திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"45 யூதர்கள் அவர்களை அதசா முதல் கசாரா வரை அந்த நாள் முழுவதும் துரத்திச் சென்றார்கள்; அப்போது எக்காளங்களை முழங்கி மக்களைப் போருக்கு அழைத்தார்கள்." - 1 மக்கபேயர் 7:45

1 மக்கபேயர் (The First Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

ஆல்கிமும் நிக்கானோரும் புரிந்த போர்கள்[தொகு]


1 நூற்று ஐம்பத்தோராம் ஆண்டு
செலூக்கின் மகன் தெமேத்திரி உரோமையினின்று புறப்பட்டுச்
சிலரோடு கடற்கரை நகரம் ஒன்றை அடைந்து
அங்கு ஆட்சிசெய்யத் தொடங்கினான். [1]
2 தன் மூதாதையருடைய அரண்மனையை நோக்கி
அவன் சென்று கொண்டிருந்தபோது
அந்தியோக்கையும் லீசியாவையும் அவனிடம் கொண்டு வருவதற்காக
அவனுடைய படைவீரர்கள் அவர்களைப் பிடித்தார்கள்.
3 தெமேத்திரி இதுபற்றி அறியவந்தபோது,
"அவர்களின் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை" என்றான்.
4 ஆகவே படைவீரர்கள் அவர்களைக் கொன்றுவிட்டார்கள்.
தெமேத்திரி அரியணையில் அமர்ந்தான்.
5 இஸ்ரயேலைச் சேர்ந்த நெறிகெட்டவர்கள்,
இறைப்பற்றில்லாதவர்கள் ஆகிய அனைவரும்
தெமேத்திரியிடம் வந்தார்கள்.
தலைமைக் குருவாக விரும்பிய ஆல்கிம் இவர்களை
வழிநடத்தி வந்திருந்தான்.
6 அவர்கள் இஸ்ரயேல் மக்களைப்பற்றி மன்னனிடம் குற்றம் சாட்டி,
"யூதாவும் அவனுடைய சகோதரர்களும்
உம்முடைய நண்பர்கள் எல்லாரையும் கொன்று
எங்களையும் எங்கள் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.
7 ஆதலால் இப்போது உமக்கு நம்பிக்கையுள்ள ஒரு மனிதரை அனுப்பும்.
அவர் போய் எங்களுக்கும் மன்னருடைய நாட்டுக்கும்
யூதா செய்துள்ள கொடுமைகள் அனைத்தையும் பார்க்கட்டும்;
பின்னர் அவர்களையும் அவர்களுக்கு உதவி செய்பவர்களையும்
தண்டிக்கட்டும்" என்றார்கள்.


8 மன்னன் தன் நண்பர்களுள் ஒருவனான பாக்கீதைத் தேர்ந்து கொண்டான்.
இவன் யூப்பிரத்தீசின் மேற்குப் பகுதியில் தலைவனாக இருந்தவன்;
பேரரசில் பெரியவன்; மன்னனின் நம்பிக்கைக்கு உரியவன்.
9 மன்னன் அவனையும்
அவனோடு இறைப்பற்றில்லாதவனும் தான் தலைமைக் குருவாக
ஏற்படுத்தியிருந்தவனுமான ஆல்கிமையும் அனுப்பிவைத்தான்;
இஸ்ரயேல் மக்களைப் பழிவாங்க அவர்களுக்குக் கட்டளையிட்டான்.
10 அவர்கள் புறப்பட்டுப் பெரும் படையுடன் யூதேயா நாட்டை அடைந்தார்கள்;
யூதாவிடமும் அவருடைய சகோதரர்களிடமும் தூதர்களை அனுப்பி
அமைதிச் சொற்களை வஞ்சகமாய்க் கூறினார்கள்.
11 ஆனால் அவர்கள் அச்சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை;
ஏனெனில் பெரும் படையோடு அவர்கள் வந்திருக்கக் கண்டார்கள்.


