உமார் கயாம்/40. “உனக்கும் எனக்கும் ஒத்து வராது!”

விக்கிமூலம் இலிருந்து

40. “உனக்கும் எனக்கும் ஒத்து வராது!”

இருள் சூழ்ந்துவரும் நேரத்திலே சமவெளிப் பிரதேசத்தின் வழியாக வந்து கொண்டிருந்த உமார், தூரத்திலே வயலோரத்தில் சில குடிசைகளைப் பார்த்தான். அவன் குடிசைகளின் அருகில் வந்தபோது, நன்றாக இருட்டிக்கொண்டது.

குடிசைகளில் விளக்குகள் ஏற்றப்பெற்றிருந்தன. முதல் வாசல் அருகிலே வந்ததும், குதிரையைவிட்டு இறங்கியதும் அந்தப் பண்ணையின் தலைவன் யார் என்று கேட்டதும் பண்ணைத் தலைவனிடம் உமார் அழைத்துச் செல்லப்பட்டான்.

இந்தப்பண்ணை, கழுகுக் கூட்டின் பக்கமாக இருப்பதால் இவர்கள் ஹாஸானுடைய உதவியாளர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகித்து தலைவனை நோக்கி, ‘ஷேக் அல் ஜெபல் அவர்களுடைய ஆணையின்படி நான் செல்லுகிறேன். எனக்கு ஒரு புதிய குதிரைவேண்டும் என்றான்.

‘யார்! மேலேயிருக்கிறாரே அவரா!’

‘ஆம்! கழுகுக் கூட்டின் தலைவர்.’

அந்தக் குடியானவர்கள் தங்களுக்குள்ளே ஏதோ, மெதுவாகப் பேசிக் கொண்டார்கள். பிறகு உமார் ஏறிவந்த குதிரையைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள். யாரும் கவனிக்காதபோது நிழலோடு நிழலாக மறைந்து வந்த ஒரு சிறுமி அந்தப் புறாக்கூண்டின் பக்கத்திலே வந்து உட்கார்ந்துகொண்டு, அந்தப் புதிய மனிதனான உமார் கவனிக்காத நேரம் பார்த்து கூண்டுக்குள்ளே கையைவிட்டு அந்தப் பறவைகளின் இறக்கைகளைத் தொட்டுப் பார்த்தாள்.

ஆகாரமில்லாமல் களைத்துப்போயிருந்த உமார், தன் கைகளின்மேல் தலையை வைத்துக் குந்தியபடி உட்கார்ந்திருந்தான். அவன் கழுகுக் கூட்டிலிருந்து தப்பி வந்துவிட்டான்.

ஆனால், ஹாஸானுடைய ஆட்களின் கையிலே சிக்கிக்கொள்ளாமல் தப்பமுடியும் என்ற நம்பிக்கை வரவில்லை.

‘இந்தப் பிரம்பு வீட்டுக்குள்ளே நீ எப்படி இவற்றைக் கொண்டு வந்தாய்!’ என்று அந்தச் சிறுமி கேட்டாள். திரும்பிப் பார்த்த உமார், அந்தப் பெண் பயந்து ஓடுவதைக் கண்டான், பயந்து ஒடினாலும் அந்தப் புறாக்களை விட்டுப்போக மனமில்லாமல் “நான் அவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை மேலே வானத்தில் உயர உயரப் பறக்கின்றன. சில சமயம் மரங்களின்மேல் உட்காருகின்றன நான் அருகில் போனால் பறந்து விடுகின்றன’ என்றாள்.

பிறகு வருத்தத்துடன், ‘வயலில் தானியங்களைத் தின்னமட்டும் வருகின்றன. என்னோடு விளையாடக் கூப்பிட்டுக்கொண்டே போனால் பறந்து போய்விடுகின்றன. என்மேல் அவற்றிற்கு ஏன் கோபமோ தெரியவில்லை’ என்றாள் மெல்ல.

‘அவை, உன்னருகில் வந்து, உன் கால்களைச் சுற்றிக்கொண்டு திரிய வேண்டுமா?” என்று கேலியாக உமார் கேட்டான்.

‘ஆமா ஆமா! நீ வரச் சொல்லுவாயா?’ என்று ஆவலுடன் கேட்டாள் சிறுமி.

பக்கத்தில் இருந்த குளக்கரையிலே போய் உமார் சிறிது களிமண் எடுத்து வந்தான். இரண்டு கைநிறைய இருந்த களி மண்ணையும் உருட்டிப் புறாவின் உருவம்போல, உடலும் தலையும் செய்தான். பிறகு, இரண்டு கம்புக் குச்சிகளை ஒடித்துக் காலாகச் சொருகினான், செய்து முடித்த பிறகு ஒரு புறத்திலே வைத்தான்.

