திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான்.
ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது." - சீராக்கின் ஞானம் 42:16

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 41 முதல் 42 வரை

அதிகாரம் 41[தொகு]

இறப்பு[தொகு]


1 ஓ, சாவே! தம் உடைமைகளோடு அமைதியாய் வாழ்வோருக்கும்
எவ்வகைக் கவலையுமின்றி எல்லாவற்றிலும் வளமை அடைவோருக்கும்
நல்ல உணவைச் சுவைத்து மகிழ இன்னும் வலிமையுள்ளோருக்கும்
உன் நினைவு எத்துணைக் கசப்பாய் உள்ளது!


2 ஆனால், ஓ, சாவே! வறுமையுற்யோருக்கும் வலிமை குன்றியோருக்கும்
முதியோருக்கும் பொறுமை இழந்தோருக்கும் உன் முடிவு வரவேற்கத்தக்கது!


3 இறப்பின் தீர்ப்புக்கு அஞ்சாதே!
உனக்குமுன் இருந்தவர்களையும்
உனக்குப்பின் வரப்போகிறவர்களையும் எண்ணிப்பார்.


4 இந்தத் தீர்ப்பை எல்லா மனிதருக்கும் ஆண்டவர் விதித்துள்ளார்.
பின்பு ஏன் உன்னத இறைவனின் விருப்பத்தை ஏற்க மறக்கிறாய்?
நீ வாழ்ந்தது பத்து ஆண்டா, நூறு ஆண்டா, ஆயிரம் ஆண்டா
என்பதுபற்றிப் பாதாளத்தில் கேள்வி எழாது.

பாவிகளின் வழிமரபினர்[தொகு]


5 பாவிகளின் மக்கள் அருவருப்புக்குரிய மக்களாவர்;
இறைப்பற்றிலாதோரின் பதுங்கிடத்தில் அவர்கள் கூடுவர்.


6 பாவிகளுடைய மக்களின் உரிமைச்சொத்து அழிந்துபோகும்;
அவர்களுடைய வழிமரபில் இகழ்ச்சியே நிலைக்கும்.


7 இறைப்பற்றில்லாத தந்தையைப் பற்றி மக்கள் முறையிடுவார்கள்;
அவர்கள் அவரால் இகழ்ச்சி அடைவார்கள்.


8 இறைப்பற்றில்லாதவர்களே, ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!
உன்னத இறைவனின் திருச்சட்டத்தைக் கைவிட்டவர்களே,
ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!


9 நீங்கள் பிறந்தபோது சாபத்திற்குப் பிறந்தீர்கள்;
நீங்கள் சாகும்போது சாபமே உங்கள் பங்காகும்.


10 மண்ணிலிருந்து வந்ததெல்லாம் மண்ணுக்கே திரும்பும்;
இறைப்பற்றில்லாதோரும் சாபத்திலிருந்து அழிவுக்குச் செல்வர்.


11 மனிதர் தங்களது உடலைப் பற்றியே புலம்புவர்.
பாவிகளுடைய கெட்ட பெயர் துடைக்கப்படும்.

நற்பெயர்[தொகு]


12 உன் பெயரைப்பற்றி அக்கறை கொள்;
ஆயிரம் பெரிய பொற் புதையல்களை விட உனக்கு அது நிலைத்து நிற்கும்.


13 நல்வாழ்க்கை சில நாள்களே நீடிக்கும்;
நற்பெயர் என்றென்றும் நிலைக்கும்.

வெட்கம்[தொகு]


14 குழந்தைகளே, நற்பயிற்சியை அமைதியாய்க் கடைப்பிடியுங்கள்.
மறைக்கப்பட்ட ஞானம், காணப்படாத புதையல்
இவை இரண்டாலும் என்ன பயன்?


15 தம் ஞானத்தை மறைக்கும் மனிதரைவிடத்
தம் மடமையை மறைக்கும் மானிடர் சிறந்தோர்.


16 ஆகவே எந்தெந்தச் சூழலில் நாணம் காக்கவேண்டும் என
உங்களுக்குக் கூறுவேன்:
சில வேளைகளில் நாணம் காப்பது நல்லதல்ல;
எல்லாவகை நாணத்தையும் ஏற்றுக்கொள்ளலாகாது.


17 உங்கள் தாய் தந்தையர் முன்னிலையில்
கெட்ட நடத்தைபற்றி நாணம் கொள்ளுங்கள்;
ஆட்சியாளர்முன்னும் வலியோர் முன்னும்
பொய்யைப் பற்றி வெட்கப்படுங்கள்.