12 நீதி கோரி மறைநூலறிஞர் குழு ஒன்று
ஆல்கிமிடமும் பாக்கீதிடமும் சென்றது.
13 இஸ்ரயேல் மக்களுள் கசிதேயரே
முதன்முதலில் அவர்களோடு சமாதானம் செய்து கொள்ள முயன்றார்கள்.
14 ஏனெனில், "ஆரோன் வழிமரபைச் சேர்ந்த குரு ஒருவர்
படையோடு வந்திருக்கிறார்; அவர் நமக்குத் தீங்கிழைக்கமாட்டார்" என்று
அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.
15 ஆல்கிம் அவர்களுக்கு அமைதிச் சொற்களைக் கூறி,
"உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ தீங்கிழைக்க முயலமாட்டோம்"
என்று ஆணையிட்டான்.
16 எனவே அவர்கள் அவனை நம்பினார்கள்.
ஆனால் அவன் அவர்களுள் அறுபது பேரைப் பிடித்து
ஒரே நாளில் கொன்றான்.
மறைநூலில் எழுதியுள்ள வாக்கு இவ்வாறு நிறைவேறியது:


17 "எருசலேமைச் சுற்றிலும் உம் தூயவர்களுடைய
உடலைச் சிதறடித்தார்கள்;
அவர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்;
அவர்களை அடக்கம்செய்ய ஒருவரும் இல்லை." [2]


18 அவர்களைப்பற்றிய அச்சமும் திகிலும்
மக்கள் எல்லாரையும் ஆட்கொண்டன.
"அவர்களிடம் உண்மையோ நீதியோ இல்லை;
ஏனெனில் அவர்கள் செய்திருந்த ஒப்பந்தத்தையும்
கொடுத்திருந்த உறுதிமொழியையும் மீறிவிட்டார்கள்" என்று
அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
19 பாக்கீது எருசலேமைவிட்டு அகன்று
பெத்சாயிதாவில் பாசறை அமைத்தான்;
ஆள்களை அனுப்பித்
தன்னிடம் தப்பியோடி வந்திருந்தவர்களுள் பலரையும்
மக்களுள் சிலரையும் பிடித்துக்கொன்று
அவர்களை ஒரு பெரும் பள்ளத்தில் எறிந்தான்.
20 பாக்கீது நாட்டை ஆல்கிமின் பொறுப்பில் ஒப்படைத்து
அவனுக்கு உதவியாக ஒரு படையை விட்டுவிட்டு
மன்னனிடம் திரும்பினான்.


21 ஆல்கிம் தலைமைக் குருபீடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப்
பெரிதும் போராடினான்.
22 மக்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள் எல்லாரும்
அவனோடு சேர்ந்துகொண்டு,
யூதேயா நாட்டைக் கைப்பற்றி
இஸ்ரயேலில் பெரும் தீங்கு விளைவித்தனர்.
23 ஆல்கிமும் அவனுடன் இருந்தவர்களும்
இஸ்ரயேல் மக்கள் நடுவே செய்திருந்த
தீங்குகள் அனைத்தையும் யூதா கண்டார்.
பிற இனத்தார் செய்தவற்றைவிட அவை மிகக் கொடுமையாய் இருந்தன.
24 ஆகவே அவர் யூதேயா நாடெங்கும் சுற்றி வந்து
தம்மைவிட்டு ஓடிப் போயிருந்தவர்களைப் பழிவாங்கினார்.
நகரில் இருந்தவர்களுள் எவரும் நாட்டுப்புறத்திற்குப் போகாமல் தடுத்தார்.
25 யூதாவும் அவருடன் இருந்தவர்களும்
வலிமை பெற்றுவருகிறார்கள் என்று ஆல்கிம் கண்டு
அவர்களை எதிர்க்கத் தன்னால் முடியாது என்று உணர்ந்து,
மன்னனிடம் திரும்பிச் சென்று
அவர்கள்மீது பல கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தினான்.


26 மன்னன் தான் பெரிதும் மதித்து வந்த தலைவர்களுள் ஒருவனான
நிக்கானோரை அனுப்பினான்.
அவன் இஸ்ரயேலை வெறுத்துப் பகைத்தவன்.
அம்மக்களை அழித்தொழிக்கும்படி
மன்னன் அவனுக்குக் கட்டளையிட்டான்.
27 ஆகவே நிக்கானோர் பெரும்படையோடு எருசலேம் சென்று
யூதாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும்
அமைதிச் சொற்களை வஞ்சகமாய்ச் சொல்லியனுப்பினான்;
28 "நமக்கிடையே போராட்டம் வேண்டாம்.
நட்புறவோடு உம்மைச் சந்திக்கச் சிலரோடு வருவேன்" என்றான்.