‘இதோ பார் நாளைக்கு வெயிலிலே இதைக் காயவைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்த பிறகு அடுத்த நாள் நீ இதைத் தண்ணிருக்குப் பக்கத்திலே வை, காற்றிலே பறக்கிற புறாக்கள் எல்லாம் இதன் அருகிலே வந்து இதனோடு பேசிக் கொண்டிருக்கும். நீ கரையிலே இருந்தபடி பார்த்துக் கொண்டிரு. ஆனால், நீ அசையாமல் இருந்தால் அதிக நேரத்திற்கு அவை இங்கேயே இருக்கும். அவற்றைப் பிடிப்பதற்காக ஓடினால் அவை பறந்து போய்விடும், தெரிகிறதா?

‘இது அவற்றைப் போலவே இருக்கிறதே!’ என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அந்தச் சிறுமி.

அந்தக் குடியானவர்கள் ஒரு குதிரை கொண்டு வந்தார்கள். அதைப் பார்த்தால் பண்ணை வேலை செய்யும் குதிரைபோல் தோன்றவில்லை. தான் மலைத் தலைவனுடைய ஆள் என்பதற்காக நல்ல சவாரிக் குதிரையாகக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

புறாக்கூண்டைத் தூக்கிக்கொண்டு குதிரையின்மேல் ஏறிக் கொண்டான்.

சேணத்துக்கால் மிதியைப் பிடித்துக்கொண்டே, பண்ணைத் தலைவன். ‘இன்னும் வராத அந்த நாள் விரைவில் வருமா?’ என்று மெதுவாகக் கேட்டாள்.

‘எனக்குத் தெரியாது, அது ஆண்டவனுக்குத் தெரியும்’. இந்தப் பதிலைக் கேட்டதும், அவன் உமாரைப் போக அனுமதித்தான்.

உமார் தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அதிக தூரம் செல்லச் செல்ல ஆபத்துக் குறையும் என்பது அவன் நம்பிக்கை. இரவின் பயணம் நீண்டு கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு நகரத்தின் கோட்டைச் சுவர் அருகிலே வந்தான். அதன் சுற்றுப்புறங்களை நோக்கிய போது அது காஸ்வின் நகரம் என்பது தெரிந்தது.

நகருக்குள்ளே சென்றால், அங்குள்ள ஏழாவது கொள்கைக்காரர்களுக்குத் தன்னைப் பற்றிய செய்தி கிடைத்திருக்கலாம் என்ற பயம் இருந்தது. அத்துடன், காஸ்வின் நகரம்தான் கழுகுக் கூட்டிற்கு மிக அருகில் உள்ள நகரம். எனவே கோட்டையைச் சுற்றிக் கொண்டு மறுபுறத்திலே வந்து கொரசான் பாதையில் தன் குதிரையைத் தட்டிவிட்டான்.

துரத்து மலைகளின் வழியாக வானத்தை நோக்கிக் கிளம்பிய கதிரவ்னின் கதிர்கள் உலகத்தைச் சூழ்ந்திருந்த இருட்டை ஓடச் பதன. இரவெல்லாம் நடந்த களைப்பால், குதிரை தளிர்நடை போட்டது. உமாருக்கும் களைப்பாகவும் சோர்வாகவும் இருந்தது. உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய சொப்பன்த்திலே ஒரு மாய உலகம் தோன்றியது. களிமண்ணாக இருந்த புறாக்கள் வானவெளியிலே பறந்தன. தபால் செய்திகளைச் சுமந்து போயின. தட் தட் என்று அவற்றின் இறக்கைகள் அடித்துக் கொண்டன.

தட் தட் என்ற சத்தம் வரவரப் பெரிதாகியது. உமார் கண்ணை விழித்துப் பார்த்தான். குதிரைகள் பல அவனைக் கடந்து சென்றன. அப்படிக் கடந்து சென்று கொண்டிருந்த ஒரு குதிரை அவன் அருகிலே நின்றது. அதிலிருந்து கீழே இறங்கி உமாரின் அருகிலே வந்த அந்தக் கூணன், ‘தலைவரே! என்னைத் தெரியவில்லையா? தங்கள் ஜபாரக்’ என்றான். அதே சம்யத்திலே, ஒட்டகத்தின் மேல் இருந்த மூடிய பிரம்புத் தொட்டிலிலிருந்து, ஒரு பெண் இறங்கி ஓடி வந்தாள்.

