திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - முதல் நூல்/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இலிருந்து


"ஒவ்வொரு யானைமீதும் மரத்தினால் செய்யப்பட்ட வலிமை பொருந்திய அம்பாரி ஒன்று வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது; அது யானையோடு வலுவான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் அம்பாரியிலும் நான்கு வீரர்கள் இருந்து கொண்டு போர் செய்தார்கள். யானைப் பாகனும் யானைமீது அமர்ந்திருந்தான்." - 1 மக்கபேயர் 6:37

1 மக்கபேயர் (The First Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

இதுமேயர், அம்மோனியருடன் போர்[தொகு]


1 பலிபீடம் மீண்டும் எழுப்பப்பட்டது என்றும்,
திருஉறைவிடம் முன்பு இருந்ததுபோல் அர்ப்பணிக்கப்பட்டது என்றும்,
சுற்றிலும் இருந்த வேற்றினத்தார் கேள்விப்பட்டு மிகவும் சினங்கொண்டனர்;
2 எனவே தங்கள் நடுவே வாழ்ந்த யாக்கோபின் வழிமரபினரை
அழித்தொழிக்கத் திட்டமிட்டனர்;
அவ்வாறே அவர்களைக் கொன்றொழிக்கத் தொடங்கினர்.


3 இதுமேயாவில் இருந்த அக்கிரபத்தேனில்
ஏசாவின் மக்கள் இஸ்ரயேலரை முற்றுகையிட்டிருந்ததால்,
யூதா அவர்களைக் கடுமையாகத் தாக்கி வீழ்ச்சியுறச் செய்து
கொள்ளைப் பொருள்களையும் எடுத்துவந்தார்;
4 சாலைகளில் பதுங்கியிருந்த தம் மக்களுக்குக்
கண்ணிபோலும் சூழ்ச்சிப்பொறிபோலும் இருந்த
பேயான் மக்களுடைய [1] கொடுமைகளையும் நினைவுகூர்ந்தார்;
5 ஆகவே அவர்களைக் கோட்டைகளில் அடைத்து
அவர்கள் வெளியே வராமல் தடுத்து முற்றிலும் அழித்தார்;
கோட்டைகளையும் அவற்றுள் இருந்த அனைவரையும் தீக்கிரையாக்கினார்.
6 பிறகு அவர் அம்மோனியரைத் தாக்கச் சென்றபோது,
வலிமைமிக்க படையையும் திரளான மக்களையும்
அவர்களின் தலைவரான திமொத்தேயுவையும் கண்டார்.
7 அவர்களோடு போர்கள் பல புரிந்து,
அவர்களை நிலைகுலையச் செய்து அழித்தார்.
8 யாசேர் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் கைப்பற்றியபின்
யூதேயா திரும்பினார்.


9 தங்கள் நாட்டில் வாழ்ந்துவந்த இஸ்ரயேலரை அழிப்பதற்காகக்
கிலயாதில் இருந்த பிற இனத்தார் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டனர்.
எனவே இஸ்ரயேலர் தாதமா கோட்டைக்குத் தப்பியோடினர்.
10 அவர்கள் யூதாவுக்கும் அவருடைய சகோதரர்களுக்கும்
எழுதி அனுப்பிய மடல் வருமாறு:
"எங்களைச் சுற்றியுள்ள பிற இனத்தார்
எங்களை ஒழித்துவிட எங்களுக்கு எதிராகத் திரண்டுவந்துள்ளனர்.
11 அவர்கள் வந்து, நாங்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்தக் கோட்டையைப் பிடிக்க
முன்னேற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
திமொத்தேயு அவர்களின் படைத்தலைவன்.
12 எங்களுள் பலர் ஏற்கெனவே மடிந்துவிட்டதால்
இப்போது நீர் வந்து அவர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும்.
13 தோபு நாட்டிலுள்ள நம் சகோதரர்கள் அனைவரையும்
பகைவர்கள் கொன்றுவிட்டார்கள்;
அவர்களின் மனைவி மக்களைச் சிறைப்படுத்தியதோடு
உடைமைகளையும் கொள்ளையடித்து விட்டார்கள்;
ஏறக்குறைய ஆயிரம் பேரை அங்குக் கொலை செய்து விட்டார்கள்."


14 யூதாவும் அவருடைய சகோதரர்களும்
அம்மடலைப் படித்துக் கொண்டிருக்கும்போதே,
கிழிந்த ஆடைகளோடு சில தூதர்கள் கலிலேயா நாட்டிலிருந்து
இதுபோன்ற செய்தி ஒன்றைக் கொண்டுவந்தார்கள்.
15 தாலமாய், தீர், சீதோன் நகரத்தாரும்
பிற இனத்தார் வாழும் கலிலேயா நாட்டு மக்கள் அனைவரும்
தங்களுக்கு எதிராய் எழுந்து தங்களை அழித்தொழிக்கக்
கூடியிருப்பதாகத் தெரிவித்தார்கள்.


