பெருங்கதை/5 2 இயக்கன் வந்தது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

5 2 இயக்கன் வந்தது

உருமண்ணுவா வருதல்[தொகு]

ஆராய் தோழரொ டரச னதன்றிறம்
ஓரா விருந்துழி யுருமண் ணுவாவும்
ஆரா ணமைத்து வாண்டு நீண்மதில்
ஏரணி யுடைய விலாவா ணகமெனும்
ஊர்வயி னின்றும்வந் துதயணற் குறுகி 5

உதயணன் உருமண்ணுவாவுக்கு உரைத்தல்[தொகு]

வணங்கின னிருந்துழி மணங்கமழ் கோதை
கருத்தினை யெல்லாம் விரித்தவற் குரைப்பப்

உருமண்ணுவா ஓர் இயக்கனைப்பற்றிக் கூறுதல்[தொகு]

பொறியுடை மார்பவது புணர்க்கும் வாயில்
அறிவல் யானஃதருளிக் கேண்மதி
வெற்றத் தானையும் வேழமு நீக்கி 10
உற்றோர் சிலரோ டொருநா ளிடைவிட்டு
வேட்டம் போகி வேட்டுநீர் பெறாஅ
வெம்பர லழுவத் தெம்பரு மின்மையின்
மதிமயக் கெய்திப் புதுமலர்க் காட்டுட்
டெய்வதை யுண்டெனிற் கையற லோம்புகெனப் 15
பாற்படு பலாசி னோக்கமை கொழுநிழற்
குரவம் பாவைக் குறுமலர் நசைஇ
அரவ வண்டினம் யாழென வார்ப்பத்
தெறுகதிர்ச் செல்வன் முறுகிய நண்பகல்
அசைந்தியாங் கிடந்தன மாக வவ்வழி 20
இசைந்த வெண்டுகி லேற்ற தானையன்
கைந்நுண் சாந்த மெழுதிய வாகத்தன்
காசுகண் ணரிந்து கதிரொளி சுடரும்
மாசில் வனப்பினன் மறுமதித் தேய்வென 25
ஏக வார மிலங்கு கழுத் தினன்
நிழல்படு வனப்பி னீலத் தன்ன
குழல்படு குஞ்சியுட் கோல மாக
ஒண்செங் கழுநீர்த் தெரிய லடைச்சித்
தண்செங் கழுநீர்த் தகைமலர்த் தாரினன் 30
ஆயிர நிறைந்த வணிமலர்த் தாமரைச்
சேயொளி புரையுந் திகழொளிக் கண்ணினன்
களைக ணாகியோ ரினையவன் றோன்றி
யாவிர் மற்றுநீ ரசைவுபெரி துடையீர்
ஏக லாற்றீ ரென்னுற் றீரென 35
……
….போத றேற்றாம்
தெய்வ மகனெனு மையுற வகல
அறிய வேண்டி நெறிமையி னாடி
முன்னுப காரத்தின் முழுப்பய னிகர்ப்பதோர்
பின்னுப காரம் பெயர்த்தல் விரும்பி 40
என்னருங் கருதா னிறந்த பின்னர்

நன்னர் நெஞ்சத்து நயம்பா ராட்டி
எம்மி னாகா விடர்கண் கூடின்
உம்மை யாமு நினைத்தன மொழுகுதும்
அன்ன மாண்பே மறிகபின் யாரென 45
உண்மை யுணரிய வொருங்குநாங் குறைகொள
வச்சிர வண்ணனை வழிபட் டொழுகுவேன்
நச்சு நண்பி னஞ்சுக னென்னும்
இயக்க னென்னை மயக்கற வுணர்ந்து
மறப்பின் றொழுகு நயப்பொடு புணர்ந்த 50
நன்னட் பாளனேன் யானினி நுமக்கென
என்னட் பறிமி னென்று மென்வயின்
எள்ள லில்லா துள்ளிய காலை
ஓதியி னோக்கி யுணர்ந்தியான் வருவேன்
ஈதியன் மந்திர மென்று கூறி 55
என்பெயர் நினைந்தா லெவ்விடத் தாயினும்
துன்ப நீக்குவெ னென்றவன் றந்த
மந்திர மறந்திலேன் மறங்கனல் வேலோய்
வல்லை யாகி யொல்லை யவனைப்
பொழுதொடு நினையென வெழுதினன் கொடுப்ப 60

உதயணன் இயக்கனை நினைந்தது[தொகு]

வடிவேன் மன்னனும் படிவமொ டிருந்து
வாய்மையின் வழாஅத் தூய்மைய னாகி
நினைப்பிற் றிரியா நெறிமையி னோதி

இயக்கன் வந்தது[தொகு]

இமைப்போன் கண்மிசை யிலங்கிய வொளியொ
டன்றவன் கண்ட யாக்கையுங் கோலமும் 65
இன்றிவ ணுணரு யியல்பின னாகி
நயப்புறு நெஞ்சமொடு நண்புமீக் கூரி
இயக்க னவ்வழி யிழிந்தன னினிதென்.

5 2 இயக்கன் வந்தது முற்றிற்று.