29 அவன் யூதாவிடம் சென்றதும்
அவர்கள் ஒருவர் மற்றவரை நலம் பெற வாழ்த்திக்கொண்டார்கள்;
ஆனால் பகைவர்கள் யூதாவைப் பிடிக்க
முன்னேற்பாடாய் இருந்தார்கள்.
30 நிக்கானோர் வஞ்சக நோக்கத்துடன்
தம்மிடம் வந்துள்ளான் என்பது
யூதாவுக்குத் தெரியவந்தது.
எனவே யூதா அச்சம் கொண்டு அவனைச் சந்திக்க விரும்பவில்லை.
31 நிக்கானோர் தன் திட்டம் வெளியாகிவிட்டதை அறிந்து,
கபர்சலாமா அருகில் யூதாவைப் போரில் சந்திக்கச் சென்றான்.
32 நிக்கானோரின் படையில் ஏறக்குறைய ஐந்நூறு பேர் மாண்டனர்;
மற்றவர்கள் தாவீதின் நகருக்கு ஓடிப்போனார்கள்.


33 இந்நிகழ்ச்சிகளுக்குப்பின் நிக்கானோர்
சீயோன் மலைக்கு ஏறிச் சென்றான்.
அப்பொழுது திருஉறைவிடத்தினின்று குருக்களுள் சிலரும்
மக்களுள் மூப்பர்கள் சிலரும் அவனை வாழ்த்தி வரவேற்கவும்,
மன்னனுக்காக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்த எரிபலியை
அவனிடம் காட்டவும் வெளியே வந்தனர்.
34 அவன் அவர்களை ஏளனம் செய்து எள்ளி நகையாடினான்;
இழிவுபடுத்திச் செருக்குடன் பேசினான்.
35 சினத்தில் அவன்,
"யூதாவையும் அவனது படையையும்
என் கையில் உடனே ஒப்படைக்காவிடில்,
நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது
இத்திருஉறைவிடத்தைத் தீக்கிரையாக்குவேன்"
என்று சொல்லி ஆணையிட்டுக்
கடுஞ்சினத்துடன் வெளியேறினான்.
36 குருக்கள் உள்ளே சென்று பலிபீடத்துக்கும்
கோவிலுக்கும் முன்பாக நின்றுகொண்டு அழுது,


37 "உமது பெயர் விளங்கவும்,
வேண்டுதலினுடையவும் மன்றாட்டினுடையவும் இல்லமாக
உம் மக்களுக்கு இலங்கவும் நீர் இவ்விடத்தைத் தெரிந்து கொண்டீர்.


38 இந்த மனிதனையும் அவனது படையையும் பழிவாங்கும்;
அவர்கள் வாளுக்கு இரையாகட்டும்;
அவர்கள் செய்த இறைப்பழிப்புகளை நினைவுகூரும்;
அவர்களை வாழ விட்டு விடாதேயும்" என்று மன்றாடினார்கள்.


39 நிக்கானோர் எருசலேமைவிட்டு நீங்கிப்
பெத்கோரோனில் பாசறை அமைத்தான்.
சிரியாவின் படை அவனோடு சேர்ந்துகொண்டது.
40 யூதாவும் மூவாயிரம் பேரோடு அதசாவில் பாசறை அமைத்தார்;
பின்னர் கடவுளை நோக்கி,
41 "மன்னனால் அனுப்பப்பட்டவர்கள் உம்மைப் பழித்துரைத்ததால்
உம் வானதூதர் போய் அசீரியர்களுள்
இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரைக் கொன்றனர். [3]
42 அவ்வாறே எங்களுக்கு முன்பாக இன்று இப்படையை அழித்துவிடும்.
இதனால் நிக்கானோர் உம் திருஉறைவிடத்துக்கு எதிராகப்
பழிச்சொல் கூறியுள்ளான் என மற்றவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
அவனது தீமைக்கு ஏற்ப அவனைத் தண்டியும்" என்று வேண்டினார்.