16 யூதாவும் மக்களும் இச்செய்தியைக் கேட்டு,
கடுந்துயருக்கும் பகைவர்களின் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்த
தங்கள் உறவின்முறையினருக்குத் தாங்கள் செய்யவேண்டியதைப் பற்றி முடிவுசெய்யப்
பெரும் கூட்டமாகக் கூடினார்கள்.
17 யூதா தம் சகோதரரான சீமோனை நோக்கி,
"நீர் வீரர்களைத் தேர்ந்துகொண்டு
கலிலேயா நாட்டிலுள்ள உம் உறவின்முறையினரை விடுவிக்கப் புறப்படும்.
நானும் என் சகோதரனான யோனத்தானும் கிலயாதுக்குப் போவோம்" என்றார்.
18 யூதேயாவைக் காப்பதற்காகச்
செக்கரியாவின் மகனான யோசேப்பையும்
மக்கள் தலைவர்களுள் ஒருவரான அசரியாவையும்
எஞ்சிய படையோடு விட்டுச்சென்றார்;
19 "இம்மக்களுக்குப் பொறுப்பாய் இருங்கள்;
நாங்கள் திரும்பிவரும்வரை பிற இனத்தாரோடு போர் செய்யாதீர்கள்" என்று
அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
20 கலிலேயாவுக்குச் செல்வதற்காகச் சீமோனுக்கு மூவாயிரம் வீரர்களும்,
கிலயாதுக்குச் செல்வதற்காக யூதாவுக்கு எண்ணாயிரம் வீரர்களும் குறிக்கப்பட்டார்கள்.


21 சீமோன் கலிலேயாவுக்குச் சென்று
பிற இனத்தாரோடு போர்கள் பல செய்து அவர்களை அழித்தார்.
22 அவர் தாலமாய் நகரின் வாயில்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்;
அவர்களுள் ஏறக்குறைய மூவாயிரம் பேர் மாண்டனர்.
அவர் அவர்களுடைய பொருள்களைக் கொள்ளையடித்தார்;
23 கலிலேயாவிலும் அர்பத்தாவிலும் இருந்த யூதர்களை
அவர்களுடைய மனைவி மக்களோடும்
அவர்களுக்குச் சொந்தமான பொருள்கள் அனைத்தோடும் கூட்டிக்கொண்டு
பெரும் மகிழ்ச்சியோடு யூதேயா நாட்டுக்கு வந்தார்.
24 யூதா மக்கபேயும் அவருடைய சகோதரனான யோனத்தானும்
யோர்தான் ஆற்றைக் கடந்து பாலைநிலத்தில் மூன்று நாள் பயணம் செய்தார்கள்;
25 அவர்கள் நபத்தேயரைச் சந்தித்தார்கள்.
நபத்தேயர் அவர்களை இனிதே வரவேற்றுக்
கிலயாது நாட்டில் வாழ்ந்துவந்த யூதர்களுக்கு நேர்ந்த யாவற்றையும் தெரிவித்தார்கள்;
26 "போஸ்ரா, போசோர், அலேமா, காஸ்போ,
மாக்கேது, கர்னாயிம் என்னும் வலிமைமிக்க மாநகர்களில்
யூதர்கள் பலர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்;
27 மற்றும் சிலர் கிலயாதின் பிற நகரங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்;
பகைவர்கள் நாளையே அவர்களின் கோட்டைகளைத் தாக்கிக் கைப்பற்றி,
மக்கள் எல்லாரையும் ஒரே நாளில் அழித்தொழிக்க
ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னார்கள்.


28 ஆதலால் யூதாவும் அவருடைய படைவீரர்களும்
உடனே திரும்பிப் பாலைநில வழியாய்ப் போஸ்ராவுக்குச் சென்று
அதைக் கைப்பற்றினார்கள்;
ஆடவர் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கி
நகரைக் கொள்ளையடித்துக் கொளுத்திவிட்டார்கள்.
29 பிறகு அவர்கள் இரவில் அங்கிருந்து புறப்பட்டுத்
தாதமா கோட்டைக்குச் சென்றார்கள்.
30 பொழுது விடியம் வேளையில் அவர்கள் தலைநிமிர்ந்து பார்த்தபோது
கோட்டையைப் பிடிப்பதற்கும் அதில் இருந்த யூதர்களைத் தாக்குவதற்கும்
ஏணிகளோடும் படைப்பொறிகளோடும் வந்த
எண்ணிலடங்காத மக்கள் திரளைக் கண்டார்கள்.
31 போர் தொடங்கிவிட்டது என்று யூதா கண்டார்.
நகரிலிருந்து எழுந்த கூக்குரல் எக்காள ஒலியோடும்
பேரிரைச்சலோடும் சேர்ந்து வானத்தை எட்டியது.
32 ஆதலால் அவர் தம் படைவீரர்களை நோக்கி,
"இன்று நம் உறவின் முறையினருக்காகப் போரிடுங்கள்" என்றார்.


