48
திருக்குறள் கட்டுரைகள்
இதிலிருந்து வள்ளுவர் நம்மைக் கேளாமற் கேட்கும் இந்த மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா?
கொடுமைகளுக்கெல்லாம் தலைசிறந்த ஒரு கொடுமைக்கு உவமையாகக் கூறவந்த “கள்” எவ்வளவு கொடியது? என்பதுதான். எவர் இதற்கு விடை கூறுவது?
குடிப் பழக்கத்தில் தவறாக வழுக்கி வீழ்ந்துவிட்ட அன்பர்கள்தாம் இவற்றிற்கு விடை கூறியாக வேண்டும்.
இப்போது சட்டத்தின் மூலம், நம் நாட்டில் குடி தடுத்து ஒழிக்கப் பெற்று விட்டது. இதற்கும் பெரும் தொண்டு செய்தவர் பெரியார் காந்தியடிகளே! அவரை நாம் என்றென்றும் மறக்க இயலாது.
குடி சட்டத்தின் மூலம் விலக்கப் பெற்றிருக்கிறது, இது போதாது மக்கள் உள்ளத்திலிருந்தும் அது விலக்கப் பெற்றாகவேண்டும். அப்போதுதான் இந்த நல்ல முயற்சி முழுவதும் வெற்றி பெறும். இதற்கு மக்கள் பலவகை யிலும் துணை புரிந்தாக வேண்டும்.
அமெரிக்கா, முன்பு ஒருமுறை குடியை ஒழித்தது. ஆனால்,அங்கு விரைவில் அது திரும்பவும் வந்துவிட்டது. அம்மாதிரி நம் நாட்டிலும் நடைபெறும் எனச் சிலர் நம்பிக் கொண்டும் எதிர்பார்த்துக்கொண்டும் இருக்கின்றனர். பாவம், அவர்கள் அனைவரும் குடியை விடமுடியாதவர்களும், குடியால் பொருள் திரட்டுபவர்களுமே ஆவார்கள். இப்பெருங் குடியர்களின் எண்ணத்தை நிறை வேறவொட்டாமல் அழித்து ஒழிக்கவேண்டியது, தமிழ் நாட்டுப் பெருங்குடி மக்களின் நீங்காத கடமைகளில் ஒன்றாகும்.