பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

செம்மொழிப் புதையல்


தம்மிடத்தே வைத்து கேண்மையும் பெருமை புலப்படுத்தி விளங்கும் என்பது. இதனை மணிவாசகப் பெருந் தகையார் தம் திருக் கோவையாரின்கண், “சீரிய லாவியும் யாக்கையு மென்னச் சிறந்தமையாற், காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கமலங் கலந்த, வேரியும் சந்தும் வியறந் தெனக் கற்பில் நிற்பரன்னே, காரியல் கண்டர்வண் டில்லை வணங்கு மெங்காதலரே, ‘ என்ற திருப்பாட்டில் (301) அமைத்துக் கொண்டனர். இவை போலும் பொருண்மொழியாட்சிகள் பலவாதலின் இம்மட்டில் நிறுத்துகின்றேன்.

இப்பொருண்மொழிகள் புலவர் பெருமக்கள் இயற்றும் நூல்களின் இடையிடையே கிடந்து உலகியலில் மக்கள் ஒருவரோடொருவர் கூடியும் பிரிந்தும் ஒருங்கியைந்தும், பிற நிகழ்ச்சிகளைக் கண்டும். உணரும் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. வாழ்க்கைச்சாகாடு உகைக்கும் மகன் அவ்வாழ்க்கைக்குரிய மாண்புகளையுணர்ந்து வல்லனாயிருப்பின், அது ஊறின்றாகி ஆற்றை யினிது சென்று பயன்தருவதாகும்; அதனையறியானாயின், அவ்வாழ்க்கை துன்பநிலையமாய் மிகப்பல நோய்களைத் தலைத்தலைத்தருவதாய் முடியும். இவ்வியல்பு பற்றியே உலகியலறிவினை வளர்க்கும் பொருண் மொழிகள் மிக்க இன்றியமையாதனவாயமைந்திருக்கின்றன. வாழ்க்கை அரம்பும் அல்லலும் கரம்பும் செறிந்திருத்தலால், இன்னோரன்ன பொருண்மொழிகளைக் கிடந்தன கிடந்தாங்கே எடுத்துக்கோடல் வேண்டும். அவற்றின்கண் ஒராராய்ச்சியும் வேண்டாவாம். இந்நலம் குறித்தே, இவை நாமறியும் பலவுண்மைகளுள், ஒன்றை விலக்கியாதல், வேறொன்றைத் தழுவியாதல், ஒருண்மையின் ஒருபுடையைவிலக்கியாதல், மற்றொருபுடையை மிகைபடவிரித்துரைத்தாதல் செல்லாது எத்தகைய கட்டுப்பாட்டிற்கும், நிலைக்கும், ஒழுங்கிற்குந்தக அமைந்திருத்தல் வேண்டும் என்பர். ஆதலால், இவை மக்கள் வாழ்விற்கெனவமைந்த விதிகள் என்பது மிகையாகாது.

இதுகாறும் நாம்பொருள்மொழிகளாவன இவையென்றும், அவை பொதுவகையிற்படுமாறு இதுவென்றும், அவற்றின் பொதுவியல்பும் அறிந்தோம். இனி இவற்றால் நாம் பெறும் அறிவியல்பையும், இப்பொருண்மொழிகள் பயன்படு மாற்றையும் ஒருசிறிது காண்பாம்.