43 அதார் மாதம் பதின்மூன்றாம் நாள்
படைகள் போர் முனையில் சந்தித்துக்கொண்டன.
நிக்கானோரின் படை தோல்வி அடைந்தது.
போரில் முதலில் மடிந்தவன் அவனே.
44 நிக்கானோர் மடிந்ததைக் கண்ட அவனுடைய படைவீரர்கள்
தங்கள் படைக்கலங்களை எறிந்துவிட்டுத் தப்பியோடினார்கள்.
45 யூதர்கள் அவர்களை அதசா முதல் கசாரா வரை
அந்த நாள் முழுவதும் துரத்திச் சென்றார்கள்;
அப்போது எக்காளங்களை முழங்கி
மக்களைப் போருக்கு அழைத்தார்கள்.
46 சுற்றிலும் இருந்த யூதேயாவின் ஊர்கள் அனைத்திலுமிருந்து
மக்கள் வெளியே வந்து பகைவர்களைப்
பக்கவாட்டில் தாக்கினார்கள்.
பகைவர்கள் தங்களைத் துரத்தியவர்களிடம் திருப்பி விரட்டப்படவே,
எல்லாரும் வாளுக்கு இரையாயினர்.
அவர்களுள் ஒருவன்கூட உயிர் தப்பவில்லை.


47 யூதர்கள் கொள்ளைப் பொருள்களைக் கைப்பற்றினார்கள்.
நிக்கானோரின் தலையைக் கொய்தார்கள்;
அவன் இறுமாப்போடு நீட்டிக்காட்டிய வலக்கையைத் துண்டித்தார்கள்;
அவற்றைக் கொண்டுவந்து எருசலேமுக்கு வெளியே
மக்கள் காணும்படி தொங்கவிட்டார்கள். [4]
48 மேலும் பெரிதும் களிப்புற்ற அந்த நாளை
மகிழ்ச்சிப் பெருவிழாவாகக் கொண்டாடினார்கள்.
49 அந்த விழாவை ஆண்டுதோறும்
அதார் மாதம் பதின்மூன்றாம்நாளில் கொண்டாடவேண்டும் என்று
முடிவு செய்தார்கள்.
50 சிறிது காலம் யூதேயா நாட்டில் அமைதி நிலவியது. [5]


குறிப்புகள்

[1] 7:1 - கி.மு. 161.
[2] 7:17 = திபா 79:2-3.
[3] 7:41 = 2 அர 19:35.
[4] 7:47 = 2 மக் 15:30.
[5] 7:1-50 = 2 மக் 14:1-36; 15:1-36.

அதிகாரம் 8[தொகு]

உரோமையருடன் உடன்படிக்கை[தொகு]


