பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 41


“அந்தத் தகராறைத்தான் என்னாலே தீர்க்க முடிஞ்சுது. அவங்க பகைமையைத் தீர்க்க முடியலே!”

(வேர் — அய்க்கன் — பக். 18)


பகைமையை மாற்றிக் கொள்ளாதவர்களுக்குக் கணவன், மனைவி என்ற உறவு என்ன வேண்டியிருக்கிறது?

ஒரு சமுதாயம் சிறப்புற இயங்க, பொதுப்பணிகள் நடைபெறவேண்டும். பாரதிதாசன், ‘பொது நாட்டம் உடையார் வேண்டும்’ என்றான். இன்று, பொது நாட்டம் உடையார் நம்மிடையில் உளரோ? பொதுப்பணியில் நினைவுமிருக்கிறதோ? பொருளும் புகழும் சேர்ப்பதைப் பற்றியே கவலை.

யாராவது ஒருவருக்குப் பொதுப் பணியில் நாட்டமிருந்து திட்டம் தீட்டினால் அதை நிறைவேற்ற முடியாத நிலை! ஏன்? கூட்டாளிகள் சரியில்லை.

ஆம். பல நூறாண்டுகளாகவே தீண்டாமையை ஒழிக்கத் திட்டம்; நடந்ததா? ஏழ்மையை ஒழிக்க ஐந்தாண்டுத் திட்டங்கள் ஒன்றா, இரண்டா? ஏழு ஐந்தாண்டுத் திட்டங்கள் ஏழ்மை அகன்றதா? ஏன்? கூட்டாளிகள் சரியில்லை! நாம் கூறவில்லை. மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை பாடுகிறான்.

             “போதுமான பொருளும், வந்து
                   பொதுப் பணியில் நினைவு வந்தால்
             போட்ட திட்டம் நிறைவேறக்
                   கூட்டாளிகள் சரியில்லை”.


(—பட்டுக்கோட்டை பாடல்கள் பக். 24)

ச—3