திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

விக்கிமூலம் இலிருந்து
"குழலும் யாழும் இன்னிசை எழுப்புகின்றன;
இனிய சொல் இவ்விரண்டினும் சிறந்தது." - சீராக்கின் ஞானம் 40:21

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 39 முதல் 40 வரை

அதிகாரம் 39[தொகு]

மறைநூல் அறிஞர்[தொகு]


1 ஆனால் உன்னத இறைவனின் திருச்சட்டத்தைப் படிப்பதில் மனத்தைச் செலுத்துவோர்
தங்கள் முன்னோர் எல்லாருடைய ஞானத்தையும் தேடுவர்;
இறைவாக்குகளைப் படிப்பதில் ஈடுபட்டிருப்பர்.
2 பேர்பெற்றவர்களின் உரைகளைக் காப்பாற்றுவர்;
உவமைகளின் நுட்பங்களை ஊடுருவிக் காண்பர்.


3 பழமொழிகளின் உட்பொருளைத் தேடுவர்;
உவமைகளில் பொதிந்துள்ள புதிர்களை எளிதில் புரிந்துகொள்வர்.


4 பெரியோர்கள் நடுவே பணியில் அமர்வர்;
ஆள்வோர் முன்னிலையில் தோன்றுவர்;
அயல்நாடுகளில் பயணம் செய்வர்;
மனிதரிடம் உள்ள நன்மை தீமைகளை ஆய்ந்தறிவர்.


5 வைகறையில் துயிலெழுவர்;
தங்களைப் படைத்த ஆண்டவரிடம் தங்கள் உள்ளத்தைக் கையளிப்பர்;
உன்னத இறைவன் திருமுன் மன்றாடுவர்;
வாய் திறந்து வேண்டுவர்;
தங்கள் பாவங்களுக்காகக் கெஞ்சி மன்றாடுவர்.


6 மாண்புமிகு ஆண்டவர் விரும்பினால்,
அவர்கள் அறிவுக்கூர்மையால் நிரப்பப்படுவார்கள்;
தங்கள் ஞானத்தின் மொழிகளைப் பொழிவார்கள்;
தங்கள் வேண்டுதலில் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவார்கள்.


7 தங்கள் அறிவுரையையும் அறிவாற்றலையும்
நேரிய வழியில் செலுத்துவார்கள்;
ஆண்டவருடைய மறைபொருள்களைச் சிந்தித்துப் பார்ப்பார்கள்.


8 தாங்கள் கற்றறிந்த நற்பயிற்சியை விளக்கிக் காட்டுவார்கள்;
ஆண்டவருடைய உடன்படிக்கையின் திருச்சட்டத்தில் பெருமை கொள்வார்கள்.


9 பலர் அவர்களுடைய அறிவுக் கூர்மையைப் பாராட்டுவர்;
அவர்களது புகழ் ஒரு நாளும் நினைவிலிருந்து அகலாது;
அவர்களுடைய நினைவு மறையாது;
தலைமுறை தலைமுறைக்கும் அவர்களது பெயர் வாழும்.


10 நாடுகள் அவர்களது ஞானத்தை எடுத்துரைக்கும்.
மக்கள் சபையும் அவர்களது புகழ்ச்சியை அறிவிக்கும்.


11 அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தால்,
ஓராயிரம் பெயர்களைவிடப் புகழ்மிக்க பெயரை விட்டுச்செல்வார்கள்;
இறந்தாலும் அப்பெயரே அவர்களுக்குப் போதுமானது.

ஆண்டவரைப் புகழ அழைப்பு[தொகு]


12 நான் சிந்தித்தவற்றை இன்னும் எடுத்துரைப்பேன்;
முழு மதி போன்று அவற்றால் நிறைந்துள்ளேன்.


13 பற்றுறுதியுள்ள மக்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்;
நீரோடை அருகில் வளரும் ரோசாவைப்போன்று மலர்ந்து விரியுங்கள்.


