பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42 நல்வழிச் சிறுகதைகள்

கடலரசன் சிரித்துக்கொண்டே, "வேண்டிய அளவு எடுத்துக் கொள்" என்றான். காற்றரசன் சிறிது நீரை அள்ளினான். அள்ளிய வேகத்தில் கீழே கொட்டி விட்டான்.

"ஒரே உப்பாயிருக்கிறதே !...” என்றான். இதைக் கேட்ட கடலரசன் பெருஞ்சிரிப்புச் சிரித்தான். என்னிடமுள்ள நீர் குறையாமல் இருப்ப தற்குத்தான் உப்பிட்டு வைத்திருக்கிறேன். இல்லா விட்டால் உன் மாதிரி ஆட்களுக்குப் பிச்சை போட்டே குறைந்து போய்விடும்” என்றான்.

கடலரசன் பேச்சுக் காற்றரசனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. சீற்றத்துடன் பாய்ந்து சென்று கதிரவனிடம் முறையிட்டான்.

"தம்பி, பயப்படாதே ! கடல் அரசனுக்குத் தெரியாமலே நான் கடல்நீரை உறிஞ்சி மேகமாக்கித் தருகிறேன். மேகங்களைத் தள்ளிக் கொண்டு போய் பயிர் பச்சைகளுக்கு மழையாகப் பொழியச் செய்து விடு. அவற்றின் வாட்டம் தீரும் ; ஏரி, குளங்களும் நிறையும்;! தாமாகக் கொடுக்காதவர்கள் செல்வத்தை மறைமுகமாகத்தான் கவர்ந்து நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும்” என்றான் கதிரவன்.

அது, தான் சொன்ன வண்ணமே கடல்நீரை மேகமாக்கியது. காற்று அம்மேகத்தைப் பயிர், செடி, கொடிகளுக்கும், ஏரி குளங்களுக்கும் மழையாகப் பொழியச் செய்தது. உலகம் செழித்தது !

கருத்துரை :- தாமாக உதவி செய்ய முன்வராதவர்களின் செல்வத்தை அவர்களும் மனம் நோகாமல் கவர்ந்து பிறர்க்குதவி செய்வது எல்லோருக்கும் நலம் பயக்கும்.