பக்கம்:கோவூர் கிழார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

“அது எப்படி?” என்று மன்னன் கேட்டான். அந்த மன்னனுடைய கேள்வியில் ஆவல் ஒலித்தது.

“இதுகாறும் மன்னர் பிரான் உரைத்த வஞ்சினச் சொற்களை அவன் தெரிந்துகொள்ளும்படி செய்தாலே போதுமென்று தோன்றுகிறது.”

“எனக்குத் தாங்கள் சொல்வது விளங்கவில்லை. நான் இப்படி யெல்லாம் பேசினேன் என்பதை அவனிடம் யாரையாவது சொல்லும்படி செய்வதா?”

“ஒரு விதத்தில் அப்படிச் செய்வதாகத்தான் ஆகும். ஆனால் அவன் காற்றுவாக்கிலே பேசுகிற பேச்சுப்போல இல்லாமல் இது இன்னும் உரமுள்ள உருவத்தில் இருந்தால் நல்லது.”

மன்னனுக்குப் புலவரின் கருத்து விளங்கவில்லை. அவர் கருத்தைத் தெளிந்துகொள்ளும் ஆவல் மிகுதியானமையால், அவன் உள்ளத்தில் முளைத்திருந்த கோபம் ஆறியது. எனக்குத் தங்கள் கருத்தை விளங்கச் சொல்ல வேண்டும்” என்று அமைதியான குரலில் பேசினான் மன்னன்.

புலவர் அதைத்தான் எதிர்பார்த்தார். சற்றே புன்முறுவல் பூத்தார். “மன்னர்பிரான் தம் கருத்தைப் பாடலாகப் பாடி அவன் காதில் விழும்படி செய்தால் அது அவன் மனத்தில் உறைக்கும். யார் யாரிடமோ பிதற்றுகிறானே, அந்தப் பிதற்றல் போன்றதன்று இது என்ற அச்சம் உண்டாகும்” என்று தம் கருத்தைச் சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/19&oldid=1089706" இலிருந்து மீள்விக்கப்பட்டது