14 சாம்பிராணி போன்று நறுமணம் பரப்புங்கள்;
லீலிபோன்று மலருங்கள்; நறுமணம் வீசுங்கள்;
புகழ்ப்பாடல் பாடுங்கள்;
ஆண்டவருடைய எல்லாச் செயல்களுக்காகவும் அவரைப் போற்றுங்கள்.


15 அவருடைய பெயரை மாட்சிமைப்படுத்துங்கள்;
உதடுகளில் எழும் இன்னிசையாலும் யாழ்களாலும்
அவருடைய புகழை அறிவியுங்கள்;
அறிவிக்கும்போது இவ்வாறு சொல்லுங்கள்:


16 "ஆண்டவருடைய செயல்களெல்லாமே மிக நல்லவை;
அவருடைய கட்டளையெல்லாம் குறித்த நேரத்தில் நிறைவேறும்."
'இது என்ன?; அது எதற்கு?' என யாரும் கூறக் கூடாது;
எல்லாவற்றுக்கும் குறித்த நேரத்தில் விளக்கம் கொடுக்கப்படும். [1]


17 அவருடைய சொல்லால் தண்ணீர் திரண்டு நின்றது;
அவருடைய வாய்மொழியால் நீர்த்தேக்கம் உருவாயிற்று.


18 அவருடைய ஆணையால் அவர் விரும்பியதெல்லாம் நிறைவேறிற்று.
மீட்பளிக்கும் அவரது ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறவர் எவருமில்லை.


19 எல்லா மனிதர்களின் செயல்களும்
அவர் திருமுன் இருக்கின்றன;
அவருடைய கண்களுக்கு மறைவானது ஏதுமில்லை.


20 என்றென்றும் அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்;
அவருக்கு அரியது ஒன்றுமில்லை.


21 'இது என்ன? அது எதற்கு?' என யாரும் கூறக்கூடாது;
ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்தோடு படைக்கப்பட்டுள்ளது.


22 ஆண்டவருடைய ஆசி ஆறுபோலப் பெருக்கெடுக்கிறது;
காய்ந்த நிலத்தை வெள்ளப் பெருக்குப்போல நனைக்கிறது.


23 நன்னீரை அவர் உப்புநீராக மாற்றியதுபோல
நாடுகள் அவருடைய சினத்தை உரிமையாக்கிக்கொள்ளும்.


24 அவருடைய வழிகள் தூயவர்களுக்கு நேரியனவாய் இருக்கின்றன;
நெறிகெட்டவர்களுக்கு இடறலாய் இருக்கின்றன. [2]


25 தொடக்கத்திலிருந்தே நல்லவை நல்லவர்களுக்காகப் படைக்கப்பட்டுள்ளன;
தீயவை பாவிகளுக்காகப் படைக்கப்பட்டுள்ளன.


26 நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு,
பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை ஆகியவை
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாகும்.


27 இவையெல்லாம் இறைப்பற்றுள்ளோருக்கு நல்லவையாகும்;
பாவிகளுக்குத் தீயவையாக மாற்றப்படும்.


28 தண்டனைக்காக அவர் சில காற்றுகளைப் படைத்தார்;
அவருடைய சீற்றத்தால் அவை கொடிய வாதைகளாக மாறின.
முடிவு காலத்தில் அவை தம் வலிமையைக் கொட்டி,
தம்மைப் படைத்தவருடைய சீற்றத்தைத் தணிக்கும்.


29 தீ, கல்மழை, பஞ்சம், சாவு ஆகியவையெல்லாம்
தண்டனைக்காகப் படைக்கப்பட்டவை.


30 காட்டு விலங்குகளின் பற்கள், தேள்கள்,
நச்சுப்பாம்புகள், இறைப்பற்றில்லாதோரை அழித்துத் தண்டிக்கும் வாள்


31 ஆகியவை ஆண்டவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சி கொள்ளும்;
அவருடைய பணிக்காக மண்மீது ஆயத்தமாய் இருக்கும்;
தமக்குரிய காலம் வரும்போது அவருடைய சொல்லை மீறா.


