1 14 நினைவு அலைகள்
சென்னையில் ஏதாவது ஒரு பள்ளியில் வேலை பெறப் பட்டபாடு கொஞ்சமல்ல. தமிழ்ப் பற்றாளர்கள் உதவ முன் வரவில்லை. அம்மையாரின் பள்ளித் தோழியாகிய டாக்டர் இரஷ்ஷியா சில பெரியவர்களை நேரில் கேட்டுப் பார்த்தார்.
ஒருவர் மற்றவருக்குக் கைகாட்டுவதற்குப் போகவில்லை.
இறுதியில் மராட்டியப் பார்ப்பனராகிய திருமதி. மந்தாகினி கிருஷ்ணமூர்த்தி அம்மையார் பரிவு கொண்டு உதவ, அவர் தயவால் எங்கோ தற்காலிக வேலை கிடைத்தது.
எம்.ஏ. பட்டம் பெற்ற மகளுக்கு எப்போது கிடைக்கும் வேலை என்று ஏங்குகிறார் அந்த அம்மையார்.
16. சேலம் கல்லூரி முதல்வர் இராமசாமி கவுண்டர் எம்.ஏ., எல்.டி.
சேலத்திலிருந்த நான், சென்னைக்குத் தாவினேன்; 1944-இல் இருந்து 1982-க்குத் தாவினேன்.
இதுவே மனத்தினுடைய தனியாற்றல்; இது குறும்பாகப் பயன்படுவதுமுண்டு.
சென்ற காலத் தீமைகளை நினைவுபடுத்தி, பகையைப் பயிரிடும் போது, கேடானதே அத்தகைய தாவல்.
மீண்டும் 1944 ஆம் ஆண்டிற்குச் செல்வோம்.
சேலம் மாவட்டத்தில் நான் பணி ஆற்றிய காலம், சாதனைகளும் வேதனைகளும் கலந்தவை.
அங்கே சில அருமையான நண்பர்கள் கிடைத்தார்கள்.
அவர்களுடைய நட்பு உண்மையானது; ஆதாயங்கருதாதது: வாழ்நாள் முழுவதும் வளர்ந்தது; நினைக்க நினைக்க இனிப்பானது.
கல்லுரி முதல்வர்
என் உயிருக்கு உயிரான நண்பர்களில் ஒருவர், திரு. அ. இராமசாமி கவுண்டர் என்னும் உத்தமர்.
அவர் யார்?
அவர், அன்றைய சேலம் நகராட்சிக் கல்லூரியின் முதல்வர். புருவத்தை உயர்த்தாதீர்கள். *