வெளிமானும் இளவெளிமானும்
57
அவருக்கு உண்டாயிற்று. அவனை நேரில் பார்த்துப் பேச விரும்பவில்லை. தம் நெஞ்சைப் பார்த்துப் பேசுபவரைப் போலச் சொல்லத் தொடங்கினார்.
“என் நெஞ்சமே பசித்திருந்த காலத்தில் இங்கே வந்து பாடினேன். நான் பாடிய பாட்டு அந்த வள்ளலுடைய காதில் விழுந்தது. அது இன்பமாக விளைந்தது; கொடையாக விளைந்தது. இனியும் விளையும் என்று நச்சியிருந்தேன். அந்த ஆசை பழுதாகிவிட்டது. அறம் இல்லாத கூற்றம் முறையல்லாததைச் செய்யத் துணிந்துவிட்டது. பெண்கள் வருந்தவும் பரிசிலர் புலம்பவும் அவ்வீரன் போய் விட்டான். அவன் உயிரைக் கொண்டு போன யமன் பிழைத்துப் போகட்டும் புலவர்கள் உலகில் வாழத் தான் போகிறார்கள். அவர்கள் புலியைப் போல மிடுக்கு உடையவர்கள். புலி களிற்றை அட்டு உண்ணும் வீரம் உடையது. களிறு கிடைக்காமற் போனால் எலியைப் பார்த்து அடிக்கும் சிறுமை அதற்குத் தெரியாது. நெஞ்சே! வா போகலாம். பள்ளம் உள்ள இடத்துக்குப் போகும் புனலைப்போல அன்பும் வண்மையும் உடைய இடத்துக்குப் போகலாம் வா” என்று அவர் சொல்லித் தம் கருத்தை ஒரு பாட்டாகவே பாடி விட்டார்.[1]
அதைக் கேட்ட இளவெளிமான் சிறிதாவது நாணத்தை அடையவில்லை. புலவர் கூறிய சொற்கள் அவன் உள்ளத்தைப் புண்படுத்தவில்லை. “நான் தந்த பரிசில் சிறிதென்று நீங்கள் நினைக்கிறீர்கள் போல் இருக்கிறது. இதுகூடக் கிடைக்காமல் வாடுகிறவர் பலர் இருக்கிறார்கள். இதைப் பெற்றுக்
- ↑ புறநானூறு, 287.