திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 35 முதல் 36 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே. கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு;." - சீராக்கின் ஞானம் 35:7-8

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 35 முதல் 36 வரை

அதிகாரம் 35[தொகு]

திருச்சட்டமும் பலிகளும்[தொகு]


1 திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பது பல காணிக்கைகளைக் கொடுப்பதற்கு ஈடாகும்.
கட்டளைகளைக் கருத்தில் கொள்வது நல்லுறவுப் பலி செலுத்துவதற்கு ஒப்பாகும்.


2 அன்புக்குக் கைம்மாறு செய்வது மாவுப் படையல் அளிப்பதற்கு இணையாகும்.
தருமம் செய்வது நன்றிப்பலி செலுத்துவதாகும்.


3 தீச்செயலை விட்டுவிடுதல் ஆண்டவருக்கு விருப்பமானது;
அநீதியைக் கைவிடுதல் பாவக் கழுவாய்ப் பலியாகும்.


4 ஆண்டவர் திருமுன் வெறுங்கையோடு வராதே;
கட்டளையை நிறைவேற்றவே பலிகளையெல்லாம் செலுத்து.


5 நீதிமான்கள் காணிக்கைகளைச் செலுத்தும்போது பலிபீடத்தில் கொழுப்பு வழிந்தோட,
உன்னத இறைவன் திருமுன் நறுமணம் எழுகிறது.


6 நீதிமான்களின் பலி ஏற்றுக்கொள்ளத்தக்கது;
அதன் நினைவு என்றும் நீங்காது.


7 ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து;
உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே.


8 கொடை வழங்கும்போதெல்லாம் முகமலர்ச்சியோடு கொடு;
பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு கடவுளுக்கு உரித்தாக்கு.


9 உன்னத இறைவன் உனக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப நீயும் அவருக்குக் கொடு;
உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு. [1]


10 ஆண்டவரே கைம்மாறு செய்பவர்;
ஏழு மடங்கு உனக்குத் திருப்பித் தருபவர்.

இறை நீதி[தொகு]


11 ஆண்டவருக்குக் கையூட்டுக் கொடுக்க எண்ணாதே;
அவர் அதை ஏற்கமாட்டார்.
அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே.


12 ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்;
அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது.


13 அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்;
தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார்.


14 கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார்.
தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்.


15 கைம்பெண்களின் கண்ணீர் அவர்களுடைய கன்னங்களில் வழிந்தோடுவதில்லையா?
அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தவர்களுக்கு எதிராக அவர்களது அழுகுரல் எழுவதில்லையா?


16 ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர்.
அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும்.


17 தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்;
அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை.


18 உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை
அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை;
அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்;
தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார். [2]


19 [அ.] ஆண்டவர் காலம் தாழ்த்தமாட்டார்.


20 இரக்கமற்றோரின் இடுப்பை அவர் முறித்துப்
பிற இனத்தார்மீது பழி தீர்க்கும்வரை,


21 இறுமாப்புக் கொண்டோரின் கூட்டத்தை அழித்து
அநீதர்களின் செங்கோல்களை முறிக்கும்வரை,


22 மனிதருக்கு அவரவர் செயல்பாட்டுக்கு ஏற்பக் கைம்மாறு செய்யும்வரை,
அவரவர் எண்ணத்திற்கு ஏற்ப அவர்களின் செயல்களுக்கு ஈடு செய்யும்வரை,


23 தம் மக்களின் வழக்கில் அவர் நீதித் தீர்ப்பிட்டு
அவர்களைத் தம் இரக்கத்தினால் மகிழ்விக்கும்வரை,


19 [ஆ.] அவர்களிடம் பொறுமை காட்டமாட்டார்.


24 வறட்சிக் காலத்தில் தோன்றும் கார் முகில்போலத்
துன்பக் காலத்தில் அவரின் இரக்கம் வரவேற்கத்தக்கது.


குறிப்புகள்

[1] 35:8-9 = 2 கொரி 9:7.
[2] 35:17-18 = சீஞா 21:5; விப 3:9; புல 3:44.

அதிகாரம் 36[தொகு]

இஸ்ரயேலுக்காக மன்றாட்டு[தொகு]


1 எல்லாவற்றிற்றும் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாயிரும்;
எங்களைக் கண்ணோக்கும்;
உம்மைப்பற்றிய அச்சம் எல்லா நாடுகள் மீதும் நிலவச் செய்யும்.


2 அயல் நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும்.
அவர்கள் உம் வலிமையைக் காணட்டும்.


3 அவர்கள் முன்னிலையில் எங்கள் வழியாக உமது தூய்மையைக் காட்டியது போல்,
எங்கள் முன்னிலையில் அவர்கள் வழியாக உமது மாட்சியைக் காட்டும்.


