பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

மரக்கிளையிலே கயிற்றின் நுனியை நாலைந்து தடவை நன்றாகச் சுற்றிவிட்டது. “டேய் சுந்தரம், உன் பேனாக் கத்தியைக் கொடுடா” என்று கூறி, சுந்தரத்திடமிருந்து தங்கமணி அதை வாங்கிக்கொண்டு, கயிற்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டே வீட்டின் சுவர்களான மரக்கட்டைகளின் மேல் கால்களை மாற்றி மாற்றி வைத்து மேலே ஏறினான். கூரையை அடைந்தவுடன் பேனாக்கத்தியால் வீட்டுக் கூரைக் கட்டைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை அறுத்தெறிந்தான். இரண்டு மூன்று கட்டைகளைக் மெதுவாகக் கீழே தள்ளி விட்டுவிட்டு உள்ளே பார்த்தான். அங்கே சுமார் முப்பது வயதுள்ள ஒரு வாலிபன் கையும் காலும் கட்டுண்டு கிடந்தான், அவன் தான் பசிக்கொடுமையால் அனத்திக் கொண்டிருந்தவன். அவனுடைய முகத்தைப் பார்த்ததும் தங்கமணிக்கு அவனுடைய நிலைமை நன்றாகத் தெரிந்துவிட்டது.

“சுந்தரம், அந்தத் தேங்காய்களை என்கைக்குக் கிடைக்கும் படி கூரை மேல் வீசு” என்று சுந்தரத்தை நோக்கிக் கூவினான்.

“ஏண்டா, பசிக்குதா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தரம் மூன்று தேங்காய்களையும் மேலே வீசினான்.

கூரையிலிருந்து அறுத்து எடுத்த ஒரு சிறு கயிற்றுத் துண்டைக்கொண்டு அந்தத் தேங்காய்களின் குடுமிகளில் கத்தியால் ஓட்டை செய்து சேர்த்துக் கட்டினான். பிறகு, அந்தத் தேங்காய்களைத் தான் தொற்றி ஏறிய கயிற்றின் மற்றொரு நுனியில் கட்டி, வீட்டிற்குள் விட்டான். தானும் கயிற்றைப் பிடித்துக்கொண்டே உள்ளே இறங்கினான். அந்த வாலிபனைக் கட்டியிருந்த கயிற்றையெல்லாம் கத்தியால் அறுத்துவிட்டான். அந்த வாலிபன் பசி மயக்கத்தால் சோர்ந்து அப்படியே தரையில் படுத்திருந்தான். தங்கமணி ஒரு தேங்காயை உடைத்துத் தேங்காய்த் தண்ணீரை அந்த வாலிபன் வாயில் ஊற்றினான். பிறகு, தேங்காயை அவன் உண்ணுமாறு கத்தியால் கீறி எடுத்துக் கொடுத்தான். அந்த வாலிபன் இவ்வாறு மூன்று தேங்காய்களையும் தின்றான்.

அதன் பிறகுதான் அவனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. “நீ யாரப்பா? எப்படி இங்கு வந்தாய்? நீதான் என் உயிரைக்