33 யூதா தம் படையை மூன்றாகப் பிரிக்கவே,
அவர்கள் எக்காளங்களை முழங்கிக்கொண்டும்
உரத்த குரலில் வேண்டிக்கொண்டும்
பகைவர்களைப் பின்தொடர்ந்தார்கள்.
34 மக்கபேயுதாம் வருகிறார் என்று திமோத்தேயுவின் படைவீரர்கள் அறிந்தவுடனே
அவர் முன்னிருந்து தப்பியோடினார்கள்.
அவர் அவர்களை அடித்து நொறுக்கவே,
அன்று அவர்களுள் ஏறத்தாழ எண்ணாயிரம் பேர் கொலையுண்டனர்.
35 பின்னர் அலேமாவை நோக்கி யூதா சென்று
அதை எதிர்த்துப் போரிட்டுக் கைப்பற்றினார்.
அங்கு இருந்த ஆடவர் எல்லாரையும் கொன்றபின்
அதைக் கொள்ளையடித்துக் கொளுத்திவிட்டார்.
36 அவ்விடமிருந்து புறப்பட்டுக் காஸ்போவையும் மாக்கேதையும் போசோரையும்
கிலயாது நாட்டின் மற்ற நகர்களையும் பிடித்தார்.
37 இவற்றுக்குப்பின் திமோத்தேயு வேறொரு படையைத் திரட்டி
நீரோடையின் அக்கரையில் இராபோன் நகருக்கு எதிரில் பாசறை அமைத்தான்.
38 பகைவர்களின் படையை உளவுபார்க்க யூதா ஆள்களை அனுப்ப,
அவர்கள் திரும்பிவந்து,
"நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிற இனத்தார் எல்லாரும்
அவனோடு சேர்ந்து கொண்டனர். அது மிகப் பெரும் படை.
39 தங்களுக்கு உதவியாக அரேபியரையும் அவர்கள் கூலிக்கு அமர்த்தியுள்ளார்கள்;
உம்மோடு போர் செய்ய ஆயத்தமாகி
நீரோடையின் அக்கரையில் பாசறை அமைத்திருக்கிறார்கள்"
என்று சொன்னார்கள்.
எனவே யூதா அவர்களைப் போர்முனையில் சந்திக்கச் சென்றார்.


40 யூதாவும் அவரது படையும் நீரோடைக்கு அருகே வந்ததும்
திமோத்தேயு தன் படைத்தலைவர்களை நோக்கி,
"அவன் முதலில் நீரோடையைக் கடந்து நம்மிடம் வந்தால்
நாம் அவனை எதிர்க்க முடியாது;
அவன் நம்மைத் தோற்கடிப்பது உறுதி.
41 ஆனால் அவன் அச்சம்கொண்டு அக்கரையிலேயே பாசறை அமைப்பானாகில்,
நாம் நீரோடையைக் கடந்து சென்று அவனை முறியடிப்போம்" என்று கூறினான்.
42 யூதா நீரோடையை நெருங்கி வந்தபோது
அலுவலர்களை அதன் அருகே நிறுத்தி,
"ஒருவனையும் பாசறை அமைக்க விடாதீர்கள்;
எல்லாரும் போர்புரியச் செய்யுங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
43 தம் எதிரிகளைத் தாக்க யூதாவே முதன்முதல் நீரோடையைக் கடந்தார்.
மக்கள் எல்லாரும் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
அவரால் முறியடிக்கப்பட்ட பிற இனத்தார் அனைவரும்
தங்கள் படைக்கலங்களை எறிந்து விட்டு
கர்னாயிமில் இருந்த கோவிலுக்குத் தப்பியோடினார்கள்.
44 ஆனால் யூதாவும் அவருடைய ஆள்களும் அந்த நகரைப் பிடித்துக்
கோவிலையும் அதில் இருந்த அனைவரையும் தீக்கிரையாக்கினார்கள்.
இவ்வாறு கர்னாயிம் நகர் முறியடிக்கப்பட்டது;
யூதாவை எதிர்க்கப் பிற இனத்தாரால் முடியாமல் போயிற்று.


45 கிலயாதில் இருந்த சிறுவர் முதல் பெரியோர்வரை
எல்லா இஸ்ரயேலரும் அவர்களின் மனைவி மக்களும்,
பொருள்களும் மிகப் பெரும் படையாக யூதேயா நாடு செல்வதற்கு
அவர்களை யூதா ஒன்றுதிரட்டினார்.
46 அவர்கள் எபிரோனை அடைந்தார்கள்.
வழியில் இருந்த அந்நகர் பெரியதும்
காவலரண் செய்து வலுப்படுத்தப்பட்டதுமாய் இருந்தது.
அதைச் சுற்றி வலப்பக்கமோ இடப்பக்கமோ போக இயலவில்லை;
நகரில் வழியாகத்தான் அவர்கள் போக வேண்டியிருந்தது.
47 ஆனால் அவர்கள் உள்ளே நுழையாதவாறு
நகரில் இருந்தவர்கள் தடுத்து வாயில்களைக் கற்களால் அடைத்தார்கள்.
48 யூதா அவர்களிடம்,
"நாங்கள் உங்கள் நாட்டின் வழியாக எங்களுடைய நாடு போய்ச்சேர வழிவிடுங்கள்.
நாங்கள் யாரும் உங்களுக்குத் தீங்கு செய்யமாட்டோம்;
நாங்கள் நடந்தே செல்வோம்" என்று
அமைதியை நாடும் முறையில் சொல்லி அனுப்பினார்.
இருப்பினும் நகர வாயில்களை அவருக்கு திறந்துவிட அவர்கள் விரும்பவில்லை.


