உமார் கயாம்/41. குத்துக் கத்தியும் சுட்ட ரொட்டியும்

விக்கிமூலம் இலிருந்து

41. குத்துக் கத்தியும் சுட்ட ரொட்டியும்

சுல்தான் மாலிக்ஷா அவர்கள் தன் சபையைவிட்டு உமார் விடுபட்டுப் போகும்படி விடுவதாக இல்லை. தன்னுடைய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியே, உமார் கூறிய சோதிடக்குறிகளின் பயனாக வந்ததென்று முழு மனதுடன் எண்ணினார். தன்னுடைய வெற்றிகளுக்கும் அதுவே காரணமென்றும் எண்ணினார். உமாரின்மேல் அவருக்கு அளவு கடந்த நம்பிக்கையிருந்தது.

ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் போது உமாரைப்பற்றி அவர் வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது பேச்சோடு பேச்சாக உமார், ‘நிசாம் அவர்கள் எந்தவிதத்திலும் தங்களுக்குத் துரோகம் செய்யவில்லை’ என்றான்.

‘நிசாம், அளவுக்குமீறிய வகையில் என்னுடைய அதிகாரங்களைக் கையாண்டார்’ என்று பதில் கூறிவிட்டு தன்னுடைய திருக்குரான் புத்தகத்திலிருந்த ஒரு சிறு தாளையெடுத்துக் கொடுத்தார். அதிலே, ‘கூடார மடிப்பவன், தேவ தூதன்போல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான். சிங்கத்தின் தோலைப் போர்த்துக்கொண்ட நாய் இதுவென்று தெரிந்து கொள்ளவும்’ என்று தெளிவான கையெழுத்தில் எழுதியிருந்தது.

‘உமார், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மாலஸ்கார்ட் போர்க்களத்திலிருந்து நம்முடைய அதிர்ஷ்டம் நம்மை ஒன்று சேர்த்திருக்கிறது. நம்மை யாராலும் பிரித்துவிட முடியாது என்று சுல்தான் உறுதி கூறினார். அவர் தன் பேச்சைத் தொடர்ந்து, இந்தக் கடிதம் அனுப்பியதெல்லாம் உளவாளிகள் இருப்பதால்தான். நிசாம் உளவு பார்க்கும் முறையை வளர்த்துவிட்டார். ஒவ்வொரு அரசாங்க உத்தியோகஸ்தனையும் சுற்றி இந்த உளவாளிகள் திரிகிறார்கள். எனக்கு எதிரியாக உள்ளவர்களும் இந்த உளவாளிகளைக் கைக்கூலி கொடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம் அரசாங்கத்தில் உளவு பார்க்கும் முறையையே ஒழித்துவிட வேண்டும்’ என்றார்.

‘நான் இங்கே ஒன்றுக்கும் பயனில்லாமல் உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. நான் என் விண்மீன் வீட்டிற்குச் செல்கிறேன்’ என்று உமார் கேட்டான்.

‘அங்கே போய் என்ன செய்வாய்?’

‘ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கப் போகிறேன். அது வானவீதியைப் பற்றியது.’

‘ஆ! வானவீதியில் உள்ள ஒரு புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்திருப்பாய்! அதனால் என்ன நன்மைகள் வரும்? சீக்கிரம் சொல்!’

‘நட்சத்திரமல்ல, வானவீதியிலே நாமிருக்கும் இந்த உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு நகர்ந்து போகிறது என்ற விஷயம்தான்’

சுல்தான் அவனை உற்று நோக்கினார். அவன் தொடர்ந்துகூறிய விளக்கங்கள் அவருடைய புரியும் தன்மைக்கு அப்பாற்பட்டவைகளாக இருந்தன. எதையோ நினைத்துக் கொண்ட அவர். ‘உமார், அன்றொரு நாள் நான் இதுவரை வேட்டிையாடிக் கொன்ற மிருகங்களை எண்ணிப்பார்த்தேன். மொத்தம் ஒன்பதாயிரம் உயிர்களை ஆண்டவன் படைத்த உயிர்களை, வீணாகக் கொன்றிருக்கிறேன். அதற்குப் பிராயச்சித்தமாக ஒன்பதாயிரம் வெள்ளிகளை ஏழைகளுக்குத் தானமாகக் கொடுக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?’

