பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

பற்றியிருந்த கொல்லங் கொண்டானைப் பிடித்தான். பின்னர் மூன்றே நாளில், கோலார்பட்டியைத் தன் வசமாக்கிக் கொண்டு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தான்.

இங்கேதான், பூலித் தேவரிடம் சிறைப்பட்டு இருந்த மாபூஸ் கான், ‘கருநாடகத்தை விட்டே ஓடிப் போகிறேன்; வளமாக வாழ வழி காட்டினால் போதும்’ என்று தன் பிறவிப் புத்தியைக் காட்டி எழுதிய கடிதத்தைக் கண்டு பூரித்தான் கான் சாகிபு. மாபூஸ் கான் வேண்டுகோளுக்கும் அவன் இசைந்தான். அடுத்து ஊற்றுமலை, சுரண்டை ஆகிய இடங்களையும் அடிமைப்படுத்தினான். இதற்கு இடையில் வடகரை மேல் வன்மம் கொண்டும், கான் சாகிப்புக்குக் கை கொடுக்கும் வகையிலும், திருவாங்கூர் மன்னன் 10,000 பேர் கொண்ட படையோடு, வடகரைப் பாளையத்தைத் தாக்கினான். அப்பெரும் படையின் சீற்றத்துக்கு ஆற்றாது வடகரையார் பூலித் தேவரிடம் சரண் புகுந்தார். சிறிது காலத்துக்கு முன்பே, சுரண்டையில், கான் சாகிபின் படைத் தலைவர்களுள் ஒருவனைத் தோற்கடித்து வெற்றி கண்டிருந்த பூலித் தேவர், கும்பினியின் ஆதரவால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வரும் கான் சாகிபின் கொடிய பலம் கண்டு, பெருமூச்செறிந்தார். எனிலும் கலங்காது, கொள்கையைக் காற்றில் பறக்க விடாது, திருவாங்கூராரை வட கரையாரோடு ஒத்துப் போகும்படி வேண்டினார். ஆனால், திருவாங்கூராரோ, ‘வடகரையைத் தாக்கியதன் வாயிலாகக் கான் சாகிபிடம் நல்ல பெயர்