1 யூதா உரோமையர்களின் புகழைப்பற்றிக் கேள்விப்பட்டார்;
அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்;
அவர்களுக்குச் சார்பாக இருப்போர் அனைவரிடமும்
நல்லுறவு கொள்கிறார்கள்;
அவர்களை நாடிச்செல்வோருக்கு அன்பு காட்டுகிறார்கள்.
அவர்கள் மிக வலிமை வாய்ந்தவர்கள்;
2 கால்லியர் [1] நடுவே அவர்கள் போர்கள் புரிந்து,
தீரச் செயல்கள் செய்தார்கள்;
அவர்களை வென்று திறை செலுத்தச் செய்தார்கள்;
3 ஸ்பெயின் நாட்டில் இருந்த பொன்,
வெள்ளிச் சுரங்கங்களைக் கைப்பற்றினார்கள்;
4 தங்கள் திட்டத்தினாலும் விடாமுயற்சியினாலும்
தங்களுக்கு மிகத் தொலையில் இருந்த
இடங்கள் அனைத்தையும் வென்றார்கள்;
நிலத்தின் கடையெல்லையினின்று தங்களை எதிர்த்து வந்த மன்னர்களை
அடிபணியச் செய்து அழித்து,
அவர்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தினார்கள்;
எஞ்சிய மன்னர்கள் ஆண்டுதோறும்
அவர்களுக்குத் திறை செலுத்திவந்தார்கள்;
5 பிலிப்பையும் கித்திம் அரசனான பெர்சேயுவையும்
தங்களுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்த மற்றவர்களையும்
போரில் முறியடித்து அடிபணியச் செய்தார்கள்;
6 ஆசியாவின் அரசனான மாமன்னன் அந்தியோக்கு
நூற்று இருபது யானைகளோடும் குதிரைகளோடும்
தேர்களோடும் பெரும் படையோடும்
அவர்களை எதிர்த்துப் போரிடச் சென்றபோது
அவனையும் தோற்கடித்தார்கள்.
7-8 அவனை உயிரோடு பிடித்து,
அவனும் அவனுக்குப்பிறகு ஆண்ட மன்னர்களும்
தங்களுக்கு மிகுதியான திறை செலுத்தும்படியும்,
பிணைக் கைதிகளைக் கொடுக்கும்படியும்,
அவனுடைய மிகச்சிறந்த மாநிலங்களிலிருந்து
இந்தியா, மேதியா, லீதியா ஆகியவற்றை ஒப்படைக்கும்படியும்
ஆணை பிறப்பித்தார்கள்;
இந்நாடுகளை அந்தியோக்கிமிடமிருந்து பெற்று
யூமேன் மன்னனுக்குக் கொடுத்தார்கள்.
9 கிரேக்கர்கள் வந்து அவர்களை அழித்துவிடத் திட்டமிட்டிருந்தார்கள்.
10 அவர்கள் இதை அறிந்து படைத்தலைவர் ஒருவரைக்
கிரேக்கர்களுக்கு எதிராய் அனுப்பி அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்;
அவர்களுள் பலர் காயமுற்று மடியவே,
அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்திப்
பொருள்களைக் கொள்ளையடித்தார்கள்;
அவர்களது நாட்டின்மீது வெற்றி கொண்டு
கோட்டைகளைத் தகர்த்தார்கள்;
அவர்களை அந்நாள்வரை அடிமைகளாக வைத்திருந்தார்கள்.
11 தங்களை எதிர்த்து வந்த மற்ற நாடுகள்,
தீவுகள் அனைத்தையும் அழித்து
அவற்றை அடிமைப்படுத்தினார்கள்;
ஆனால் தங்களுடைய நண்பர்களோடும்
தங்களை நம்பியிருந்தவர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார்கள்;
12 அருகிலும் தொலையிலும் இருந்த மன்னர்களைத்
தங்களுக்கு அடிபணியச் செய்தார்கள்;
அவர்களின் பெயரைக் கேட்ட யாவரும் அவர்களுக்கு அஞ்சினார்கள்;
13 எவருக்கு உதவி செய்து மன்னர்களாக்க விரும்புகிறார்களோ
அவர்கள் அனைவரையும் மன்னர்கள் ஆக்குகிறார்கள்;
எவரை அரியணையிலிருந்து அகற்ற விரும்புகிறார்களோ
அவர்கள் அனைவரையும் அகற்றுகிறார்கள்;
இவ்வாறு மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்கள்.
14 இவ்வாறெல்லாம் இருந்தும்,
அவர்களுள் ஒருவரும் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ள
முடி தரிக்கவுமில்லை, அரசவுடை அணிந்ததுமில்லை.
15 தங்களுக்கென்று ஓர் ஆட்சிமன்றத்தை அமைத்தார்கள்.
முந்நூற்று இருபது உறுப்பினர்கள் நாள்தோறும் கூடி
மக்களைப்பற்றியும் அவர்களது நலனைப் பற்றியும்
கலந்து ஆய்வுசெய்கிறார்கள்.
16 தங்கள்மீது ஆட்சிசெலுத்தவும்
தங்கள் நாடு முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்
ஆண்டுதோறும் ஒரு மனிதரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள்;
எல்லாரும் அந்த ஒருவருக்கே கீழ்ப்பபடிகிறார்கள்.
அவர்களுக்குள் போட்டியோ பொறாமையோ இல்லை -
இவையெல்லாம் யூதாவின் காதுக்கு எட்டின.


