பெருங்கதை/2 18 கோயில் வேவு

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

2 18 கோயில் வேவு

உதயணன் மீண்டு வருதல்[தொகு]

உள்ளியது முடித்த யூகியுஞ் செவிலியும்
ஒள்ளிழை மாதரொ டொளித்த பின்னர்ப்
பலாவம லசும்பிற் பயமலைச் சாரல்
உலாவேட் டெழுந்த வுதயண குமரன்
குழையணி காதிற் குளிர்மதி முகத்திக்குத் 5
தழையுந் தாருங் கண்ணியும் பிணையலும்
விழைபவை பிறவும் வேண்டுவ கொண்டு
கவவிற் கமைந்த காமக் கனலி
அவவுளு நெஞ்சத் தகல்விடத் தழற்றத்
தனிக்கன் றுள்ளிய புனிற்றாப் போல 10
விரைவிற் செல்லும் விருப்பின னாகிக்

குதிரை வருணனை[தொகு]

கலினங் கவவிக் கான்றுநுரை தெவிட்டும்
வலியுடை யுரத்தின் வான்பொற் றாலிப்
படலியம் பழுக்கமொடு பஃறகை வில்லாப்
பருமக் காப்பிற் படுமணைத் தானத் 15
தருமைக் கருவி யலங்குமயி ரெருத்தின்
வயமாப் பண்ணி வாய்க்கயிறு பிணித்துக்

குதிரையைப் பாகன் கொடுப்ப உதயணன் அதன் மீதூர்ந்து வருதல்[தொகு]

குறுக்கை புக்க கொளுவமை கச்சையன்
அறைக்கண் மருங்கி னகத்துளை யின்றிக்
கண்ணள வமைந்து கதிர்த்த மூங்கிற் 20
பண்ணமை காழ்மிசைப் பசும்பொன் வலக்கும்
அடிநிலைச் சாத்தோ டியாப்புப் பிணியுறீஇ
வடியிலைக் கதிர்வாள் வைந்நுனைக் குந்தமொடு
வார்ப்பி னமைத்த யாப்பமை யரும்பொறி
மணிக்கை மத்திகை யணித்தக பிணித்துக் 25
கோற்கமை வுறுநடைக் குதிரைக் கோதிய
நூற்க ணாளரொடு நுனித்துக் கதிவினாய்
வாக்கமை வாளன் கூப்புபு வணங்கிக்
கடுநடைப் புரவி கைம்முதல் கொடுப்ப
அடுதிற லண்ண லணிபெற வேறி 30
மறுவின் மாணகர் குறுக வருவழி

தீய நிமித்தம்[தொகு]

இடுக்கண் டருதற் கேது வாகி
இடக்க ணாடலுந் தொடித்தோ டுளங்கலும்
ஆருயிர்க் கிழத்தி யகன்றன ளிவணிலன்
நீர்மலர்ப் படலை நெடுந்தகை யாள 35
காணா யாகி யானா விரக்கமொ
டிழுக்கி றோழரொ டியங்குவை யினியென
ஒழுக்கும் புட்குர லுட்படக் கூறிய
நிமித்தமுஞ் சகுனமு நயக்குண மினமையு
நினைத்தனன் வரூஉ நேரத் தமைத்த 40

உதயணன் புகைத்தோற்றத்தைக் காணுதல்[தொகு]

தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணைக்
கண்ணுற நினைத்த கைப்புடை யாவணத்
திருமணி யருங்கல மெளிதினிற் றரீஇக்
காலத்தி னடக்குங் கைலக் கொழுங்கடைக்
கடுவுங் கொட்டமுங் காழகிற் குறையும் 45
அரக்கு மதிங்கு மரும்பெறற் பயினும்
நறையு நானமு நாறிரு வேரியும்
அறைவெள் ளாரமு மன்னவை பிறவும்
அண்ணரும் பேரழ லாக்கிய கமழ்புகை
மாதிரத் தியங்குஞ் சோதிடர் விமானமும் 50
வாச மூட்டும் வகையிற் றாகி
மஞ்சொடு நிரைஇ வெஞ்சுடர் மழுக்க
இருள்படப் பரந்த மருள்படு பொழுதிற்
கண்டா னாகித் திண்டே ருதயணன்
வண்டார் கோதை வாசவ தத்தை 55
இருந்த விடமும் பரந்தெரி தோன்றவவட்
கேதுகொ லுற்றதென் றெஞ்சிய நெஞ்சின்
ஊறவ ணுண்மை தேறின னாகிச்
செல்லா நின்ற காலை வல்லே

