதவி கிடைத்தது.
‘நம் சி. சுப்பிரமணியம் இருக்கும்போது, கவலை எதற்கு அவர், புகைவண்டி நிலையத்திற்கு அருகில், தனி பங்களா வைத்துக் கொண்டிருக்கிறார். சமையலுக்கு ஆள் இருக்கிறான். நேரே அங்கே போ அவரோடு தங்கிக்கொள். அப்புறம் வீடு தேடு. அவர் உதவினால் விரைவில் வீடு கிடைக்கலாம்’ என்றார்.
நான் தயக்கம் காட்டினேன். ‘வனமலர்ச் சங்க அண்ணன் வீட்டிற்குப் போக கூச்சம் வேண்டாம். உன் வருகையை அவர் சுமையாகக் கருதமாட்டார். நல்ல வளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், இன்னும் திருமணமாகாதவர்; விருந்தோம்பலுக்குச்சுனங்காதவர்; தாராளமாகப் போய் இரு’ என்று அய்யாசாமி அறிவுறுத்தினார்.
அவ்வளவு சொல்லியும் தயங்கினேன்.