‘ஆண்டவன் பெயரால் அப்படியே செய்யுங்கள்!’

சிறிது நேரத்திற்குப் பிறகு, சுல்தானிடம் விடைபெற்றது. அவனுடைய அந்தப்புரக் கூடத்திற்குச் சென்றான். அங்கே, ஓர் ஆட்டக்காரிபோல சலாமிட்டு வணங்கி அயீஷா அவனை வரவேற்றாள். அந்தக் கூடத்திலே, அவள் இஸ்பாகான் சந்தையிலே வாங்கி வந்த புதிய புதிய பொருள்களை ஆங்காங்கே அடுக்கி வைத்திருந்தான்.

படிமம்:Page336 உமார் கயாம் (புதினம்).jpg

அவனுக்காகப் பலவகையான பழங்களும் உணவுப் பொருள்களும் வாங்கி வைத்துக்கொண்டு அவள் காத்திருந்தாள். அவனோ, அவற்றை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், உட்கார்ந்து கவிதை எழுதத் தொடங்கினான்.

அவள் கோபத்துடன் கண்ணை மூடிக்கொண்டு அவன் அருகிலேயே நீட்டிப் படுத்துவிட்டாள். நான்கு வரிகள் எழுதிமுடித்த அவன் அவளை நோக்கினான். புதிய உடையணிந்து முகத்திற்குப் பூச்சுப்பூசி, சொர்க்கத்துப் பறவைபோலத் தோன்றினாள். அவளுடைய அதிசய அழகு அவன் உள்ளத்தை என்னவோ செய்தது, எழுதிய தாளை வைத்துவிட்டுக் குனிந்து அவளுடைய உதடுகளிலே தன் உதடுகளைப் பதித்தான். அவன் எழுப்பியது இச் என்ற ஒரே ஓர் ஒலி. ஆனால் எழுந்ததோ பலப்பல ஒலிகள். ஆம்! பதிலுக்கு முத்தமிட்டு அவள், அவன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவனும் தன்னை மறந்தான். அயீஷாவினுடைய கண்கள் தூரத்திலே காற்றிலே பறந்து படபடத்துச் சென்று கொண்டிருந்த கவிதைத் தாளை வெற்றியுடன் உற்று நோக்கின.

உமாரின் அருகிலே படுத்திருந்த அயீஷா புரண்டு படுத்தாள். ஏதோ அரவம் கேட்பதுபோல் இருந்தது. அவளுக்கு மிக அருகாமையிலே, யாரோ மூன்றாவது ஆசாமி ஒருவன் மூச்சுவிடுவது போல் இருந்தது அவளுடைய மூக்கில் ஏதோ ஒரு மாதிரியான வாசம் படுவதுபோல் இருந்தது. அவளுடைய உடல் பயத்தால் வெடவெடத்தது. புதருக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த புள்ளிமான் துள்ளிப் பாய்வதுபோல, அலறித் துடித்துக் கொண்டு எழுந்தாள். வானத்தின் குறுக்கே ஒரு கரிய உருவம் கடந்து போவதுபோல் தெரிந்தது.

அவளுடைய கூச்சலைக் கேட்டு எழுந்த உமார், படிக்கட்டு வழியாக ஓர் உருவம் நழுவிச்செல்வதைப் பார்த்தான். சத்தம் போடாமல் தொடர்ந்து சென்று கீழேயுள்ள கூடத்தில் விளக்குகளைக் கொளுத்தினான். வேலைக்காரர்களும் அதற்குள் எழுந்து வந்துவிட்டார்கள். ஆனால் அந்த ஆள் எப்படியோ தப்பிவிட்டான், வாசல் அருகிலே படுத்திருந்த இஷாக் யாருமே உள்ளே நுழையவில்லை என்று ஆயிரம் சத்தியம் செய்தான். மேலேயிருந்து அயீஷா கத்தினாள்: ‘தலைவரே! இங்கு வாருங்கள் இதைப் பாருங்கள்!’

மேலே விளக்குகளுடன் போய்ப் பார்த்தால், உமாரின் தலைமாட்டிலே, ஒரு குத்துக் கத்தியும், புதிதாகச் சுடப்பட்ட ஒரு ரொட்டியும் இருந்தன.