49 ஆதலால் படைவீரர்களுள் ஒவ்வொருவரும்
தாம் இருந்த இடத்திலேயே பாசறை அமைக்கவேண்டும் என்று அறிக்கையிடும்படி
யூதா கட்டளையிட்டார்.
50 அவ்வாறே வீரர்களும் பாசறை அமைத்தார்கள்.
யூதா அன்று பகலும் இரவுமாக அந்த நகரத்தோடு போர் புரிந்து அதைக் கைப்பற்றினார்;
51 ஆடவர் எல்லாரையும் வாளால் கொன்றொழித்தார்;
நகரைக் கொள்ளையடித்தபின் தரைமாட்டமாக்கினார்;
கொலையுண்டவர்களைத் தாண்டி நகரைக் கடந்து சென்றார்.


52 பின்னர் அவர்கள் யோர்தானைக் கடந்து
பெத்சான் நகருக்கு எதிரில் இருந்த பெரிய சமவெளியில் சென்று கொண்டிருந்தார்கள்.
53 தம் மக்களுள் சோர்ந்து பின்னடைந்தவர்களை
யூதா ஒன்றுசேர்த்து வழி முழுவதும் யூதேயா நாடு சேருமட்டும்
அவர்களுக்கு ஊக்கமூட்டிக்கொண்டு சென்றார்.
54 அவர்கள் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சீயோன் மலைக்கு ஏறிச்சென்று
தங்களுள் யாரும் அழிவுறாமல் பாதுகாப்புடன் திரும்பி வந்ததற்காக
எரிபலிகளை ஒப்புக்கொடுத்தார்கள்.


55 யூதாவும் யோனத்தானும் கிலயாது நாட்டில் இருந்த காலத்தில்,
அவர்களுடைய சகோதரனான சீமோன்
கலிலேயாவில் தாலமாயை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த காலத்தில்,
56 அவர்கள் புரிந்த போர்களைப்பற்றியும் தீரச்செயல்களைப்பற்றியும்
படைத்தலைவர்களான செக்கரியா மகன் யோசேப்பும் அசரியாவும் கேள்விப்பட்டார்கள்;
57 "நாமும் நமக்கு நல்ல பெயரைத் தேடிக்கொள்வோம்;
நாம் சென்று நம்மைச் சுற்றிலும் இருக்கும் பிற இனத்தாரை எதிர்த்துப் போர்செய்வோம்" என்று சொல்லி,
58 தங்களோடு இருந்த படைவீரர்களுக்கு ஆணையிட,
அவர்கள் யாம்னியாவை நோக்கி அணிவகுத்துச் சென்றார்கள்.
59 ஆனால் அவர்களைப் போர் முனையில் சந்திக்குமாறு
கோர்கியாவும் அவனுடைய படைவீரர்களும் நகருக்கு வெளியே வந்தார்கள்.
60 யோசேப்பும் அசரியாவும் முறியடிக்கப்பட்டு
யூதாவின் எல்லைவரை துரத்தியடிக்கப்பட்டார்கள்.
அன்று இஸ்ரயேல் மக்களுள் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் மாண்டனர்.
61 தீரச்செயல்புரிய எண்ணிய மக்கள்,
யூதாவும் அவருடைய சகோதரரும் சொன்னதைக் கேளாததால்
இவ்வாறு பெரும் தோல்வி அடைந்தார்கள்.


62 ஆனால் யார் வழியாக இஸ்ரயேலுக்கு மீட்பு வழங்கப்பட்டதோ
அவர்களது வழிமரபைச் சேர்ந்தவர்கள் அல்லர் இம்மனிதர்கள்.


63 ஆண்மை படைத்த யூதாவும் அவருடைய சகோதரர்களும்
இஸ்ரயேலர் அனைவர்முன்னும் பிற இனத்தார் அனைவர்முன்னும் அ
வர்களின் பெயர் தெரியவந்த இடமெல்லாம் மிகவும் பெருமைப்படுத்தப்பட்டார்கள்.
64 மக்கள் திரண்டு வந்து அவர்களைப் பாராட்டினார்கள்.


65 பின்னர் யூதா தம் சகோதரர்களோடு புறப்பட்டுத்
தென்னாட்டில் இருந்த ஏசாவின் வழிமரபினரை எதிர்த்துப் போர் செய்தார்;
எபிரோன் நகரையும் அதைச் சேர்ந்த ஊர்களையும் அழித்தார்.
அதன் கோட்டைகளைத் தரைமட்டமாக்கி
அதைச் சுற்றி இருந்த காவல்மாடங்களைத் தீக்கரையாக்கினார்;
66 அங்கிருந்து பெரிஸ்தியரின் நாட்டுக்குப் புறப்பட்டு மாரிசா வழியாகச் சென்றார்.
67 தீரச்செயல் புரிய விரும்பிய குருக்கள் சிலர் முன்மதியின்றிப் போருக்குச் சென்றிருந்ததால்
அன்று போரில் மாண்டனர்.
68 பெலிஸ்தியரின் நாட்டில் அசோத்து நகரை யூதா அடைந்து
அதன் பலிபீடங்களைத் தலைமட்டமாக்கி
அவர்களுடைய தெய்வங்களின் சிலைகளைத் தீயிலிட்டு எரித்தார்;
நகரங்களைக் கொள்ளையடித்த பின் யூதேயா நாடு திரும்பினார். [2]


குறிப்புகள்

[1] 5:4 - அரேபியருடைய குலங்களுள் ஒன்றாக இருக்கலாம்.
[2] 5:1-68 = 2 மக் 10:14-33; 12:10-45.


அதிகாரம் 6[தொகு]

நான்காம் அந்தியோக்கின் முடிவு[தொகு]


1 அந்தியோக்கு மன்னன் மேற்கு மாநிலங்கள் வழியாகச் சென்றபோது,
பாரசீக நாட்டு எலிமாய் நகர் பொன், வெள்ளி ஆகியவற்றுக்குப் புகழ்பெற்றது என்று கேள்விப்பட்டான்.
2 அதன் கோவிலில் மிகுந்த செல்வம் இருந்தது என்றும்
கிரேக்க நாட்டை முதன்முதல் ஆண்ட
மாசிடோனிய மன்னரான பிலிப்பின் மகன் அலெக்சாண்டர்
அங்கே விட்டுச் சென்றிருந்த பொற்கேடயங்களும் மார்புக்கவசங்களும்
படைக்கலங்களும் அங்கு இருந்தன என்றும் அறிய வந்தான்.
3 எனவே அந்தியோக்கு புறப்பட்டு
நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான்;
ஆனால், முடியவில்லை;
ஏனெனில் அந்த நகர மக்கள் அவனது திட்டத்தை அறிந்திருந்தார்கள்.
4 அவர்கள் அவனை எதிர்த்துப் போரிட்டார்கள்.
ஆகவே அவன் பின்வாங்கி, பெரும் ஏமாற்றத்துடன்
அங்கிருந்து பாபிலோனுக்குத் தப்பிச் சென்றான்.


5 யூதேயா நாட்டை எதிர்த்துச் சென்றிருந்த அவனுடைய படைகள்
முறியடிக்கப்பட்ட செய்தியை
அவன் பாரசீகத்தில் இருந்தபோது தூதர் ஒருவர் அவனுக்கு அறிவித்தார்;
6 "லீசியா வலிமை வாய்ந்த படையோடு முதலில் சென்று
யூதர்கள்முன் புறமுதுகு காட்டி ஓடிவிட்டான்;
முறியடிக்கப்பட்ட படைகளிடமிருந்து யூதர்கள் கொள்ளையடித்த படைக்கலன்கள்,
மிகுதியான பொருள்கள் ஆகியவற்றால் அவர்கள் வலிமை மிக்கவர்கள் ஆனார்கள்;
7 எருசலேமில் இருந்த பலிபீடத்தின்மேல்
அந்தியோக்கு செய்து வைத்திருந்த நடுங்க வைக்கும் தீட்டை அவர்கள் தகர்த்தெறிந்தார்கள்;
திருஉறைவிடத்தைச் சுற்றிலும் முன்புபோல் உயர்ந்த மதில்கள் எழுப்பியுள்ளார்கள்;
அவனுடைய நகராகிய பெத்சூரைச் சுற்றிலும் அவ்வாறே செய்திருக்கிறார்கள்"
என்றும் எடுத்துரைத்தார்.


8 இச்செய்தியைக் கேட்ட மன்னன் அதிர்ச்சியடைந்து மிகவும் நடுங்கினான்;
தான் திட்டமிட்டவண்ணம் நடவாததால் துயரம் தாங்காது
நோயுற்றுப் படுத்த படுக்கையானான்;
9 கடுந்துயரம் அவனை ஆட்கொண்டதால் அங்குப் பல நாள் கிடந்தான்;
தான் விரைவில் சாகவிருந்ததை உணர்ந்தான்.
10 ஆகவே அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து,
"என் கண்களினின்று தூக்கம் அகன்றுவிட்டது;
கவலையினால் என் உள்ளம் உடைந்து விட்டது.
11 'எவ்வளவு துயரத்திற்கு ஆனானேன்!
இப்போது எத்துணைப் பெரும் துயரக்கடலில் அமிழ்ந்துள்ளேன்!
நான் ஆட்சியில் இருந்தபோது அன்பு செலுத்தி, அன்பு பெற்றேனே' என்று
எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
12 ஆனால் எருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன்;
அங்கு இருந்த பொன், வெள்ளிக் கலன்கள் அனைத்தையும் கவர்ந்து சென்றேன்;
யூதாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றி அழித்தொழிக்கும்படி கட்டளையிட்டேன்.
13 இதனால்தான் இந்தக்கேடுகள் எனக்கு வந்துற்றன என நான் அறிவேன்.
இப்போது அயல்நாட்டில் துயர மிகுதியால் அழிந்துகொண்டிருக்கிறேன்" என்று கூறினான்.


14 அவன் தன் நண்பர்களுள் ஒருவனான பிலிப்பை அழைத்துத்
தன் பேரரசு முழுவதற்கும் அவனைப் பொறுப்பாளியாக ஏற்படுத்தினான்;
15 தன் மகன் அந்தியோக்கை வளர்த்து ஆளாக்கி அரசனாக்கும்படி
தன் அரச முடியையும் ஆடையையும் கணையாழியையும் அவனுக்கு அளித்தான்.
16 நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு [1] பாரசீகத்திலேயே அந்தியோக்கு மன்னன் இறந்தான்.

ஐந்தாம் அந்தியோக்கும் லீசியாவும் புரிந்த போர்கள்[தொகு]


17 மன்னன் இறந்துவிட்டான் என்று லீசியா அறிந்ததும்,
அவனுடைய மகன் அந்தியோக்கை அவனுடைய தந்தைக்கு பதிலாக மன்னனாக ஏற்படுத்தினான்;
யூப்பாத்தோர் என்று அவனுக்குப் பெயரிட்டான்.
இந்த லீசியாதான் அவனை இளவயதிலிருந்து வளர்த்துவந்திருந்தான். [2]


18 இதற்கிடையில் எருசலேம் கோட்டையில் இருந்த பகைவர்கள்
திருஉறைவிடத்தைச் சுற்றி இருந்த இஸ்ரயேலரை வளைத்துக்கொண்டார்கள்;
அவர்களுக்குத் தொடர்ந்து கேடு விளைவித்துப்
பிற இனத்தாரை வலுப்படுத்த முயன்றுவந்தார்கள்.
19 எனவே யூதா பகைவர்களை அழித்தொழிக்க முடிவுசெய்து
அவர்களை முற்றுகையிட மக்கள் அனைவரையும் கூட்டுவித்தார்.
20 நூற்று ஐம்பதாம் ஆண்டு [3] அவர்கள் எல்லாரும் ஒன்று கூடிக்
கோட்டையை முற்றுகையிட்டார்கள்;
முற்றுகை மேடுகளும் படைப்பொறிகளும் அமைத்தார்கள்.
21 முற்றுகைக்கு உள்ளானவர்களுள் சிலர் வெளியே தப்பிவந்தனர்.
இஸ்ரயேலில் இறைப்பற்றில்லாத சிலர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
22 இவர்கள் எல்லாரும் மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்;
"எவ்வளவு காலம் எங்களுக்கு நீதி வழங்காமலும்
எங்கள் உறவின் முறையினரை பழிவாங்காமலும் இருப்பீர்?
23 நாங்கள் உம்முடைய தந்தைக்குப் பணிபுரியவும்,
அவரது சொற்படி நடக்கவும்
அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் விருப்பம் கொண்டிருந்தோம்.
24 இதனால் எங்களுடைய மக்களின் மைந்தர்கள் கோட்டையை முற்றுகையிட்டார்கள்;
எங்களுக்குப் பகைவர்கள் ஆனார்கள்;
கண்ணில்பட்ட எம்மவர் எல்லாரையும் கொலை செய்தார்கள்;
எங்கள் உரிமைச் சொத்துக்களைப் பறித்துக்கொண்டார்கள்;
25 எங்களை மட்டுமல்ல, அவர்களின் எல்லையைச் சுற்றிலும் உள்ள
எல்லா நாடுகளையுமே தாக்கினார்கள்.
26 எருசலேம் கோட்டையைக் கைப்பற்ற
இன்று அதை முற்றுகையிட்டிருக்கிறார்கள்;
திருஉறைவிடத்தையும் பெத்சூரையும் வலுப்படுத்தியுள்ளார்கள்.
27 நீர் விரைந்து அவர்களைத் தடுக்காவிடில்
இவற்றைவிடக் கொடியவற்றையும் செய்வார்கள்.
அவர்களை அடக்குவது உமக்கு முடியாமற்போகும்" என்று கூறினார்கள்.


28 இதைக் கேட்ட மன்னன் சினங் கொண்டான்;
தன் நண்பர்கள், படைத் தலைவர்கள், குதிரைப்படைத் தலைவர்கள்
அனைவரையும் ஒன்றுகூட்டினான்.
29 அயல்நாடுகளிலிருந்தும் தீவுகளிலிருந்தும்
கூலிப்படைகள் அவனிடம் வந்து சேர்ந்துகொண்டன.
30 அவனுடைய படை ஓர் இலட்சம் காலாள்களையும்
இருபதாயிரம் குதிரை வீரர்களையும்
போருக்குப் பயிற்சி பெற்றிருந்த முப்பத்திரண்டு யானைகளையும் கொண்டிருந்தது.
31 அவர்கள் இதுமேயா வழியாகச் சென்று
பெத்சூருக்கு எதிரே பாசறை அமைத்துப் பல நாள் போர்புரிந்தார்கள்;
படைப் பொறிகளும் செய்துகொண்டார்கள்.
ஆனால், முற்றுகையிடப்பட்ட யூதர்கள் வெளியேறி
படைப்பொறிகளைத் தீக்கரையாக்கி வீரத்தோடு போர்செய்தார்கள்.