32 இதன் பொருட்டே நான் தொடக்கமுதல் உறுதியாய் இருந்துள்ளேன்;
இதைப்பற்றிச் சிந்தித்தேன்; எழுத்தில் விட்டுச்செல்கிறேன்.


33 ஆண்டவருடைய செயல்களெல்லாம் நல்லவை.
ஒவ்வொரு தேவையையும் குறித்த காலத்தில் அவர் நிறைவு செய்வார்.


34 'இது அதைவிடக் கெட்டது' என யாரும் சொல்ல முடியாது.
எல்லாம் அதனதன் காலத்தில் நல்லவை என விளங்கும்.


35 இப்போது முழு உள்ளத்தோடும் ஆண்டவருக்கு வாயாரப் புகழ் பாடுங்கள்;
அவருடைய பெயரைப் போற்றுங்கள்.


குறிப்புகள்

[1] 39:16 = தொநூ 1:31.
[2] 39:24 = ஓசே 14:10.

அதிகாரம் 40[தொகு]

மனிதரின் இழிநிலை[தொகு]


1 எல்லா மனிதரும் கடும் உழைப்புக்கே படைக்கப்பட்டிருக்கின்றனர்;
தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த நாள்முதல்
நிலம் என்னும் தாயிடம் எல்லாரும் அடக்கமாகும் நாள்வரை
ஆதாமின் மக்கள்மீது வலிய நுகம் சுமத்தப்பட்டிருக்கிறது. [1]


2 எதிர்காலத்தையும் இறுதி நாளையையும் பற்றிய எண்ணங்கள்
மனிதருடைய சிந்தனையைக் குழப்பி, உள்ளத்தை அச்சுறுத்துகின்றன.


3 மேன்மைமிகு அரியணையில் அமர்ந்திருப்போர்முதல்
புழுதியிலும் சாம்பலிலும் உழலத் தாழ்த்தப்பட்டோர்வரை,


4 கருஞ்சிவப்பு உடையும் பொன்முடியும் அணிந்தோர்முதல்
முரட்டுத் துணி உடுத்தியோர்வரை
எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம்,
சாவுபற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு.


5 கட்டிலின்மீது ஓய்வு கொள்ளும் நேரத்தில்,
இரவு நேரத் தூக்கம் மனிதரின் அறிவைக் குழப்புகிறது.


6 சிறிது நேர ஓய்வும் ஓய்வாகத் தோன்றுவதில்லை;
பகலில் நேரிடுவதுபோன்று
உறக்கத்திலும் அவர்கள் கலக்கம் அடைகிறார்கள்.
போர்க்களத்திலிருந்து தப்பிவந்தவர்போலத்
தீயக் கனவுகளால் உள்ளத்தில் குழப்பம் அடைகிறார்கள்.


7 தாங்கள் பாதுகாப்பு அடையும் காலத்தில் விழித்துக் கொள்கிறார்கள்;
தாங்கள் அஞ்சியிருந்ததற்குத் தகுந்த காரணமில்லையே என வியப்படைகிறார்கள்.


8-9 மனிதர் முதல் விலங்குகள் வரை எல்லா உயிரினங்களுக்கும்
சாவு, படுகொலை, சண்டை, வாள், பேரிடர், பஞ்சம்,
அழிவு, நோவு ஆகியவை உண்டு.
பாவிகளுக்கோ இவை ஏழு மடங்கு மிகுதியாகும்.


10 இவையெல்லாம் நெறிகெட்டவர்களுக்கெனப் படைக்கப்பட்டவை;
அவர்களை முன்னிட்டே வெள்ளப் பெருக்கும் உண்டாயிற்று.


11 மண்ணிலிருந்து வந்த யாவும் மண்ணுக்கே திரும்பும்;
தண்ணீரிலிருந்து வந்த யாவும் கடலுக்கே திரும்பும்.

தீமையின் விளைவுகள்[தொகு]


12 எல்லாக் கையூட்டும் அநீதியும் அழித்தொழிக்கப்படும்;
பற்றுறுதி என்றென்றும் நிலைத்திடும்.


13 அநீதருடைய செல்வம் ஆற்றைப்போல வற்றிப்போகும்;
மழையின்போது விழும் பேரிடியைப்போல மறைந்து போகும்.


