பாட்டி : கண்ணு! உன் உடல் வளர்கிற மாதிரியே உன் அறிவும் வளர்கிறது. இந்த அழகை, உன் தாயும் தந்தையும் இருந்து கண்டு களிக்காமற் போனார்களே என்றுதான் வருந்துகிறேன்.
கண் : ஆமா பாட்டி! பண்டிட் மோதிலால் நேரு கூட இப்போது இருப்பாரானால், விஜயலெட்சுமி பண்டிட்டைப் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சியடைவார்? என்ன செய்கிறது? உங்கள் பேச்சு, செத்துப்போன மாடு இருந்தால் உடைந்து போன கலயத்தில் தினம் நான்கு கலயம் கறக்கலாம் என்பதுபோல இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் பாட்டி! என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
பாட்டி : இப்படியெல்லாம் பேச எப்படிக் கற்றுக் கொண்டாய் கண்ணு? உன் கேள்வி என்ன?
கண் : செல்லத்தோடு சேர்ந்தால் நான் கெட்டுப் போவேன் என்று சொன்னீர்களே, அது எப்படி?
பாட்டி : ‘பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் உண்ணும்’ என்பது தமிழ்நாட்டுப் பழமொழி கண்ணு!
கண் : நான் அதைத்தான் கேட்கிறேன், கன்றோடு சேர்ந்த பன்றியும் புல் தின்னாதா என்று?
பாட்டி : தின்னாது அம்மா! தின்னாது!
கண் : ஏன் அப்படி?
பாட்டி : கன்றுக்கும், பன்றிக்கும் உள்ள பற்களின் அமைப்பே வெவ்வேறு! கன்று மலத்தை உண்டாலும், பன்றி புல்லைத் தின்னாது; தின்னவும், மெல்லவும் அதன் பற்கள் துணை செய்யா!
கண் : அப்படியானால், எனக்கும் செல்லத்திற்கும் அப்படிப்பட்ட வேற்றுமைகள் எதுவுமில்லையே!
பாட்டி : பன்றிக்கும் கன்றுக்கும் பல் வேற்றுமை: செல்லத்திற்கும் உனக்கும் மனவேற்றுமை.