பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

99


மு.வ :-என் வயதென்னை யறிதியோ?

க.வ :- பல திங்களாம்போலும்.

மு.வ :-ஆம். ஆம்! பல திங்கள் முதிர்ந்து உளேன். நீ கூறிய துண்மையே. யான் நாள் முதிர்ந்த ஒரு வண்டே நிற்க. வருக நாம் இருவரும் பொருது பார்ப்போம்.

க.வ :-ஓ! ஓ!அது கூடாது; கடவுளாணையாக அது ஒரு காலும் கூடாது. யான் கட்டிளமையுடைமையின் பயனாய வலியுடையே னாகலின், நினக்கு ஊறு இழைக்கினும் இழைப்பன்.

மு.வ :-எனவே, நம்மிருவருள் வன்மையற்ற எளியன் யானன்றே. அற்றாக, இளமையும் வன்மையு மிக்க நின்னை என் மாட்டு அறிவுரை கேட்கத்துண்டியது யாது கொல்? இஃது ஓர் வியப்பையன்றோ தருகிறது!

க.வ. :-அற்றன்று. மெய்வன்மைக்கும் அறிவின் வன்மைக்கும் தொடர்பொன்று மின்று. யான் நின்மாட்டறிவுரை கேட்பான் துணிந்தது நீ அறிவுடையை என்பதை யான் நன்குணர்ந்தமையே யாகும். யான் அஃதில் லேனாகலின், இதுபோது இழித்தக்க நிலையை யெய்தியுளேன்.

மு.வ :- முதுமையும் இளமையும் - வன்மையும் மென்மையும் - அறிவும் அறியாமையும் - ஆ! ஏனோ ஒத்த பிறவியும், ஒத்த நிலையும் பொருளாகக் கிளர்ச்சிசெய்த வண்டுகட்கு? எனினும், வருந்தற்க. நாம் இவற்றை யோர் ஒழுங்கிற்குக் கொணர்தல் கூடும். நிற்க, இனி நாம் இருவரும் ஒத்து வாழ்தலாமா? என்னை நின் கருத்து?

க.வ :-என் இன்னுயி ராணையாக, யான் - இன்றே, ஏன்! இன்னே உடன்படுகின்றேன். நாம் வாழ்தற்கு இடம் யாது? .

மு.வ :-அஃதன்று நான் முதற்கண் வேண்டுவது. நம் இருவர்க்கும் கருத்துக்கள் முரணாங் காலத்து இடைநின்று தகுதி நோக்குவார் யாவராதல் வேண்டும்.