14 வள்ளன்மை கொண்டோர் மகிழ்ச்சி அடைவர்;
கட்டளைகளை மீறுவோர் முடிவில் அழிவர்.


15 இறைப்பற்றில்லாதோரின் வழிமரபினர் மிகுதியாகக் கிளைவிடார்;
இவர்கள் பாறையின் உச்சியில் உள்ள தூய்மையற்ற வேர்கள்.


16 எல்லா நீர்நிலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் வளரும் நாணல்,
புல் வகைகளுக்கு முன்னரே பிடுங்கி எறியப்படும்.


17 இரக்கம் என்பது நலமிகு பூங்காபோன்றது;
தருமம் என்றும் நிலைக்கும்.

வாழ்வில் கிட்டும் இன்பம்[தொகு]


18 தன்னிறைவு கொண்டோர், தொழில் புரிவோர்
ஆகியோருடைய வாழ்க்கை இனிமையானது;
புதையலைக் கண்டுபிடிப்போருடைய வாழ்க்கை
அவர்கள் இருவரின் வாழ்க்கையினும் இனிமையானது.


19 பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும் நகர்களைக் கட்டியெழுப்புவதும்
ஒருவருடைய பெயரை நிலைக்கச் செய்கின்றன.
மாசற்ற மனைவி இந்த இரண்டினும் மேலாக மதிக்கப்படுவாள்.


20 திராட்சை இரசமும் இன்னிசையும் இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஞானத்தின்மேல் கொண்ட அன்பு இவ்விரண்டினும் மேலானது.


21 குழலும் யாழும் இன்னிசை எழுப்புகின்றன;
இனிய சொல் இவ்விரண்டினும் சிறந்தது.


22 வனப்பையும் அழகையும் கண் நாடுகிறது;
விளைநிலத்தின் பசுமை இவ்விரண்டினும் உயர்ந்தது.


23 நண்பரும் தோழரும் எப்போதும் சந்திக்கத் தக்கவர்கள்;
தன் கணவருடன் வாழும் மனைவி இவ்விருவரினும் மேலானவள். [2]


24 உடன்பிறந்தோரும் உதவி செய்வோரும் துன்பத்திலிருந்து விடுவிப்பர்;
தருமம் செய்தல் இவ்விருவரினும் சிறந்தது.


25 பொன்னும் வெள்ளியும் கால்களுக்கு உறுதி தரும்;
அறிவுரை இவ்விரண்டினும் மேலாக மதிக்கப்பெறும்.


26 செல்வமும் வலிமையும் உள்ளத்தை உயர்த்துகின்றன;
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இவ்விரண்டினும் மேலானது.
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தில் எக்குறையுமில்லை;
அதைக் கொண்டிருக்கும்போது உதவி தேடத் தேவையில்லை.


27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் நலமிகு பூங்காபோன்றது;
அது எல்லா மாட்சியையும்விடப் பாதுகாப்பு அளிக்கிறது.

பிச்சையெடுத்தல்[தொகு]


28 குழந்தாய், பிச்சையெடுத்து வாழாதே;
பிச்சையெடுப்பதினும் சாவதே மேல்.


29 பிறரிடமிருந்து உணவை எதிர்பார்க்கிற மனிதரின் வாழ்க்கையை
வாழ்க்கை எனச் சொல்லமுடியாது;
பிறருடைய உணவால் ஒருவர் தம் வாழ்வை மாசுபடுத்துகிறார்;
அறிவாற்றல் படைத்தோரும் நற்பயிற்சி பெற்றோரும்
இதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வர்.


30 பிச்சையெடுத்தல் வெட்கம் இல்லாதவரின் வாயில் இனிக்கும்;
ஆனால், அது வயிற்றில் நெருப்பாய்ப் பற்றியெரியும்.


குறிப்புகள்

[1] 40:1 = யோபு 5:7; சஉ 1:3.
[2] 40:23 = நீமொ 31:10-11; 19:14.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 41 முதல் 42 வரை