பக்கம்:குமண வள்ளல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானைப் பரிசில்

65

னால் மூர்ச்சை போடும்படி ஒரு காரியம் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.”

“ஆசை, ஆசை என்று சொல்கிறீர்களே அன்றி, இன்னது வேண்டும் என்று சொல்லவில்லையே!”

“சொல்கிறேன். நான் வரும் வழியை நோக்கி நோக்கிக் கண் மங்கிய அவள் முன் போய் நான் நிற்க வேண்டும். மன்னர்பிரான் வழங்கும் செல்வங்களோடு செல்வது மாத்திரம் அன்று; பனையைப் போன்ற துதிக்கையையும் முத்து உண்டாகும்படி முற்றிய தந்தத்தையும் மலையைப் போன்ற தோற்றத்தையும் உடைய யானையை முகபடாம் முதலியவற்றால் அலங்காரம் செய்து, இருபுறமும் மணிகள் ஒலிக்க, நான் ஏறிச் செம்மாப்புடன் சென்று நிற்கவேண்டும்.”

குமணன் அதைக் கேட்டு நகைத்தான்.

“இந்தப் புலவனுக்குள்ள பேராசை எவ்வளவு என்று எண்ணவேண்டாம். வறுமை யொன்றுதான் என்னிடம் உள்ள ஆற்றல். அது கழுத்தைப் பிடித்துத் தள்ள இங்கே வந்து அரசர் பிரானுடைய வள்ளன்மையைப் புகழ்ந்து பாடுகிறேன். கவிதையாற்றலில் நான் சிறந்தவனோ, அல்லனோ அறியேன். எப்படி இருந்தாலும் என்னுடைய திறமையை நோக்குவதானால் என் ஆசை பேராசையாகவே தோன்றும். ஆனால் ஒன்றை விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் சிறுமையை மன்னர் பிரான் நினைக்கக்கூடாது. தம்முடைய பெருமையை நினைந்து அதற்கு ஏற்ற வகையில் அளிக்கலாம் அல்லவா? மற்றப் பொருள்களை எல்லோரும் வழங்குகிறார்கள், அவர்கள் அனைவரினும் மேம்பட்ட சிறப்பு உடையவர் முதிரமலைத் தலைவர் என்று புலவர்கள் பாடுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குமண_வள்ளல்.pdf/71&oldid=1362648" இலிருந்து மீள்விக்கப்பட்டது