பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

துணிச்சல் கொண்டார்கள். மருதாசலம் வழிகாட்டியாக முன்னால் நடந்தான். வடிவேலு இடயிலே வர, தில்லைநாயகம் கடைசியில் நடந்தார், தங்கமணி முதலியவர்கள் அங்கேயே குகைக்கு முன்னால் தங்கியிருந்தனர். ஜின்கா அவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தது.

ரகசியக் குகையை அணுகியதும் மருதாசலமும் தில்லை நாயகமும் தயங்கி நின்றார்கள். ஆனால் வடிவேலு, தாம் ஊன்றி நடப்பதற்காகக் கொண்டுவந்த நீண்ட மூங்கிற்கழியைக் கையில் எடுத்துக்கொண்டு, முன்னால் சென்று, கதவின் குறுக்குச் சட்டத்தை எடுத்தார். மூங்கிற்கழிகளை எடுத்துக் கொண்டு பின்னாலேயே வரும்படி மற்ற இருவருக்கும் சமிக்கை செய்துவிட்டு, அவர் கதவைத் தள்ளிவைத்து உள்ளே நுழைந்தார். அங்கே மருதாசலம் முன்னால் வைத்துவிட்டுத் திரும்பிய லாந்தர் எரிந்து கொண்டே இருந்தது. கொல்லிமலைக் குள்ளன் கீழே மூர்ச்சையுற்று விழுந்ததாக அவர்கள் கூறிய இடத்தை நோக்கி வடிவேலு பாய்ந்து சென்றார். மருதாசலமும் தில்லைநாயகமும் பின்னாலே எச்சரிக்கையாக வந்தனர். ஆனால், அங்கே குள்ளனைக் காணவில்லை. லாந்தரை எடுத்துக் கொண்டு வடிவேலு, குகையின் ஒவ்வொரு பாகத்திலும் வேகமாகத் தேடினார். உள் குகைக்குள்ளும் சென்று பார்த்தார். மனத்திலே கொஞ்சம் அச்சம் இருந்தாலும் மருதாசலமும் தில்லைநாயகமும் வடிவேலுக்கு உதவியாக அவர் பின்னாளேயே வந்து கொண்டிருந்தார்கள். குள்ளனை எங்குமே காணோம். அவன் மாயமாக மறைந்து விட்டான்.

“தண்ணீர் கசிந்து வழிகின்றதே அந்தப் பக்கத்திலுள்ள சுரங்கத்தை நன்றாகப் பார்த்தீர்களா? வாருங்கள், மறுபடியும் அங்கே போய்ப் பார்க்கலாம்” என்று கூறிக்கொண்டே, லாந்தரை ஒரு கையிலும் மூங்கிற்கழியை ஒரு கையிலும் பிடித்துக் கொண்டு, வடிவேலு அந்தச் சுரங்கம் போன்ற பகுதியில் நடந்தார். தண்ணீர் எப்பொழுதும் கசிவதாலும் சொட்டிக் கொண்டிருப்பதாலும் அந்தப் பகுதி ஒரே வழுக்கலாக இருந்தது. இருந்தாலும் வடிவேலு, எச்சரிக்கையாக அடிமேல்