4 ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல்
அவர்களும் உம்மை அறிந்து கொள்ளட்டும்.


5 புதிய அடையாளங்களை வழங்கும்;
வியத்தகு செயல்களை நிகழ்த்தும்;
உம் கையினை, வலக்கையினை மாட்சிமைப்படுத்தும்.


6 சினத்தைத் தூண்டிச் சீற்றத்தைப் பொழியும்;
எதிரியை ஒழித்துப் பகைவரைப் பாழாக்கும்.


7 காலத்தை விரைவுபடுத்தி ஆணையை நினைவுகூரும்;
அவர்கள் உம் அரும் பெரும் செயல்களை எடுத்துரைக்கட்டும்.


8 தப்பிப் பிழைத்தோரைச் சினம் என்னும் நெருப்பு விழுங்கட்டும்;
உம் மக்களுக்குத் தீங்கிழைப்போர் அழிவைக் காணட்டும்.


9 'எங்களைத்தவிர வேறு யாரும் இல்லை'
எனக் கூறும் பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும்.


10 யாக்கோபின் குலங்களை ஒன்று கூட்டும்;
தொடக்கத்தில்போன்று அவர்களை உமது உரிமைச்சொத்தாக்கும்.


11 ஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கங் காட்டும்;
உம் தலைப்பேறாகப் பெயரிட்டழைத்த இஸ்ரயேலுக்குப் பரிவுகாட்டும்.


12 உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது,
நீர் ஓய்வுகொள்ளும் இடமாகிய எருசலேம்மீது கனிவு காட்டும்.


13 உமது புகிழ்ச்சியால் சீயோனை நிரப்பும்;
உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும்.


14 தொடக்கத்தில் நீர் படைத்தவற்றுக்குச் சான்று பகரும்;
உம் பெயரால் உரைக்கப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றும்.


15 உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்;
உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும்.


16 ஆண்டவரே, உம் மக்களுக்கு ஆரோன் வழங்கிய ஆசிக்கு ஏற்ப
உம்மிடம் மன்றாடுவோரின் வேண்டுதலுக்குச் செவிசாயும்.


17 அப்போது, நீரே ஆண்டவர், என்றுமுள கடவுள் என்பதை
மண்ணுலகில் உள்ள எல்லோரும் அறிந்துகொள்வர். [*]

வேறுபாடு கண்டறிதல்[தொகு]


18 வயிறு எல்லா வகை உணவுகளையும் உட்கொள்கிறது;
எனினும் ஒரு வகை உணவு மற்றொன்றைவிட மேலானது.


19 வேட்டையாடிய உணவினை நாக்கு சுவைத்து அறிகிறது;
அறிவுக்கூர்மை கொண்ட உள்ளம் பொய்யைப் பிரித்தறிகிறது.


20 மனக்கோட்டம் கொண்டோர் வருத்தத்தைக் கொடுப்பர்;
பட்டறிவு கொண்டோர் அவர்களுக்கு எதிரடி கொடுப்பர்.

மனைவியைத் தேர்ந்துகொள்ளல்[தொகு]


21 ஒரு பெண் எந்த ஆணையும் கணவனாக ஏற்றுக்கொள்வாள்;
ஆனால், ஆணுக்கு ஒரு பெண்ணைவிட மற்றொருத்தி மேம்பட்டவளாகத் தோன்றுவாள்.


22 பெண்ணின் அழகு அவளுடைய கணவனை மகிழ்விக்கும்;
அவன் வேறு எதையும் அவ்வளவு விரும்புவதில்லை.


23 அவளது பேச்சில் இரக்கமும் கனிவும் இருக்குமானால்
அவளுடைய கணவன் மற்ற மனிதர்களைவிட நற்பேறு உடையவன்.


24 மனைவியை அடைகிறவன் உயர்ந்த உடைமையைப் பெறுகிறான்;
தனக்கு ஏற்ற துணையையும் ஆதரவு தரும் தூணையும் அடைகிறான்.


25 வேலி இல்லையேல் உடைமை கொள்ளையடிக்கப்படும்;
மனைவி இல்லையேல் மனிதன் பெருமூச்சு விட்டு அலைவான்.


26 நகர்விட்டு நகருக்குத் தப்பியோடும் திறமையான திருடனை யாரே நம்புவர்?


27 அவ்வாறே, தங்குவதற்கு இடம் இல்லாமல்,
இரவு வந்ததும் கண்ட இடத்திலும் தங்கும் மனிதனை எவர் நம்புவர்?


குறிப்பு

[*] 36:17 = 1 அர 8:60.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 37 முதல் 38 வரை