பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தாத்தாவின் கோபம்


காசிக்குத் தாத்தாவும் சென்றுவந்தார்-உடன்
களிப்போடு பிள்ளைகள் சூழ்ந்துகொண்டார்.
ஆசையாய்க் கூடியே பேசுகையில்-அங்கே
ஆனந்தன் தாத்தாவைக் கேட்கலுற்றான்.

“அத்தையும் காசிக்குச் சென்றுவந்தாள்-இனி
அவரைக்காய் தின்பதே இல்லையென்றாள்.
சித்தப்பா காசிக்குச் சென்றுவந்தார்-இனி
சிகரெட் பிடிப்பதே இல்லையென்றார்.

பாட்டியும் காசிக்குச் சென்றுவந்தாள்-இனி
பாகற்காய் தின்பதே இல்லையென்றாள்.
சீட்டாடும் பழக்கத்தை விட்டேனென்றார்-காசி
சென்று திரும்பிய மாமாவுமே.

இப்படிக் காசிக்குச் சென்றோரெல்லாம்-அங்கே
ஏதேனும் ஒன்றினை விட்டுவந்தார்.
அப்படி நீயுமே விட்டதென்ன ?-தாத்தா,
அவசியம் கூறிட வேண்டு” மென்றான்.

97