உமாருக்கு இது அதிசயமாக இருந்தது. இதன் பொருள் அவனுக்குப் புரியவில்லை யாரோ, உயிருக்குத் துணிந்து, இவற்றைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் என்பது மட்டும் தெரிந்தது. ‘ஒன்றும் புரியவில்லை கத்தி சாவுக்கு அடையாளம்; ரொட்டி வாழ்வுக்கு அடையாளம் என்று வைத்துக் கொண்டாலும் விஷயம் விளங்கவில்லையே’ என்று இஷாக் யோசித்தான்.

‘பகலில் பார்க்க வருவோரிடம் இலஞ்சம் வாங்க விழித்துக்கொண்டிருப்பாய், இரவில் திருடர்கள் வரும்போது குறட்டை விடுவாய் நீ என்ன காவல் காக்கிறாய்?’ என்று அயீஷா, இஷாக்மேல் எரிந்து விழுந்தாள். அதற்குள்ளே இஷாக் அங்கே கிடந்த தாள் ஒன்றையெடுத்து உமாரிடம் கொடுத்தான் அதிலே,

‘உன் நாக்குப் பற்களுக்கு இடையே இருக்கவேண்டும்’ என்று எழுதியிருந்தது.

‘அயீஷா அதிகம் பேசுகிறாள். அவளுக்குத்தான் இந்த எச்சரிக்கை என்று இஷாக் கூறினான்.

ஆனால் இது தனக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை என்று உமார் உணர்ந்தான். தான் இதுவரை, கழுகுக் கூட்டைப்பற்றி யாரிடமும் கூறாதபோது. இந்த ஹாஸான் தனக்கு ஏன் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால், இந்த எச்சரிக்கையின் முழுவிவரமும் பொழுது விடிந்த பிறகு உமாருக்குத் தெரியவந்தது.

பொழுது விடிந்து சிறிது நேரம் ஆனதும் டுன்டுவினுடைய ஒற்றன் ஒருவன், உமாரிடம் வந்து சலாம் செய்தான். ‘சுல்தானின் நிழல் போன்றவரே! அதிகாலையில் நகரைச் சுற்றி வரும்போது தங்களுடைய ஆள் ஒருவன் ஓரிடத்திலே பிணமாகிக் கிடப்பதைக் கண்டோம். இங்கே தூக்கி வந்திருக்கிறோம்’ என்றான்.

உமார் கீழே இறங்கிவந்து பிணத்தை மூடி வைத்திருந்த துணியை அகற்றினான். அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. அவனுடைய ஆருயிர்த்தோழன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு உற்ற துணைவனாக இருந்த கூணன், விகடன் ஜபாரக் கழுத்தில் வெட்டுப்பட்டுப் பிணமாகிக்கிடந்தான். அவனுடைய நாக்கு வேரோடு வெளியில் அகற்றப்பட்டிருந்தது.

‘உன்னுடைய தலைவனை உடனே இங்கு வரச்சொல்’ என்றான் உமார், சிறிது நேரத்தில் டுன்டுஷ் அங்கு வந்து சேர்ந்தான்.

‘பள்ளி வாசலுக்கு வெகுதூரத்தில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள பாதையில் பிணம் கிடந்தது. ஆனால் அந்த இடத்திலே கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை, வேறு எங்கோ கொலைசெய்து அங்கே கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவன் செத்துக்கிடந்த இடத்திலே தரையில் இரத்தக்கறையேயில்லை!’

உமாருக்கு இது ஹாஸானுடைய ஆட்களின் வேலைதான் என்று தெரிந்தது. ஏனெனில் முதல் நாள் தன்னைச் சந்தித்தபோது, ஜபாரக்கிடம், யாரோ ஒருவன் சாமியார் வேடத்தில் இருந்தவன் வந்துபேசிக் கொண்டிருந்ததாகவும், அவன், ஜம்மி மசூதிக்குப் பின்னால் உள்ள அக்கினிபுத்திரன் வீட்டிலே, செத்துச் சொர்க்கம்போன ஒரு மனிதன் பிழைத்து எழுந்து வந்து, சொர்க்கத்தின் அனுபவத்தைக் கூறியதாகவும். அது தான் கழுகுக்கூட்டிலே கண்ட காட்சியாகவே இருந்ததையும் உமார் சிந்தித்துப் பார்த்தான்.

