பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

"கொல்லிமலைக் குள்ளனா ? அவனை எங்களுக்கு தெரியவே தெரியாது. எங்கள் எசமான் தான் அனுப்பினாரு" என்றான் தாழிவயிறன். “யார் உங்க எசமான் ?"

"எங்க எசமான் எசமான் தான். அவரைத் தவிரக் குள்ளனை எங்களுக்குத் தெரியவே தெரியாது" என்றான் தாழிவயிறன், மேலும் நாலு குத்து அவன் வயிற்றில் விழுந்தது. ஆனால், அதற்கு மேலே அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த எசமான் பெயர் இந்த ஆள்களுக்குத் தெரியாது என்பதைப் போலீஸ் வீரர்கள் புரிந்துகொண்டார்கள்.

“சரி, உங்களை எங்கே வரச் சொன்னான் அவன் ? அதைச் சொல்” என்று அதட்டினான் போலீஸ் வீரன்.

"அந்தப் பசங்களையும் பிடித்துக்கொண்டு கொல்லி மலைக்கு அந்தப் பக்கம் தச்சுப்பட்டறைக்கு வரச் சொன்னாங்க” என்று தாழி வயிறன் உண்மையைச் சொன்னான்.

தங்க மணி முதலியோர் எறியுள்ள படகைத் தேடிக் கொண்டே ஆற்றில் செல்லுவதென்றும், தாழிவயிறன் கூறிய தச்சுப்பட்டறைக்குச் சென்று, அங்கே பதுங்கியிருந்து, தாழி வயிறனின் எசமானைக் கைது செய்வதென்றும் போலீஸ் வீரர்கள் தங்களுக்குள்ளேயே முடிவு செய்துகொண்டார்கள். குழந்தைகளைக் காப்பாற்றுவதோடு திருடனையும் பிடித்து விடலாம் என்ற உற்சாகத்தோடு போலீஸ் வீரர்கள் இருந் தார்கள்.

இரண்டு பரிசல்களும் ஆற்றில் வேகமாகச் சென்றன. தாழிவயிறனும் மற்றவர்களும் துடுப்பைச் சுறுசுறுப்போடு போட்டார்கள். இல்லாவிட்டால் உதை கிடைக்கும் என்று அவர்களுக்குப் பயம். அதனால் போலீஸ்காரர்கள் விருப்பப்படியே அவர்கள் நடந்துகொண்டார்கள். அவர்கள் தப்பிப் போய்விடாதவாறு போலீஸ்காரர்கள் எச்சரிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆற்று வெள்ளத்தோடு அந்த