உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

11

வாளைப் பாய்ச்சினர். சட்டெனத் திரும்பிய மன்னன் தன் வாளையுருவி வீச்சிரண்டில் அவர்கள் இருவரையும் வெட்டி வீழ்த்தினான். வெட்டுண்ட வேந்தனும் சிறு போழ்தில் மாய்ந்திட்டான். அவன் இறக்கும்போது,

“இன்னும்பிறவியுண்டு, மாதரசே! இன்பமுமுண்டு
நின்னுடனே வாழ்வன் இனி நேரும் பிறப்பினிலே”

என்று சொல்லிக் கண்மூடி உயிர்நீத்தான்.

சின்னக் குயிலியின் மாமன் மகனாகிய மாடன் செய்த மாயச் செயலால் அவள் மறுமையில் பறவையுருக் கொண்டு பதை பதைக்கின்றாள். மன்னவனோ மறுமையில் தொண்டை நாட்டுப் புதுவைப் பட்டினத்தில் தண்டமிழ்க் கவிஞனாகத் தோன்றி வாழ்கின்றான். புவிமன்னன் மகன் கவிமன்னன் ஆயினான். முன்னைப் பிறப்பில் சின்னக்குயிலியை மணம் புரிய விரும்பிய மாடனும் குரங்கனும் பேய் வடிவு கொண்டு அக்குயிலையே பின்தொடர்கின்றனர். முன்னைப் பிறப்பன் தொடர்பால் கவிஞன் குயிலைக் கண்டு, அதன் குரலிசையில் மனமறுகி நிற்கும் வேளையில் மாடும் குரங்கும் அவனுக்கு ஐயத்தையும் வெறுப்பையும் அடங்காத சினத்தையும் விளைத்து நிற்கின்றன.”

இந்த உண்மையெல்லாம் குயில் எடுத்துரைத்துக் கவிஞன் கரத்தில் வீழ்ந்தது. அவன் அதனை ஆவலுடன் எடுத்து இன்பமீதூர முத்தமிட்டான். அவ்வளவுதான், அவன் கரம்பட்டவுடன் குயில் கெள்ளையின்பந் தரும் தெள்ளமுதத் தெய்வீகப் பாவையாக மாறியது. அப்பெண்ணின் நல்லாள் வைத்த கண் மாற்றாது கவிஞனை நோக்கினாள்.

”சற்றே தலைகுனிந்தாள், சாமி ! இவள் அழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்”

என்று கூறிப் பெண்ணின் பேரெழில் நலத்தை வியந்து பேசும் கவிஞரின் கற்பனைத்திறம் அற்புதமானது !