சந்தேகமில்லாமல். ஜபாரக் அந்த வீட்டிலேதான் கொல்லப்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான்.

‘அக்கினி புத்திரன் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா?’ என்று டுன்டுவிடம் கேட்டான்.

‘நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றான் டுன்டுஷ்.

உமார் டுன்டுவிடம் முன்னிரவு தனக்குக்கிடைத்த எச்சரிக்கைக் கடிதத்தைப்பற்றிக் கூறினான். அயீஷா பின்னால் திரைமறையில் இருந்தபடியே ‘ரொட்டியையும் கத்தியையும் பற்றிக் கூறுங்கள்’ என்று ஞாபகப்படுத்தினாள்.

இதைக்கேட்ட டுன்டுஷ், ‘இது போலவே, தலைமாட்டிலே ரொட்டியும் கத்தியும் கண்ட சில மனிதர்கள் இப்போது ஆளே காணப்படாமல் போய்விட்டார்கள்’ என்றான்.

‘இது அர்ப்பணம் செய்தவர்களின் வேலையாகத்தான் இருக்கவேண்டும்’ என்றான் உமார்.

‘யார்? என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று விளக்கங் கேட்டான் டுன்டுஷ்.

‘அர்ப்பணம் செய்தவர்கள் ஏழாவது கொள்கைக்காரர்களின் தலைவனும் கழுகுக் கூட்டின் தலைவனும் பிறப்பிறப்புப் பெருந்தலைவனுமான ஹாஸான் இபின் சாபா என்பவனுடைய ஆட்கள், குத்துக்கத்தி பிடித்த கொலைக்கஞ்சாப் பாதகர்கள், மயக்க மருந்து தின்னும் மதிகெட்டவர்கள்!’ என்று உமார் அடுக்கிக் கொண்டே போனான்.

‘தலைவரே! மறுபடியும் அந்தப் பெயரைச் சொல்லாதீர்கள், பயமாக இருக்கிறது!’ என்று டுன்டுஷ் வேண்டினான்.

‘அப்படியானால், உனக்கும் அவர்களைப்பற்றித் தெரியும் என்று சொல்’ என்ற உமார். ‘உனக்குத் தெரிந்ததை என்னிடம் அஞ்சாமல் சொல்’ என்றான்.

ஆனால், டுன்டுஷ் பயந்து கொண்டே மிக மெதுவான ரலில் பேசத் தொடங்கினான். அப்படிப் பேசும்போது எதிரில் திறந்திருந்த சன்னலுக்கப்பால் சீறிவரும் பாம்புகள் நூறு இருந்தால் எப்படிப் பயப்படுவானோ, அப்படிப்பட்ட பயத்துடன் அந்தச் சன்னலைப் பார்த்துக் கொண்டே பேசினான்.

‘எகிப்து தேசத்திலிருந்து பாரசீகத்திற்குள்ளே இந்த இயக்கம் வந்து சேர்ந்திருக்கிறது. இவர்களைப்பற்றி நிசாம் எச்சரிக்கை செய்து தன் குறிப்புப் புத்தகத்திலே எழுதியிருக்கிறார். இவர்களுடைய தலைவன், நம்பிக்கையுள்ள முஸ்லிம்களைப் பயமுறுத்தித் தன் புது ஏற்பாட்டிலே சேர்த்துவருகிறான். வியாபாரிகளை அதட்டி மிரட்டிப்பணம் பறிக்கிறான். ஒருவனுடைய தலைமாட்டிலே குத்துக்கத்தியும் ரொட்டியும் இருந்தால், அதற்கு நீ சாகிறாயா? வாழ்கிறாயா? என்று கேட்பதாகப் பொருள். வாழ்வதாக இருந்தால், மறுநாள் வந்து அவன் விட்டு வாசலிலே நின்று ரொட்டிப்பிச்சை கேட்கும் பிச்சைக்காரனுக்கு ஒரு மூட்டை தங்கம் கொடுக்க வேண்டும்.