18 நடுவர்முன்னும் ஆளுநர் முன்னும் குற்றத்தைப் பற்றியும்,
தொழுகைக் கூடத்திலும் மக்கள் முன்னும் சட்ட மீறல்பற்றியும்,


19 தோழர் முன்னும் நண்பர்முன்னும் அநீதிபற்றியும்,
நீங்கள் வாழ்கின்ற இடத்தில் திருட்டைப்பற்றியும்,


20 ஆணையையும் உடன்படிக்கையையும் முறித்தல்பற்றியும், [*]
உணவு மேசை மீது உன் முழங்கைகளை வைப்பதுபற்றியும்,


21 கொடுக்கும்போதும் வாங்கும்போதும் மதியாமை பற்றியும்,
வணக்கம் செலுத்துவோர்முன் அமைதி காத்தல் பற்றியும்,


22 விலைமாதரை நோக்குவதுபற்றியும்,
உறவினரின் விண்ணப்பத்தை புறக்கணிப்பது பற்றியும்,


23 அடுத்தவரின் பங்கையும் பரிசையும் பறித்துக்கொள்வதுபற்றியும்,
மணமான பெண்ணை உற்றுநோக்குவதுபற்றியும்


24 ஒருவருடைய பணிப் பெண்ணோடு தகாத பழக்கம் வைத்துக்கொள்வது பற்றியும், -
அவளுடைய படுக்கையை நெருங்காதே -


25 நண்பர்களைத் திட்டுவதுபற்றியும், -
அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியபின் அவர்களை இகழாதே -


26 நீங்கள் கேள்வியுற்றதைத் திருப்பிச் சொல்வதுபற்றியும்
இரகசியங்களை வெளிப்படுத்துவது பற்றியும் வெட்கப்படுங்கள்.


27 அப்போது நீங்கள் உண்மையான நாணம் கொள்வீர்கள்;
எல்லா மனிதரின் பரிவும் உங்களுக்குக் கிடைக்கும்.


குறிப்பு

[*] 41:20 - இது எபிரேய பாடம். கிரேக்க பாடத்தில்
"கடவுளின் உண்மைக்கும் உடன்படிக்கைக்கும் முன்" என உள்ளது.


அதிகாரம் 42[தொகு]


1 பின்வருபவைபற்றி நாணம் கொள்ளாதே;
மனிதருக்கு மட்டுமீறிய மதிப்பு அளிப்பதால் பாவம் செய்யாதே.


2 உன்னத இறைவனின் திருச்சட்டம் பற்றியும்,
உடன்படிக்கை பற்றியும்,
இறைப்பற்றில்லாதோரை விடுவிக்கும் தீர்ப்புப் பற்றியும்,


3 நண்பர்களோடும் வழிப்போக்கரோடும் உரையாடுவது பற்றியும்,
தோழர்களின் உரிமைச் சொத்திலிருந்து கொடுப்பது பற்றியும்,


4 சரியான துலாக்கோலையும் எடைகளையும் பயன்படுத்துவது பற்றியும்,
மிகுதியாகவோ குறைவாகவோ பொருள் ஈட்டுவதுபற்றியும்


5 வாணிபத்தில் வரும் ஆதாயம் பற்றியும்,
பிள்ளைகளை நன்கு பயிற்றுவது பற்றியும்,
கெட்ட அடிமையைக் குருதி சிந்த அடிப்பது பற்றியும் நாணம் கொள்ளாதே.


6 கெட்ட மனைவியைக் காவலில் வைத்திருப்பது நல்லது;
பலர் இருக்கும் இடத்தில் பொருள்களைப் பூட்டிவை.


7 எதைக் கொடுத்தாலும் கணக்கிட்டு நிறுத்துக்கொடு;
கொடுக்கல் வாங்கல் எல்லாவற்றையும் குறித்துவை.


8 அறிவிலிகளையும் மூடர்களையும்
கூடா ஒழுக்கத்தில் ஈடுபட்டு குற்றம் புரியும் முதியோரையும்
கண்டித்துத் திருத்துவதுபற்றி நாணம்கொள்ளாதே;
அப்போது நீ உண்மையிலேயே நற்பயிற்சி பெற்றவனாய் இருப்பாய்;
வாழ்வேர் அனைவருக்கும் ஏற்புடையவன் ஆவாய்.

மகளைப்பற்றிய தந்தையின் கவலை[தொகு]


9 தந்தை தம் மகளுக்கும் தெரியாமல்
அவளைப்பற்றி விழிப்பாய் இருக்கிறார்;
அவளைப்பற்றிய கவலை அவரது உறக்கத்தை விரட்டியடிக்கிறது.
இளமையிலே அவளுக்குத் திருமணம் ஆகாமல் போய்விடுமோ எனவும்
திருமணமானபின் அவள் வெறுக்கப்படுவாளோ எனவும் அவர் கவலைப்படுகிறார்.