உருமண்ணுவாவும் வயந்தகனும் நிற்றல்[தொகு]

மாய மள்ளரை யாயமொ டோட்டி 60
உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
பொருமுர ணண்ணல் புகுதரும் வாயிலுட்
பொச்சாப் போம்புதல் புரிந்தனர் நிற்ப

காஞ்சனமாலையின் கலக்கம்[தொகு]

எச்சார் மருங்கினு மெரிபுரை தாமரை
கண்ணுற மலர்ந்த தெண்ணீர்ப் பொய்கையுள் 65
நீப்பருஞ் சேவலை நிலைவயிற் காணாது
பூக்கண் போழும் புள்ளிற் புலம்பி
எரிதவழ் கோயி லெவ்வழி மருங்கினும்
திரிதர லோவா டீய்ந்துநிற மழுங்கிக்
கட்டழற் கதிய நெட்டிருங் கூந்தல் 70
புதையெரி பற்றப் புன்சொற் கேட்ட
பெரியோர் போலக் கருகி வாடிய
தகையழு தாமமொடு தாழ்வன பரப்பித
தாழியைக் காணாள் சூழ்வளிச் சுழற்றியள்
செவ்விய தன்கையி னவ்வயி றதுக்கா 75
நாவலந் தண்பொழி னண்ணா ரோட்டிய
காவலன் மகளே கனங்குழை மடவோய்
மண்விளக் காகி வரத்தின் வந்தோய்
பெண்விளக் காகிய பெறலரும் பேதாய்
பொன்னே திருவே யன்னே யரிவாய் 80
நங்காய் நல்லாய் கொங்கார் கோதாய்
வீணைக் கிழத்தீ வித்தக வுருவீ
தேனேர் கிளவீ சிறுமுதுக் குறைவீ
உதையண குமர னுயிர்த்துணைத் தேவீ
புதையழ லகவயிற் புக்கனை யோவெனக் 85
கானத் தீயிடைக் கணமயில் போலத்
தானத் தீயிடைத் தானுழன் றேங்கிக்
காணல் செல்லாள் காஞ்சனை புலம்பிப்
பூசல் கொண்டு புறங்கடைப் புரளும்

உதயணன் கண்டு மூர்ச்சித்தல்[தொகு]

ஆகுலத் திடையே யண்ணலுங் கதுமென 90
வாயில் புகுந்து வளங்கெழு கோயில்
தீயுண் விளியுந் தேமொழிச் செவ்வாய்க்
காஞ்சன மாலை கலக்கமுங் காணாப்
பூங்குழை மாதர் பொச்சாப் புணர்ந்து
கருவி யமைத்த காலியற் செலவிற் 95
புரவியின் வழுக்கிப் பொறியறு பாவையின்
முடிமிசை யணிந்த முத்தொடு பன்மணி
விடுசுடர் விசும்பின் மீனெனச் சிதறச்
சாந்துபுல ராகத்துத் தேந்தார் திவளப்
புரிமுத் தாரமும் பூணும் புரள 100
எரிமணிக் கடகமுங் குழையு மிலங்க
வாய்மொழி வழுக்கி வரையின் விழுந்தே
தேமொழிக் கிளவியிற் றிறல்வே றாகி
இருநில மருங்கிற் பெருநலந் தொலையச்
சோரு மன்னனை யார்வத் தோழர் 105

தோழர் உபசரித்தலும் அவன் தெளிந்து எழுதலும்[தொகு]

அடைந்தனர் தழீஇ யவலந் தீர்க்கும்
கடுங்கூட் டமைத்துக் கைவயிற் கொண்ட
போக்கஃ கலவை யாகத் தப்பிச்
சந்தனங் கலந்த வந்த நறுநீர்த்
தண்டளி சிதறி வண்டின மிரியக் 110
குளிரிமுதற் கலவையிற் கொடிபெறக் குலாஅய்
….. யொண்மணித் தட்டப்
பவழப் பீடிகை பக்கங் கோத்த
திகழ்பொன் னலகிற் செஞ்சாந் தாற்றியிற்
பன்முறை வீசத் தொன்முறை வந்த 115
பிறப்பிடைக் கேண்மைப் பெருமனைக் கிழத்தியை
மறப்படை மன்னன் வாய்சோர்ந் தரற்றாச்
சேற்றெழு தாமரை மலரிற் செங்கண்
ஏற்றெழுந் தனனா லினியவ ரிடையென்.

2 18 கோயில் வேவு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெருங்கதை/2_18_கோயில்_வேவு&oldid=482591" இலிருந்து மீள்விக்கப்பட்டது