17 ஆதலால் அக்கோனின் பேரனும்
யோவானின் மகனுமான யூப்பொலேமையும்
எலயாசரின் மகன் யாசோனையும் யூதா தேர்ந்தெடுத்தார்;
உரோமையர்களோடு நட்பும் ஒப்பந்தமும் செய்துகொள்ள
அவர்களை உரோமைக்கு அனுப்பிவைத்தார். [2]
18 கிரேக்கர்களின் அடிமைத்தனத்தினின்று
யூதர்களை விடுவித்துக் கொள்ளவே அவர் இவ்வாறு செய்தார்;
ஏனெனில் கிரேக்கப் பேரரசு இஸ்ரயேலை அடிமைப்படுத்தியிருந்ததை
உரோமையர்கள் கண்டார்கள்.
19 அவர்கள் நீண்ட பயணத்திற்குப்பின்
உரோமையை அடைந்தார்கள்.
ஆட்சி மன்றத்தில் நுழைந்து,
20 "மக்கபே எனப்படும் யூதாவும் அவருடைய சகோதரர்களும்
யூத மக்களும் உங்களோடு ஒப்பந்தமும் சமாதானமும் செய்து கொள்வதற்கும்,
எங்களை உங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும்
நீங்கள் பதிவு செய்துகொள்வதற்கும்
எங்களை உங்களிடம் அனுப்பியுள்ளார்கள்" என்று சொன்னார்கள்.


21 அவர்கள் சொன்னது மன்றத்தாருக்கு ஏற்புடைதாய் இருந்தது.
22 சமாதானம், ஒப்பந்தம் ஆகியவற்றின் நினைவாக
எருசலேமில் யூதர்களிடம் இருக்கும்படி
அங்கு அவர்கள் வெண்கலத் தகடுகளில் எழுதி அனுப்பிவைத்த
மடலின் நகல் பின்வருமாறு:
23 "உரோமையருக்கும் யூத இனத்தாருக்கும்
நீரிலும் நிலத்திலும் என்றும் நலம் உண்டாகுக.
வாளும் பகைவரும் அவர்களைவிட்டு அகலட்டும்.
24 உரோமையர்களுக்கு எதிராக அல்லது
அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட நட்பு நாடுகளுக்கு எதிராக
முதலில் போர் மூண்டால்,
25 யூத இனத்தார் சூழ்நிலைக்கு ஏற்ப
முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.
26 உரோமையில் முடிவுசெய்தபடி,
எதிர்த்துப் போர்புரிவோருக்குத் தானியமோ படைக்கலங்களோ
பணமோ கப்பல்களோ கொடுக்கக்கூடாது;
எதையும் எதிர்பாராமலே அவர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும்.


27 இவ்வாறே முதலில் யூத இனத்தாருக்கு எதிராகப் போர் மூண்டால்,
உரோமையர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப
முழு மனத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
28 உரோமையில் முடிவுசெய்தபடி,
அவர்களின் பகைவர்களுக்கு தானியமோ படைக்கலங்களோ
பணமோ கப்பல்களோ கொடுக்கப்பட மாட்டாது.
கள்ளமின்றி அவர்கள் இக்கடமையைச் செய்யவேண்டும்.
29 இத்தகைய நிபந்தனைகளோடு
உரோமையர்கள் யூத மக்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
30 இந்த நிபந்தனைகளில் எதையேனும் சேர்க்கவோ நீக்கவோ
இரு தரப்பினரும் இனிமேல் முடிவு செய்தால்,
தங்கள் விருப்பப்படி அவ்வாறு செய்யலாம்;
இவ்வாறு சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதும் சட்டப்படி செல்லும்.


31 மேலும் தெமேத்தரி மன்னர்
யூத இனத்தாருக்கு இழைத்துவரும் கொடுமைகளைப்பற்றி
நாங்கள் அவருக்கு எழுதியிருப்பது வருமாறு:
'எங்கள் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூதர்கள்மீது
நீர் ஏன் கடினமான நுகத்தைச் சுமத்தியிருக்கிறீர்?
32 அவர்கள் எங்களிடம் உமக்கு எதிராய் மீண்டும் முறையிடுவார்களாயின்
அவர்களுக்கு நீதி வழங்க நாங்கள் நீரிலும் நிலத்திலும்
உம்மை எதிர்த்துப் போரிடுவோம்.'"


குறிப்புகள்

[1] 8:2 - பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த
"கால்" இனத்தாராக இருக்கலாம்.
[2] 8:17 = மக் 4:11.


(தொடர்ச்சி): மக்கபேயர் - முதல் நூல்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை