பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

யிருந்தது. ஆட்டுக் குட்டிகளோடு போட்டி போட்டுக்கொண்டு கள்ளமில்லாத உள்ளங் கொண்ட அந்தச் சிறு பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவார்கள். கஞ்சி குடித்தாலும் அவர்கள் நெஞ்சில் இன்பம் நிறைந்திருந்தது. மாயக்காரியின் கொடுமைகள் இல்லாத அந்த மலையடிவாரம் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் இடமாக இருந்தது.

அம்மா அருகில் இல்லையே என்ற ஒரு துன்பத்தைத் தவிர வேறு எவ்விதத் துன்பமும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

நாட்டை விட்டுப்போன அரசி முகிலி, திரும்பி வரவேயில்லை. தானிருக்க வேண்டிய இடத்தில் ஒரு மாயக்காரி இருக்கிறாள் என்று கேள்விப்பட்டுத்தான் அவள் திரும்பி வரவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள்.

காலம் மாறியது. கார் காலம் வந்தது. ஆனால், கார்மேகங்கள் வானில் கூடவில்லை. கோடை காலத்தினும் கொடுமையாக வெயிலடித்தது. நாளாக நாளாக வெயிலின் கடுமை ஏறிக்கொண்டு போனதே தவிர ஒரு துளி மழைகூட வரவில்லை, அரசி முகிலிக்குக்