32 கோட்டையிலிருந்து யூதா புறப்பட்டு
மன்னனுடைய பாசறைக்கு எதிராய்ப் பெத்செக்கரியாவில் பாசறை அமைத்தார்.
33 விடியற்காலையில் மன்னன் எழுந்து
பெத்செக்கரியாவுக்குப் போகும் வழியில்
தன் படையை வேகமாய் நடத்திச் சென்றான்.
படை வீரர்கள் போருக்கு ஆயத்தமாகி எக்காளங்களை முழங்கினார்கள்.
34 யானைகளைப் போருக்குத் தூண்டியெழுப்ப
அவர்கள் அவற்றுக்குத் திராட்சை மதுவையும்
முசுக்கட்டைப் பழச்சாற்றையும் கொடுத்தார்கள்.
35 யானைகளைக் காலாட்படையினரிடையே பிரித்துக் கொடுத்தார்கள்.
ஒவ்வொரு யானையோடும் இரும்பு கவசங்களையும்
வெண்கலத் தலைச்சீராக்களையும் அணிந்த ஆயிரம் வீரர்களையும்
ஐந்நூறு தேர்ந்தெடுத்த குதிரைவீரர்களையும் ஒதுக்கிவைத்தார்கள்.
36 இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே
யானைகள் இருந்த இடங்களில் ஆயத்தமாய் இருந்தார்கள்;
எங்கெல்லாம் அவை சென்றனவோ அங்கெல்லாம் இவர்களும் சென்றார்கள்;
அவற்றைவிட்டுப் பிரியவேயில்லை.
37 ஒவ்வொரு யானைமீதும் மரத்தினால் செய்யப்பட்ட
வலிமை பொருந்திய அம்பாரி ஒன்று வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது;
அது யானையோடு வலுவான கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வோர் அம்பாரியிலும் நான்கு வீரர்கள் இருந்து கொண்டு போர் செய்தார்கள்.
யானைப் பாகனும் [4] யானைமீது அமர்ந்திருந்தான்.
38 எஞ்சிய குதிரை வீரர்கள் படையின் இரு பக்கமும் நிறுத்தப்பட்டார்கள்;
இவர்கள் ஆங்காங்கே தாக்கி, காலாட்படைக்குப் பாதுகாப்புக் கொடுத்தார்கள்.
39 பொன், வெண்கலக் கேடயங்களின்மேல் கதிரவனின் ஒளி பட்டபோது
மலைகள் அவற்றால் ஒளிர்ந்து எரியும் தீப்பந்தம்போல மிளிர்ந்தன.
40 மன்னனுடைய படையின் ஒரு பகுதி
உயர்ந்த மலைகள்மீது பரவியிருந்தது;
மற்றொரு பகுதி சமவெளியில் இருந்தது.
படைவீரர்கள் உறுதியாகவும் ஒழுங்காகவும் முன்னேறிச் சென்றார்கள்.
41 படைத்திரளின் பேரொலியையும் அதன் அணி வகுப்பால் ஏற்பட்ட பேரிரைச்சலையும்
படைக்கலங்களால் உண்டான சல சலப்பையும் கேட்டவர்கள் அனைவரும் நடுங்கினர்;
ஏனென்றால் படை மிகப் பெரியதும் வலிமைமிக்கதுமாய் இருந்தது.


42 யூதாவும் அவருடைய படையும் போர் புரிய முன்னேறிச் செல்லவே
மன்னனுடைய படையில் அறுநூறு பேர் மாண்டனர்.
43 மன்னனுக்குரிய படைக்கலங்களைத் தாங்கிய ஒரு யானையை
அவரான் என்னும் எலயாசர் கண்டார்.
அது மற்றெல்லா யானைகளையும்விடப் பெரியதாய் இருந்தது.
எனவே அதன்மேல் இருந்தது மன்னன்தான் என்று எலயாசர் எண்ணினார்.
44 அவர் தம் மக்களைக் காப்பதற்கும்
நிலையான புகழைத் தமக்கென்று தேடிக்கொள்வதற்கும் தம் உயிரைத் தியாகம் செய்தார்.
45 காலாட்படையின் நடுவே வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இருந்தவர்களைக் கொன்றவண்ணம்
துணிவோடு அந்த யானையை நோக்கி ஓடினார்.
அவர்கள் இரு பக்கமும் சிதறி ஓடினார்கள்.
46 அவர் அந்த யானைக்கு அடியில் புகுந்து,
கீழிருந்து அதைக் குத்திக் கொன்றார்.
அது நிலத்தில் அவர்மேல் விழ அவர் அங்கேயே இறந்தார்.
47 மன்னனுடைய வலிமையையும்
அவனுடைய படைவீரர்களின் கடும் தாக்குதலையும் கண்டு
யூத மக்கள் அவர்களிடமிருந்து தப்பியோடினார்கள்.


