பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

கொடிய வதந்திகளைக் கோட்டை முழுவதும் பரப்பினான். ‘நம்மையெல்லாம் ஆங்கிலச் சிப்பாய்களின் கைகளில் நாசமாகும்படி விட்டு விட்டுக் கான் சாகிபு மட்டும் தப்பி ஓடி விடப் பார்க்கிறான்’ என்ற செய்தியைப் பரப்பினான்.

அதைக் கேள்வியுற்ற வீரர்களின் நெஞ்சம் கொதித்தது. இயற்கையாகவே பட்டினியால் கொதித்திருந்த அவர்களை, மேலும் கொதிப்படையச் செய்வதில் வெற்றி கண்ட மார்ச்சந், 1764 அக்டோபர் திங்கள் 13 ஆம் நாள் மாலை 5 மணிக்குக் கான் சாகிபு மனம் உடைந்து போன நிலையில், மண்டியிட்டு ஆண்டவனைத் தொழுது கொண்டிருக்கும் வேளையில், தேர்ந்தெடுத்த சிப்பாய்களின் உதவியுடன், அவன் இருக்கும் தனியிடம் சென்று சுற்றிச் சூழ்ந்து கீழே தள்ளி, அவன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையைக் கொண்டே அவன் கை கால்களை எல்லாம் கட்டிப் போட்டான், ஆங்கில நாடோடிகளுக்குச் சற்றும் இளைக்காத பிரெஞ்சு நாடோடி. சதி வெற்றி பெற்று விட்டது என்பதை அறிந்த கான் சாகிபு, கொடியோனின் உள் நோக்கம் என்ன என்பதைக் கணப்போதில் உணர்ந்து கொண்டு, தன்னைச் சுற்றியிருந்தோரைப் பார்த்து, ‘பெரியோர்களே, காசுக்கும், வாழ்வுக்கும் ஆசைப்படும் நீங்கள் என்னை இங்கேயே உங்கள் கை வாள்களாலேயே கண்டதுண்டமாக வெட்டி எறிந்து விடுங்கள்; என் பகைவர்களாகிய ஆர்க்காட்டு நவாபிடமோ, ஆங்கிலச் சிப்பாய்களிடமோ ஒப்படைத்து விடாதீர்கள்’ என்று கை கூப்பி வேண்டினானாம்.