அப்படிக் கொடுக்காதவன் ஆளே காணாமல் போய்விடுவான். இதுவரை கொடுத்துத் தப்பியவர்களும் இருக்கிறார்கள், கொடுக்காமல் காணாமல் போனவர்கள் ஐந்து வியாபாரிகள். அதுபோல் இன்று உங்கள் வீட்டுக்கு எவனாவ்து பிச்சைக்காரன் வந்தால், ஏதாவது ஒரு தொகை கொடுத்து அனுப்பிவிடுங்கள். அதுதான் புத்திசாலித்தனமானது’ என்றான் டுன்டுஷ்.

‘இல்லை, அவர்கள் என்னிடம் பொன் எதிர்பார்க்க மாட்டார்கள்’ என்றான் உமார்.

‘ஓ! நான் மறந்துவிட்டேன் உங்கள் பொருள்களைத்தான். அவர்களுடைய ஆள் அக்ரோனோஸ் கடத்திக் கொண்டு போய்விட்டானே! இருந்தாலும், அவர்கள் இன்னும் எதிர் பார்க்கலாம்!”

‘இல்லை, ஜபாரக்கினுடைய சாவிற்கு அவர்கள்தான் ஈடு கொடுக்க வேண்டும்! அப்படித்தான் நடக்கப்போகிறது!’

‘தலைவரே, நீங்கள் என்ன அவர்களை எதிர்க்கப் போகிறீர்களா? நேரிலே பாயும் வேங்கைப் புலியை எதிர்க்கலாம். மறைந்து வரும் பாம்பை நாம் எப்படிக்கண்டு பிடித்துக் கொல்லமுடியும்? இந்த மருந்து தின்னும் கூட்டத்தார்.

ஒட்டகக்காரர்களாகவும், குதிரைக்காரர்களாகவும், வியர்பாரிகளாகவும், சாமியார்களாகவும் பலவிதமான உருவங்களிலே நாட்டிலே உலவுகிறார்கள்.

உங்கள் வீட்டிலேகூட, அவர்களைச் சேர்ந்தவன் ஒருவன் வேலைக்காரனாக இருக்கக்கூடும்! இந்த காணர்ம்ற்போன் ஐந்து மனிதர்கள், மக்களுக்கு நன்றாகத் தெரிந்த பிரபல் வியாபாரிகள், எப்படி மறைந்தார்கள் என்று தடங்கூடத் தெரியவில்லை. நகரத்தைவிட்டு வெளியேறவில்லை என்று நான் நிச்சயமாக கூறமுடியும். ஜபாரக்கைப்போல் அவர்கள் கொல்லப்பட்டதர்கவும் இதுவரை தெரியவில்லை. அவர்கள் என்ன ஆனார்களென்பதே மர்மமாயிருக்கிறது. மேன்மை தாங்கிய தலைவரே, இந்த மனிதர்களுடன் மோதிக் கொள்ளாதீர்கள்’ என்ற டூன்டுஷின் எச்சரிக்கைக்குப் பிறகு, உமார் கூறினான்.

‘அவர்கள் தந்திரத்தையும் மாயக்கண்கட்டு வித்தையையும் உபயோகிக்கிறார்கள் அவர்களுடைய ஆயுதமான இரகசியத்தை அடிப்பதற்கு அடித்து உடைப்பதற்கு ஒரு வழியிருக்கிறது.’

‘நீங்கள் அவர்களைத் தேடப்போகிறீர்களா?’

‘இல்லை, அவர்கள் தாங்களாகவே வெளிவரப் போகிறார்கள்.’

உமாரிடம் ஏதோ இரகசியமான சக்தியிருக்கிறது என்பதை டுன்டுஷ் நம்பினான். உமார் மாயத்தை எதிர்க்கும் மாயாவாதி என்று எண்ணினான்.

‘தலைவரே! இதுவரை நான் சொன்ன விஷயங்களுக்கே என் உயிர் அடமானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மறைந்திருக்கும் சக்திகளோடு நான் மோதிக்கொள்ள விரும்பவில்லை எனக்கு விடை கொடுங்கள்’ என்று கூறிவிட்டு வெளியேறினான்.