10 கன்னிப்பருவத்திலேயே அவள் கெட்டுப்போகாதபடியும்
தம் வீட்டிலேயே கருவுற்றவள் ஆகாதபடியும்
கணவருடன் இருக்கும்போது நெறி தவறாதபடியும்
திருமணமானபின் மலடி ஆகாதபடியும்
அவர் கவலையாய் இருக்கிறார்.


11 அடக்கமற்ற மகள்மேல் கண்ணும் கருத்துமாய் இரு;
இல்லையேல், பகைவரின் நகைப்புக்கும்
நகரின் ஏச்சுக்கும் மக்களின் பேச்சுக்கும்
அவள் உன்னை ஆளாக்குவாள்;
நகர் மன்றத்தில் உன்னை வெட்கத்திற்கு உட்படுத்துவாள். [1]

பெண்கள்[தொகு]


12 அழகுக்காக எந்த மனிதரையும் நோக்காதே;
பெண்களின் நடுவில் அமராதே.


13 ஆடையிலிருந்து அந்துப்பூச்சி தோன்றுகிறது;
பெண்ணிடமிருந்தே பெண்ணின் ஒழுக்கக்கேடு வருகிறது.


14 பெண்ணே வெட்கத்தையும் இழிவையும் கொணர்கிறாள்.
இத்தகைய பெண் செய்யும் நன்மையை விட
ஆண் செய்யும் தீமை பரவாயில்லை.

இயற்கையில் கடவுளின் மாட்சி[தொகு]


15 இப்போது ஆண்டவருடைய செயல்களை நினைவுபடுத்துவேன்;
நான் கண்டவற்றை எடுத்துரைப்பேன்.
ஆண்டவருடைய சொல்லால் அவருடைய செயல்கள் உண்டாகின்றன.


16 ஒளிரும் கதிரவன் அனைத்தையும் காண்கின்றான்.
ஆண்டவருடைய செயல் அவருடைய மாட்சியால் நிறைந்துள்ளது.


17 அனைத்தையும் தமது மாட்சியில் நிலைநிறுத்திய எல்லாம் வல்ல ஆண்டவர்,
தம் வியத்தகு செயல்கள் எல்லாவற்றையும் எடுத்துரைக்கும்படி
தம் தூயவர்களுக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை.


18 படுகுழியையும் மனித உள்ளத்தையும்
அவர் ஊடுருவி நோக்குகிறார்;
மனிதர்களுடைய சூழ்ச்சி நிறை எண்ணங்களை ஆராய்கிறார்.
அறியக்கூடியவற்றையெல்லாம் உன்னத இறைவன் அறிவார்;
காலத்தின் குறிகளை உற்றுநோக்குகிறார்.


19 நிகழ்ந்தவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும்
அவர் தெரியப்படுத்துகிறார்;
மறைந்திருப்பவற்றின் தடயத்தை வெளிப்படுத்துகிறார். [2]


20 எவ்வகை எண்ணமும் அவருக்குத் தெரியாமல் இருப்பதில்லை;
ஒரு சொல்கூட அவருக்கு மறைந்திருப்பதில்லை. [3]


21 அவர் தமது ஞானத்தின் அரும்பெரும் செயல்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்;
அவரே என்றென்றும் இருக்கின்றவர்.
யாதொன்றும் கூட்டப்படுவதில்லை, குறைக்கப்படுவதுமில்லை;
எவருடைய அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை. [4]


22 அவருடைய செயல்கள் அனைத்தும் எத்துணை விரும்பத்தக்கவை!
பார்ப்பதற்கு எத்துணைப் பளபளப்பானவை!


23 இவையெல்லாம் உயிரோடு இருக்கின்றன;
எல்லாத் தேவைகளுக்காகவும் என்றும் நிலைத்திருக்கின்றன;
எல்லாம் அடிபணிகின்றன.


24 எல்லாம் இரட்டையாய் உள்ளன;
ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது.
யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை.


25 ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவுசெய்கிறது.
அவருடைய மாட்சியை நிறைவாகக் காண்பவர் எவர்?


குறிப்புகள்

[1] 42:9-11 = சீஞா 7:24-25; 26:10-12.
[2] 42:19 = எசா 46:10.
[3] 42:20 = திபா 139:4.
[4] 42:21 = எசா 40:13.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 43 முதல் 44 வரை