பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இருந்தாலும் கண்ணகிக்கு அச்சம் நீங்கவில்லை. எங்கும் இருள் சூழ்ந்திருக்கும்படியான நேரத்திலே ஆற்றுக்குள்ளே பரிசலில் அமர்ந்திருப்பது அச்சத்தை அதிகப்படுத்திற்று. மரங்களுக்கிடையே இருந்து கோட்டான் அலறுகின்ற சத்தமும், நரிகள் ஊளையிடுகின்ற குரலும் அடிக்கடி கேட்டன. சிறுத்தைப் புலி ஒன்று திடீரென்று உரத்த குரலில் கர்ஜனை செய்தது. அந்த ஓசை ஆற்றின் இரைச்சலையும் அடக்கி விட்டுத் தூரத்திலுள்ள மலைவரையிலும் சென்று, அங்கிருந்து மீண்டும் நெஞ்சு திடுக்கிடும்படி எதிரொலித்தது.

“தங்கமணி, அதோ, ஆற்றின் நடுவிலே இரண்டு பரிசல்கள் வேகமாகப் போகின்றன, பார்த்தாயா?" என்று சுந்தரம் பரபரப்புடன் கூறினான். இவர்கள் இருந்த பகுதி மிகவும் இருண்டு இருந்த போதிலும் ஆற்றின் மையப் பகுதியில் மரக்கூட்டம் இல்லாமையால் ஓரளவு இருள் குறைவாகவே இருந்தது. அதனால் அங்கு செல்கின்ற பரிசல்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.

"அண்ணா, அண்ணா, நமக்குத்தான் உதவி வந்திருக்கிறது" என்று உற்சாகத்தோடு கூறினாள் கண்ணகி.

நான் சத்தம் போட்டுக் கூப்பிடட்டுமா?" என்று சுந்தரம் ஆவலோடு கேட்டான்.

"அவர்கள் நமக்கு உதவிக்கு வருகிறார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. வஞ்சியூர் சத்திரத்திலிருந்து அப்பாவோ அம்மாவோ பரிசல் அனுப்பியிருந்தால் ஒன்று தான் வந்திருக்கும். இவை அந்தக் குள்ளன் அனுப்பிய பரிசல் என்று தான் நான் நினைக்கிறேன். அவன் நாம் தப்பி வந்திருப்பதை அறிந்துகொண்டிருக்க வேண்டும்." என்று ஆழ்ந்த யோசனையோடு தங்கமணி மொழிந்தான்.

"அப்படியானால் இப்பொழுது நாம் என்ன செய்யலாம் ?" என்று சுந்தரம் பதட்டத்தோடு கேட்டான்.

"அண்ணா, அந்தக் குள்ளன் கையிலே மறுபடியும் நாம் சிக்கக் கூடாது. அதற்கென்ன செய்யலாம்?” என்று கண்ணகியும் கேட்டாள்.

"அந்தப் பரிசல்கள் ஆற்றோடே போகட்டும். நல்ல வேளையாக இந்தப் பரிசல் அவர்கள் கண்ணில் படவில்லை" என்று நிதானமாகப் பதில் சொன்னான் தங்கமணி.