‘தலைவரே! நல்ல வேளை, உங்களை அல்லாதான் காப்பாற்றினார். கண்ணுக்குத் தெரியாத வேதாளங்கள் தங்களைத் தூக்கி போனதாகக் கூறினார்களே! இதென்ன உங்கள் தாடிக்கு என்ன வந்தது? என்று வரிசையாகக் கேட்டாள். முக்காட்டை விலக்கி விட்டுப் பேசிக் கொண்டிருந்த ஆயிஷாவைப் பார்த்து வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய் விட்டார்கள் கூட வ்ந்த மற்ற பிரயாணிகள்.

‘பெண்ணே, அதோ அந்த தூரத்து மலைகளிலே, மாயவித்தைக்காரர்களுடன்தான் இருந்தேன்’ என்றான் உமார். அந்த மாயக்காரர்களுடன் யாரும் பெண்கள் இருந்தார்களா?’ என்று அயீஷா, பெண்ணுக்கே உள்ள இயற்கையான சந்தேகத்துடன் கேட்டாள்.

‘அந்தச் சொர்க்கத்திலே ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள்.’

‘சொர்க்கமா?’

‘உண்மையான சொர்க்கமல்ல; மாயா சொர்க்கம்!’

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அரசாங்க வீரர்கள் சிலர் வந்தார்கள். அவர்களிலே தலைவனாக உள்ளவன் உமாரை உற்று நோக்கிவிட்டு, தாங்கள் அரசாங்க வானநூற் கலைஞரா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.

பிறகு சுல்தான் இஸ்பாகானுக்குச் சென்று கொண்டிருக்கிறார். தங்களைத் தேடி உடனே அழைத்துக் கொண்டு வரச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார் என்றான்.

போகும் வழியில் அயீஷா, உமாரிடம், நிசாம் அல்முல்க் அவர்கள் அரசாங்க வேலையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார் என்று கூறினாள்.

என்ன காரணம் என்று உமார் கேட்டான்.

‘சுல்தானுக்கு ஒரு கடிதம் கிடைத்ததாம். அதிலே யாரோ, “நிசாம் தங்களுடைய மந்திரியா, அல்லது தங்களுடைய சுல்தானா? என்று எழுதிக்கேட்டிருந்தார்களாம்.

போர்க்களத்திலிருந்து கோபத்துடன் திரும்பி வந்த சுல்தான், அவரை உடனே விலக்கி விட்டாராம் என்று அயீஷா கூறினாள். பாவம், அன்றே நிசாம் சொன்னபடி சுல்தானுக்குக் கடிதம் எழுதியிருந்தால் அவருடைய பதவி போயிருக்காது என்று உமார் வருத்தத்துடன் நினைத்துக் கொண்டான்.

‘அந்தக் கடிதம் எப்படி வந்தது தெரியுமா? வானத்திலே பறந்து வந்த ஒரு புறா கொண்டு வந்து கொடுத்ததாம்’ என்றாள் ஆயிஷா.

உமார் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். இஸ்பாகான் நகர் அருகிலே வந்ததும் கீழே இறங்கி, ஒருதாளும் பேனாவும் மையும் கொண்டுவரச் சொன்னான்.

‘உன்னுடைய வேண்டுகோளுக்கு நான் முடிவு கட்டிவிட்டேன். உன்னுடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு! ஆனால், நான் உன்னுடைய இடத்தில் கண்ட விஷயங்களைப் பொறுத்த வரையில் ஒன்று கூற விரும்புகிறேன். எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னால் எந்தவொரு தீங்கும் ஏற்படாதவரையில் அவை இரகசியமாகவேயிருக்கும்!”

இந்தக் கடிதத்தின் கீழே கையெழுத்தோ அடையாளமோ எதுவும் போடாமல், சுருட்டி ஒரு சிறு குழாய்க்குள்ளே போட்டான். புறாக்களில் ஒன்றைக் கூண்டிலிருந்து எடுத்து, அதன் ஒரு காலிலே அந்தக் குழாயைக் கட்டினான். அந்தப் புறாவைக் காற்றிலே தூக்கி எறிந்தான். அது தன் இறக்கைகளை விரித்துப் படபடவென்று அடித்துக் கொண்டு அந்த நகரத்தை ஒருமுறை சுற்றிவந்தது. பிறகு தூரத்து மலையை நோக்கி அம்பு போலப் பாய்ந்து பறந்தது.

அயீஷா வாயைப் பிளந்து கொண்டு அதிசயத்துடன் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘மாயக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு அது போகிறது’ என்று உமார் கூறினான்.

அயீஷாவுக்கு ஆச்சரியத்தால் தலை சுற்றியது.