48 மன்னனுடைய படைவீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு
எருசலேம்வரை சென்றார்கள்.
யூதேயாவுக்கும் சீயோன் மலைக்கும் எதிரே மன்னன் பாசறை அமைத்தான்.
49 அவன் பெத்சூரில் இருந்தவர்களோடு சாமாதானம் செய்துகொண்டான்.
அவர்கள் நகரைவிட்டு வெளியேறினார்கள்;
ஏனெனில் முற்றுகையை எதிர்த்து நிற்க
அவர்களுக்கு உணவுப் பொருள்கள் அங்குக் கிடைக்கவில்லை.
அதற்குக் காரணம் நிலத்துக்கு அது ஓய்வு ஆண்டு. [5]
50 மன்னன் பெத்சூரைக் கைப்பற்றி அதைக் காப்பதற்குக் காவற்படை ஒன்றை நிறுவினான்.
51 பிறகு திருஉறைவிடத்தை எதிர்த்துப் பல நாள் முற்றுகையிட்டான்;
முற்றகை மேடுகளையும் படைப்பொறிகளையும் நிறுவினான்;
நெருப்பையும் கற்களையும் எறியவல்ல கருவிகளையும்
அம்பு எய்யும் வில்களையும் கவண்களையும் செய்தான்.
52 அவற்றுக்கு ஈடு கொடுக்கும் முறையில் யூதர்களும் படைப்பொறிகளை நிறுவிப்
பல நாள் அவர்களை எதிர்த்துப் போராடினார்கள்.
53 அது ஏழாவது ஆண்டாக இருந்ததால்
உணவுக்கிடங்கில் உணவுப் பொருள்கள் ஒன்றும் இல்லை.
பிற இனத்தாரிடமிருந்து பாதுகாப்புத் தேடி யூதேயா வந்திருந்தவர்கள்
உணவுக்கிடங்கில் எஞ்சியிருந்ததை உண்டு தீர்த்து விட்டார்கள்.
54 திருஉறைவிடத்தில் சில வீரர்களே இருந்தார்கள்;
பஞ்சம் கடுமையாகத் தாக்கியதால்
மற்றவர்கள் அவரவர் தம் வீடுகளுக்குச் சிதறிபோய் விட்டார்கள்.
55 அந்தியோக்கு மன்னன் உயிருடன் இருந்தபோது,
தன் மகன் அந்தியோக்கை ஆளாக்கி அரசனாக்கும்படி நியமித்திருந்த பிலிப்பு,
56 மன்னனோடு சென்றிருந்த படைகளுடன் பாரசீகம், மேதியா
ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிவந்துள்ளான் என்றும்,
ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறான் என்றும் லீசியா கேள்விப்பட்டான்.
57 எனவே, அவன் உடனே பின்வாங்குவதற்குக் கட்டளை பிறப்பித்து,
மன்னனிடமும் படைத்தலைவர்களிடமும் வீரர்களிடமும்,
"நாளுக்கு நாள் நாம் வலிமைகுன்றி வருகிறோம்.
உணவுப்பொருள்களும் மிகக் குறைவாகவே உள்ளன.
நாம் எந்த இடத்தை எதிர்த்து முற்றுகையிட்டியிருக்கிறோமோ
அந்த இடம் வலிமை வாய்ந்தது.
நமது ஆட்சியின் நடவடிக்கைகளை நாம் கவனிக்க வேண்டிய
உடனடித் தேவை ஏற்பட்டுள்ளது.
58 ஆதலால் இப்போது இந்த மனிதர்களோடு நல்லறவு பாராட்டுவோம்;
அவர்களோடும் அவர்களுடைய இனத்தார் அனைவரோடும் சமாதானம் செய்துகொள்வோம்.
59 அவர்கள் முன்புபோலத் தங்கள் சட்டங்களின்படி நடக்க விட்டுவிடுவோம்.
அவர்களுடைய சட்டங்களை நாம் அழித்ததானால்தான்
அவர்கள் சினங்கொண்டு இவற்றையெல்லாம் செய்தார்கள்" என்று உரைத்தான்.


60 அவனது கூற்று மன்னனுக்கும் படைத்தலைவர்களுக்கும் ஏற்புடையதாய் இருந்தது.
லீசியா யூதர்களோடு சமாதானம் செய்துகொள்ள முன்வர, அவர்களும் அதற்கு இசைந்தார்கள்.
61 மேலும் மன்னனும் படைத்தலைவர்களும் ஆணையிட்டு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தினார்கள்.
அதன் விளைவாக யூதர்கள் கோட்டையை விட்டு வெளியேறினார்கள்.
62 ஆனால் மன்னன் சீயோன் மலைக்குச் சென்று
அது எத்துணை வலிமை வாய்ந்த கோட்டை என்று கண்டபோது,
தான் கொடுத்திருந்த ஆணையை மீறினான்;
அதைச் சுற்றிலும் இருந்த மதில்களை அழிக்கும்படி கட்டளையிட்டான்;
63 பின்னர், அவன் அங்கிருந்து விரைந்து
அந்தியோக்கி நகருக்குத் திரும்பினான்;
அந்நகர் பிலிப்பின் கட்டுப்பாட்டில் இருக்கக் கண்டு,
அவனோடு போரிட்டு நகரை வன்முறையில் கைப்பாற்றினான். [6]


குறிப்புகள்

[1] 6:16 - கி.மு. 163.
[2] 6:1-17 = 2 மக் 1:11-17; 9:1-29; 10:9-11.
[3] 6:20 - கி.மு. 162.
[4] 6:37 - யானைப் பாகனைக் குறிக்க,
மூல பாடம் "இந்தியன்" என்னும் சொல்லை ஆள்கிறது.
[5] 6:49 = லேவி 25:1-5.
[6] 18-63 = 2 மக் 11:22-26; 12:1-26.


(தொடர்ச்சி): மக்கபேயர் - முதல் நூல்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை