திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/மக்கபேயர் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்." - 2 மக்கபேயர் 7:1


2 மக்கபேயர் (The Second Book of Maccabees)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

சகோதரர்கள் எழுவரின் சான்று[தொகு]


1 அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும்
அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்;
சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச்
சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி
மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
2 அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில்,
"நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன?
எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட
நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்" என்றார்.
3 உடனே மன்னன் கடுஞ்சீற்றம் கொண்டான்;
அகன்ற தட்டுகளையும் கொப்பரைகளையும் சூடாக்கும்படி ஆணையிட்டான்.
4 அவை விரைவில் சூடாக்கப்பட்டன.
முன்னர்ப் பேசியவருடைய உடன்பிறப்புகளும் தாயும் பார்த்துக்கொண்டிருக்க,
அவருடைய நாக்கைத் துண்டிக்கவும், குடுமித் தோலைக் கீறி எடுக்கவும்,
கை கால்களை வெட்டவும் மன்னன் ஆணையிட்டான்.
5 அவரால் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில்,
அவர் இன்னும் உயிருடன் இருந்தபோதே
அவரை அடுப்புக்கு அருகில் கொண்டுபோய்,
அகன்ற தட்டில் போட்டு வாட்டும்படி கட்டளையிட்டான்.
அதிலிருந்து புகை எங்கும் பரவியது.
ஆனால் அவருடைய சகோதரர்களும் தாயும் மதிப்போடு இறக்கும்படி
ஒருவருக்கு ஒருவர் ஊக்கமூட்டிக் கொண்டார்கள்.
6 "கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கண்காணித்துவருகிறார்;
மக்களுக்கு எதிராகச் சான்று பகர்ந்து அவர்கள்முன்,
'ஆண்டவர் தம் ஊழியர்கள்மீது இரக்கம் காட்டுவார்' என்று
மோசேயின் திருப்பாடலில் வெளிப்படுத்தியிருப்பதுபோல்,
அவர் உண்மையாகவே நம்மீது பரிவு காட்டுகிறார்"
என்று சொல்லிக் கொண்டார்கள். [1]


7 முதல் சகோதரர் இவ்வாறு இறந்தபின்,
கேலிசெய்யுமாறு இரண்டாமவரைக் கூட்டிவந்தார்கள்.
அவருடைய தலையின் தோலை முடியோடு உரித்த பிறகு,
'பன்றி இறைச்சியை உண்ணுகிறாயா? அல்லது
உன் உடல் உறுப்புகளை ஒவ்வொன்றாய் நாங்கள் வதைக்கட்டுமா?'
என்று அவரிடம் கேட்டார்கள்.
8 அவர் தம் தாய்மொழியில், 'உண்ணமாட்டேன்' என்று பதில் உரைத்தார்.
ஆகவே அவரும் முந்தின சகோதரரைப் போலக் கொடிய துன்பங்களுக்கு உள்ளானார்.
9 தாம் இறுதி மூச்சு விடும் வேளையில்,
"நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய்.
ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு
அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்;
ஏனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே" என்று கூறினார். [2]
10 அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள்.
அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,
உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்;
11 "நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்;
அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.
அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக் கொள்வேன் என நம்புகிறேன்"
என்று பெருமிதத்தோடு கூறினார்.
12 அவர்தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை.
எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும்
இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டுவியந்தார்கள்.


13 அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள்
அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள்.
14 அவர் இறக்கும் தறுவாயில்,
"கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால்,
மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன்.
ஆனால் நீ வாழ்வுபெற உயிர்த்தெழமாட்டாய்" என்றார்.
15 அதன்பின் ஐந்தாமவரைக் கூட்டி வந்து அவரையும் வதைத்தார்கள்.
16 அவர் மன்னனைப் பார்த்து,
"நீ சாவுக்குரியவனாய் இருந்தும்,
மனிதர்மேல் உனக்கு அதிகாரம் இருப்பதால் நீ விரும்பியதைச் செய்கிறாய்.
ஆனால் கடவுள் எங்கள் இனத்தைக் கைவிட்டுவிட்டார் என எண்ணாதே.
17 அவரின் மாபெரும் ஆற்றல் உன்னையும் உன் வழிமரபினரையும்
எவ்வாறு வதைக்கப்போகிறது என்பதை நீ விரைவில் காண்பாய்" என்றார்.


18 அவருக்குப்பின் ஆறாமவரைக் கூட்டிவந்தார்கள்.
அவரும் உயிர்பிரியும் வேளையில்,
"வீணாக நீ ஏமாந்து போகாதே;
ஏனெனில் எங்கள் பொருட்டே,
எங்கள் கடவுளுக்கு நாங்கள் செய்துள்ள பாவங்களின் பொருட்டே
இவ்வாறு துன்பப்படுகிறோம்.
ஆகவேதான் இத்தகைய வியத்தகு செயல்கள் எங்களுக்கு நிகழ்ந்துள்ளன.
19 ஆனால் கடவுளுக்கு எதிராகப் போராடத் துணிந்த நீ
தண்டனைக்குத் தப்பலாம் என எண்ணாதே" என்று கூறினார்.


20 எல்லாருக்கும் மேலாக,
அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர்.
ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்டபோதிலும்,
ஆண்டவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்
அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்;
21 அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார்;
பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும்
ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம்,
22 "நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்;
உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல;
உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல.
23 உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்;
எல்லாப் பொருள்களையும் உண்டாக்கியவர்;
அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும்
மீண்டும் கொடுப்பார்;
ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு
நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை" என்றார்.


24 தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்;
அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்;
எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு,
"உன் முதாதையரின் பழக்கவழக்கங்களை நீ கைவிட்டுவிட்டால்,
உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறுகொள்ளும் வகையில்
உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு,
என் நண்பனாகவும் ஏற்றுக்கொண்டு
உனக்கு உயர் பதவி வழங்குவேன்" என்று சொன்னது மட்டுமன்றி
உறுதியும் கூறி ஆணையிட்டான்.
25 அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால்,
அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து,
அந்த இளைஞர் தம்மையே காத்துக்கொள்ளும்படி
அறிவுரை கூறுமாறு வேண்டினான்.
26 மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால்,
அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார்.
27 ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய்,
அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில்,
"மகனே, என்மீது இரக்கங்கொள்.
ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்;
மூன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்;
இந்த வயது வரை உன்னைப் பேணிக் காத்துவந்துள்ளேன்.
28 குழந்தாய், உன்னை நான் வேண்டுவது:
விண்ணையும் மண்ணையும் பார்;
அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு.
கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை.
இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்துகொள்வாய்.
29 இக்கொலைஞனுக்கு அஞ்சாதே;
ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு.
இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும்
நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி
இப்போது சாவை ஏற்றுக்கொள்" என்று சொல்லி ஊக்கமூட்டினார்.


30 தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்:
"எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன்.
மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட
திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன்.
31 எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ,
கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்;
32 எங்கள் சொந்தப் பாவங்களின் பொருட்டே நாங்கள் துன்புறுகிறோம்.
33 எங்களைக் கண்டிக்கவும் பயிற்றுவிக்கவும்
உயிருள்ள எங்கள் ஆண்டவர் சிறிது காலம் சினங்கொண்டாலும்,
தம் ஊழியர்களாகிய எங்களோடு மீண்டும் நல்லுறவு கொள்வார்.
34 ஆதலால், இழிந்தவனே, எல்லா மனிதருள்ளும் கேடுகெட்டவனே,
விண்ணக இறைவனின் மக்களை நீ தண்டிக்கும்போது செருக்குறாதே;
உறுதியற்றவற்றை நம்பித் திமிர் கொண்டு துள்ளாதே.
35 எல்லாம் வல்லவரும் அனைத்தையும் காண்பவருமான
கடவுளின் தண்டனைத் தீர்ப்பினின்று நீ இன்னும் தப்பிவிடவில்லை.
36 என் சகோதரர்கள் [3] சிறிது துன்பப்பட்டபின்
கடவுளுடைய உடன்படிக்கைக்கு ஏற்ப
என்றுமுள வாழ்வில் பங்கு கொண்டார்கள்;
ஆனால் நீ கடவுளின் தண்டனைத் தீர்ப்பால்
உன்னுடைய ஆணவத்திற்கு ஏற்ற தண்டனையைப் பெறுவாய்.
37 என் சகோதரர்களைப் போன்று எங்கள் மூதாதையரின் சட்டங்களுக்காக
நானும் என் உடலையும் உயிரையும் ஒப்படைக்கிறேன்;
எங்கள் நாட்டின்மீது விரைவில் இரக்கம் காட்டுமாறும்,
துன்பங்களாலும் சாட்டையடிகளாலும்
அவர் ஒருவரே கடவுள் என நீ அறிக்கையிடுமாறும் அவரை மன்றாடுகிறேன்.
38 எங்கள் இனம் முழுவதன்மீதும் முறைப்படி வந்துள்ள
எல்லாம் வல்லவருடைய சினம் என் வழியாகவும்
என் சகோதரர்கள் வழியாகவும் முடிவுக்கு வருமாறும் அவரை வேண்டுகிறேன்."


39 அவருடைய ஏளனச் சொற்களால் எரிச்சல் அடைந்த மன்னன் சீற்றம் அடைந்தான்;
மற்ற அனைவரையும்விட அவரை மிகக் கொடுமையாய் வதைத்தான்.
40 எனவே அந்த இளைஞர் ஆண்டவரிடம் முழு நம்பிக்கை கொண்டவராய்
மாசற்ற நிலையில் மாண்டார்.
41 இறுதியாக, தம் மக்களைத் தொடர்ந்து அந்தத் தாயும் இறந்தார்.


42 பலிப்பொருள்களை உண்ண யூதர்கள் கட்டாயத்துக்கு உள்ளானது பற்றியும்
அதற்காக அவர்கள் பட்ட பாடுபற்றியும் இதுவரை எழுதியது போதும்.


குறிப்புகள்

[1] 7:6 = இச 31:21,26; 32:36.
[2] 7:9 = எபி 11:35.
[3] 7:36 - "நம் சகோதரர்கள்" என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 8[தொகு]

5. யூதாவின் வெற்றிகள்[தொகு]

யூதாவின் கிளர்ச்சி[தொகு]


1 யூதா மக்கபேயும் அவருடைய தோழர்களும்
யாருக்கும் தெரியாமல் ஊர்களில் நுழைந்து
தங்களுடைய உறவினர்களை அழைத்து,
யூத நெறியில் பற்றுறுதியோடு இருந்த மற்றவர்களையும் சேர்த்து,
ஏறத்தாழ ஆறாயிரம் பேரைத் திரட்டினார்கள்.
2 அவர்கள் ஆண்டவரைத் துணைக்கு அழைத்து,
அனைவராலும் ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்ணோக்கும்படியும்
இறைப்பற்றில்லாத மனிதரால் தீட்டுப்பட்ட கோவில்மீது
இரக்கங்கொள்ளும்படியும் மன்றாடினார்கள்;
3 அழிந்து தரைமட்டமாகும் நிலையில் இருந்த நகரின்மீது
இரக்கம் காட்டும்படியும்,
ஆண்டவரை நோக்கி முறையிடும் குருதியின் குரலுக்குச்
செவிசாய்க்கும்படியும்,
4 சட்டத்துக்கு எதிராக மாசற்ற குழந்தைகளைப் படுகொலை செய்ததையும்
அவரது பெயரைப் பழித்துரைத்ததையும் நினைவுகூரும்படியும்,
தீமைமீது அவருக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தும்படியும் வேண்டினார்கள்.


5 மக்கபே தம் வீரர்களுக்கு முறையான பயிற்சி அளித்ததால்
பிற இனத்தார் அவரை எதிர்த்துநிற்க முடியவில்லை;
ஆண்டவருடைய சினம் அப்போது இரக்கமாக மாறியிருந்தது.
6 மக்கபே திடீரென வந்து நகரங்கள்,
ஊர்கள்தோறும் புகுந்து அவற்றுக்குத் தீவைப்பார்;
போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்றியபின்
பல பகைவர்களைத் துரத்தியடிப்பார்.
7 இத்தகைய தாக்குதலுக்கு இரவு வேளை
மிகவும் ஏற்றதாக இருக்கக் கண்டார்.
அவருடைய பேராண்மை பற்றிய பேச்சு எங்கும் பரவிற்று. [1]

நிக்கானோரின் படையெடுப்பு[தொகு]


8 யூதா சிறிது சிறிதாக முன்னேறி வருவதையும்
மேன்மேலும் வெற்றிகள் பெற்றுவருவதையும் கண்ட பிலிப்பு,
அரசின் நலன்களைக் காக்க உதவிக்கு வருமாறு கூலேசீரியா,
பெனிசியா நாடுகளின் ஆளுநரான தாலமிக்கு மடல் எழுதினார்.
9 உடனடியாகப் பத்ரோக்குலின் மகனும் மன்னனின் முக்கிய நண்பர்களுள் ஒருவனுமான
நிக்கானோரைத் தாலமி தேர்ந்தெடுத்து,
யூத இனம் முழுவதையும் அடியோடு அழிப்பதற்காகப்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த
இருபதாயிரத்திற்குக் குறையாத வீரர்களுக்குத் தலைவனாக
அவனை அனுப்பி வைத்தான்;
படைத்தலைவனும் போர்த்தொழிலில் மிகுந்த பட்டறிவும் கொண்டவனுமான
கோர்கியாவையும் அவனுடன சேர்த்து அனுப்பினான்.
10 பிடிபடும் யூதர்களை அடிமைகளாக விற்பதால் கிடைக்கும் தொகையைக் கொண்டு,
உரோமையர்களுக்கு மன்னன் திறையாகச் செலுத்தவேண்டிய
எண்பது டன் [2] வெள்ளியைக் கொடுக்க நிக்கானோர் திட்டமிட்டான்.
11 எல்லாம் வல்லவரின் தண்டனைத் தீர்ப்பு தன்மேல் வரப்போகிறது
என்பதை எதிர்பாராத நிக்கானோர்,
நாற்பது கிலோ வெள்ளிக்கு அடிமைகளைக் கொடுப்பதாக உறுதியளித்து,
யூத அடிமைகளை வாங்க வருமாறு
கடலோர நகரங்களுக்கு உடனே சொல்லியனுப்பினான். [3]


12 நிக்கானோரின் படையெடுப்பை அறிந்த யூதா
அவனது படையின் வருகைபற்றித் தம்மோடு இருந்தவர்களிடம் கூறினார்.
13 கோழைகளும் கடவுளின் நீதியில் நம்பிக்கையற்றவர்களும்
அவரைவிட்டு ஓடினார்கள்;
14 மற்றவர்கள் தங்களிடம் எஞ்சியிருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றார்கள்;
போரிடுமுன்பே தங்களை விற்றுவிட்ட
கொடியவனான நிக்கானோரிடமிருந்து தங்களை விடுவிக்குமாறு
ஆண்டவரை வேண்டினார்கள்.
15 தங்கள்பொருட்டு ஆண்டவர் இவ்வேண்டுதலை நிறைவேற்றாவிடினும்,
அவர் தங்கள் மூதாதையரோடு செய்திருந்த உடன்படிக்கைகளின் பொருட்டாவது,
அவர்கள் தாங்கியிருந்த தூய்மையும் மாட்சியும் மிக்க பெயரின் பொருட்டாவது
நிறைவேற்றும்படி மன்றாடினார்கள்.


16 மக்கபே தம் ஆள்கள் ஆறாயிரம் பேரையும் ஒன்று திரட்டினார்;
பகைவரைக் கண்டு கலங்காதிருக்கவும்,
தகுந்த காரணமின்றித் தங்களை எதிர்த்து வருகின்ற
பெருந்திரளான பிற இனத்தார்முன் அஞ்சாமலிருக்கவும்,
துணிவுடன் போராடவும் அவர்களுக்கு அறிவுரை கூறினார்;
17 மேலும் சட்டத்துக்கு முரணாகப் பிற இனத்தார்
திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்தியதையும்,
இழிவுற்ற நகருக்குக் கொடுஞ்செயல் புரிந்ததையும்,
தங்கள் மூதாதையருடைய வாழ்க்கைமுறையை மாற்றியதையும்
தங்கள் கண்முன் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
18 "பிற இனத்தார் படைக்கலங்களையும் தீரச்செயல்களையும் நம்பியிருக்கின்றனர்;
நாமோ நம் எதிரிகளையும், ஏன் - உலகம் அனைத்தையுமே -
ஒரு தலையசைப்பால் அழிக்கக்கூடிய
எல்லாம் வல்ல கடவுளை நம்பியிருக்கிறோம்" என்று அவர் கூறினார். [4]
19 மேலும், தம் மூதாதையருக்கு உதவி கிடைத்த நேரங்களைப் பற்றி
அவர்களுக்கு எடுத்துச் சொன்னபோது
சனகெரிபின் காலத்தில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர்
அழிந்தனர் என்று மொழிந்தார்; [5] [6]
20 பாபிலோனியாவில் கலாத்தியருக்கு எதிராக நடைபெற்ற போரில்
நான்காயிரம் மாசிடோனியருடன் சேர்ந்து
எண்ணாயிரம் யூதர்கள் மட்டுமே கலாத்தியரை எதிர்த்தார்கள்;
இருப்பினும் மாசிடோனியர் நெருக்கப்பட்டபோது
அந்த எண்ணாயிரம் யூதர்கள் விண்ணக இறைவனிடமிருந்து
தங்களுக்குக் கிடைத்த உதவியைக்கொண்டு
இலட்சத்து இருபதாயிரம் காலாத்தியரைக் கொன்றார்கள்;
மிகுந்த கொள்ளைப்பொருள்களையும் எடுத்துச் சென்றார்கள் என்றும் கூறினார்.

நிக்கானோரின் வீழ்ச்சி[தொகு]


21 இத்தகைய சொற்களால் மக்கபே தம் ஆள்களுக்கு ஊக்கமுட்டினார்;
தங்கள் சட்டங்களுக்காகவும் நாட்டுக்காகவும்
உயிரைக் கொடுக்க அவர்களை ஆயத்தப்படுத்தினார்;
அதன்பின் தம் படையை நான்காகப் பிரித்தார்;
22 ஒவ்வொரு பிரிவுக்கும் தலைவராகத்
தம் சகோதரர்களான சீமோன், யோசேப்பு,
யோனத்தான் ஆகியோரை ஏற்படுத்தி,
ஒவ்வொரு பிரிவுக்கும் ஆயிரத்து ஐந்நூறு வீரர்களை ஒதுக்கினார்;
23 மேலும், திருநூலிலிருந்து உரக்கப் படிக்க எலயாசரை ஏற்படுத்தினார்;
"கடவுளே நமக்குத் துணை" என்று கூறிப் போர்க்குரல் எழுப்பினார்.
பின்னர் முதல் படைப்பிரிவைத் தாமே நடத்திச் சென்று
நிக்கானோரை எதிர்த்துப் போர்தொடுத்தார்.
24 எல்லாம் வல்லவர் அவர்கள் பக்கம் நின்று போர்புரியவே,
ஒன்பதாயிரத்திற்கும் மிகுதியான எதிரிகளை அவர்கள் கொன்றார்கள்;
நிக்கானோரின் படையில் பெரும்பாலோரைக் காயப்படுத்தி முடமாக்கினார்கள்;
பகைவர்கள் எல்லாரும் நிலைகுலைந்து ஓடச் செய்தார்கள்;
25 தங்களை அடிமைகளாக வாங்க வந்திருந்தவர்களிடமிருந்து
பணத்தைக் கைப்பற்றினார்கள்.
சிறிது தொலை பகைவர்களைத் துரத்திச் சென்றபின்
ஏற்கெனவே நேரமாகிவிட்டதால் அவர்கள் திரும்பி வரவேண்டியதாயிற்று.
26 அன்று ஓய்வுநாளுக்கு முந்திய நாளாய் இருந்த காரணத்தால்
நீண்ட தொலை அவர்களைத் துரத்திச்செல்லும் முயற்சியைக் கைவிட்டார்கள்.
27 எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்துப் பொருள்களைப் பறித்துக்கொண்டபின்
ஆண்டவரைப் போற்றி நன்றி கூறி ஓய்வுநாளைக் கடைப்பிடித்தார்கள்;
ஏனெனில் அவர் அந்நாள்வரை அவர்களைப் பாதுகாத்திருந்தார்;
அந்நாளில் அவர்கள்மீது தம் இரக்கத்தைப் பொழியத் தொடங்கியிருந்தார்.
28 ஓய்வு நாளுக்குப்பின்
கொள்ளைப் பொருள்களுள் சிலவற்றைப்
போரில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும் கைம்பெண்களுக்கும்
ஆதரவற்றோர்க்கும் கொடுத்தார்கள்;
எஞ்சியதைத் தங்களுக்குள்ளும் தங்கள் பிள்ளைகளோடும் பகிர்ந்து கொண்டார்கள்.
29 இதன்பின் அவர்கள் பொதுவில் கடவுளிடம் கெஞ்சி மன்றாடினார்கள்;
தம் ஊழியர்களோடு முழுமையாக நல்லுறவு கொள்ளும்படி
இரக்கமுள்ள ஆண்டவரை இறைஞ்சி வேண்டினார்கள். [7]

திமோத்தேயு, பாக்கீதின் வீழ்ச்சி[தொகு]


30 திமொத்தேயு, பாக்கீது ஆகியோரின் படைகளோடு யூதர்கள் போராடியபோது
அவர்களுள் இருபதாயிரத்திற்கும் மிகுதியானவர்களைக் கொன்று,
அவர்களின் மிக உயர்ந்த கோட்டைகளுள் சிலவற்றைக் கைப்பற்றினார்கள்.
மிகுந்த கொள்ளைப் பொருள்களுள் ஒரு பாதியைத்
தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள்;
மறு பாதியைப் போரில் துன்புறுத்தப்பட்டோர், ஆதரவற்றோர்,
கைம்பெண்கள், முதியோர் ஆகியோருக்குப் பகிர்ந்தளித்தார்கள்.
31 எதிரிகளின் படைக்கலங்களை ஒன்றுசேர்த்து
மிகக் கவனத்துடன் அவை அனைத்தையும்
போர்த்திறன் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சேமித்துவைத்தார்கள்;
எஞ்சிய கொள்ளைப்பொருள்களை எருசலேமுக்குக் கொண்டுசென்றார்கள்.
32 திமொத்தேயுவின் படைத்தலைவனை அவர்கள் கொன்றார்கள்.
அவன் மிகக் கொடியவன்; யூதர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவன்.
33 தங்கள் மூதாதையரின் நகரில் வெற்றிவிழாவை
அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது,
ஏற்கெனவே தூய இடத்தின் கதவுகளைத்
தீக்கிரையாக்கியிருந்தோரைச் சுட்டெரித்தார்கள்.
இவர்களுள், ஒரு சிறு வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்ட
கல்லிஸ்தேனும் ஒருவன்.
இவ்வாறு இவன் தன் தீச்செயல்களுக்கு ஏற்ற தண்டனையை அடைந்தான்.

நிக்கானோரின் சான்று[தொகு]


34 யூதர்களை விலைக்கு வாங்கும்படி
ஆயிரம் வணிகர்களைக் கூட்டி வந்திருந்த மாபெரும் கயவனான நிக்கானோரை,
35 இழிந்தவர்கள் என்று அவனால் கருதப்பட்டவர்கள்
ஆண்டவரின் துணையோடு தோற்கடிக்க,
அவன் தன் உயர்தர ஆடையைக் களைந்தெறிந்துவிட்டு,
தப்பியோடும் அடிமைபோல் அந்தியோக்கியை அடையும்வரை
நாட்டினூடே தனிமையில் ஓடினான்.
தன் சொந்தப் படையை அழித்ததுதான் அவன் கண்ட பெரும் வெற்றி!
36 எருசலேம் மக்களை அடிமைகளாக விற்று,
அதன் வழியாகக் கிடைக்கும் தொகையைக் கொண்டு
உரோமைகளுக்குத் திறை செலுத்துவதாக உறுதி கூறியிருந்த நிக்கானோர்,
யூதர்களுக்கு ஒரு பாதுகாவலர் உண்டு என்றும்,
அவரால் விதிக்கப்பட்ட சட்டங்களை அவர்கள் பின்பற்றுவதால்
அவர்களைத் தோற்கடிக்க முடியாது என்றும் அறிக்கையிட்டான்.


குறிப்புகள்

[1] 8:1-7 = 1 மக் 3:1-26.
[2] 8:10 - "இரண்டாயிரம் தாலந்து" என்பது கிரேக்க பாடம்.
[3] 8:8-11 = 1 மக் 3:38-41.
[4] 8:18 = 1 சாமு 17:45; திபா 20:7.
[5] 8:19 = 2 மக் 15:22; 2 அர 19:35.
[6] 8:12-19 = 1 மக் 3:42-54.
[7] 8: 21-29 = 1 மக் 3:35-4:27.


(தொடர்ச்சி): மக்கபேயர் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை