பக்கம்:கடற்கரையினிலே.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநாவுக்கரசர்

29


அக்கோயிலைத் தொழுதல் முறையாதலால் கடற்கரைக்குச் சென்றார்; தென்முகமாக நின்றார். அவர், தூய வெண்ணீறு துதைந்த மேனியர்; மாசற இமைக்கும் உருவினர்; ஈசனார் புகழைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே என்று கருதும் பெற்றியர். இத்தன்மை வாய்ந்த பெரியார் கோடிக்கரையிலே நின்று பேசலுற்றார் :

"ஆ ! கோடிக் கடலே ! பாண்டிநாட்டின் ஒரு கோடியில் நின்று பாரத நாட்டுப் பலகோடி மாந்தரை இழுக்கும் பண்புடையாய் நீ ! நாடி வருபவர்க்கெல்லாம் நீ நலந்தருகின்றாய்; வாடி வருபவர்க்கெல்லாம் வழி காட்டுகின்றாய். முன்னொரு நாள் காதல் மனையாளைப் பிரிந்த கமலக் கண்ணன் கவலையுற்று உன் கடற்கரையிலே வந்து நின்றான். அவ்வீரனது மனத்துயரை நீ மாற்றினாய்; அவனுடன் வந்த வானரப் பெருஞ்சேனையை இலங்கையிற் கரையேற்றினாய்; அன்று முதல் கோடானு கோடி மக்களைப் பிறவிப் பெருங்கடலினின்றும் கரையேற்றிக் கொண்டிருக்கின்றாய். இதனாலன்றே, 'கோடியுற்றார் வீடு பெற்றார்' என்று ஆன்றோர் உன்னைப் போற்றுகின்றனர்?

"அறப் பெருங் கடலே ! உன் கரையை வந்தடைந்தவர், இலங்கையில் முன்னாள் வாழ்ந்த அரக்கரை மறக்கவல்லரோ? உன் கரையில் மோதும் அலைகளெல்லாம் அவர் கதையை எடுத்தோதுகின்றனவே! அரக்கர் கோமானாகிய இராவணன் கோடி மாதவங்கள் செய்தான்; என்னையாளுடைய ஈசனருளால் யாரும் பெறாத வரம் பெற்றான்; திறம் பெற்றான்; வளமார்ந்த இலங்கையில் வல்லரசனாய் வீற்றிருந்தான்; ஈசனுக்கினிய மாசில் வீணையைத் தன் மணிக்கொடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடற்கரையினிலே.pdf/31&oldid=1248539" இலிருந்து மீள்விக்கப்பட்டது