திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 65 முதல் 66 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவர் கூறுவது இதுவே:...நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்." - எசாயா 66:12.

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 65 முதல் 66 வரை

அதிகாரம் 65[தொகு]

கலகம் செய்வோர்க்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


1 முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள்
என்னைத் தேடி அடைய இடமளித்தேன்;
என்னை நாடாதவர்கள்
என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்;
என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி,
"இதோ நான், இதோ நான்" என்றேன். [1]


2 தங்கள் எண்ணங்களின்படி நடந்து
பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும்
கலகக்கார மக்களினத்தின் மீது
நாள் முழுவதும் என் கைகளை விரித்து நீட்டினேன். [2]


3 அந்த மக்களினத்தார் என் கண் எதிரே
இவற்றைச் செய்து
இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்;
தோட்டங்களில் பலியிட்டு,
செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்.


4 கல்லறைகளிடையே அமர்ந்து
மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்றனர்;
பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்;
தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர்.


5 இவ்வாறிருந்தும்,
"எட்டி நில், என் அருகில் வராதே,
நான் உன்னைவிடத் தூய்மையானவன்" என்கின்றனர்.
என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும்
நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர்.


6 அவர்களுக்குரியது என்முன் எழுதப்பட்டாயிற்று;
நான் அமைதியாய் இருப்பதில்லை;
அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை
அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.


7 அவர்கள் தீச்செயலுக்கும்
அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும்
சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர்.
ஏனெனில் அவர்கள் மலைமேல் தூபம் காட்டினார்கள்;
குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்;
அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை
அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.


8 ஆண்டவர் கூறுவது இதுவே:
திராட்சைக் குலையில் புது இரசம் கிடைக்கும்போது,
'அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது' என்பார்கள்.
அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்;
அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன்.


9 யாக்கோபினின்று வழிமரபினரையும்,
யூதாவினின்று என் மலைகளை உடைமையாக்குவோரையும்
தோன்றச் செய்வேன்.
நான் தேர்ந்துகொண்டோர்
நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்;
என் ஊழியர் அங்கே வாழ்வர்.


10 என்னை வழிபடும் என் மக்களுக்குச்
சாரோன் சமவெளி ஆடுகளுக்கு மேய்நிலமாகவும்
ஆக்கோர் பள்ளத்தாக்கு
மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும். [3]


11 ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு,
என் திருமலையை மறந்தவர்களே!
கத்து [4] தெய்வத்திற்கு விருந்து படைத்து,
மெனீ [5] தெய்வத்திற்கு நறுமணத்திராட்சை
இரசத்தைக் கிண்ணங்களில் வார்ப்பவர்களே!


12 உங்களை வாளுக்கு இரையெனக் குறிப்பேன்;
நீங்கள் அனைவரும் கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்;
ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்;
நீங்கள் மறுமொழி தரவில்லை;
நான் பேசினேன், நீங்கள் கவனிக்கவில்லை;
என் பார்வைக்குத் தீமையெனப் பட்டதைச் செய்தீர்கள்;
எனக்கு விருப்பமில்லாததைத் தேர்ந்து கொண்டீர்கள்.


13 ஆதலால் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் ஊழியர்கள் உண்பார்கள்;
நீங்களோ பசியால் வாடுவீர்கள்.
என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்;
நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்;
என் அடியார்கள் அக்களிப்பார்கள்;
நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.


14 என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்;
நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்;
ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.


15 நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு
உங்கள் பெயரைச் சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்;
என் தலைவராகிய ஆண்டவர்
உங்களைக் கொன்றொழிப்பார்;
தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.


16 மண்ணுலகில் ஆசி பெற விழைபவன்
உண்மைக் கடவுளின் பெயரால் ஆசிபெறுவான்;
பூவுலகில் ஆணையிடுபவன்
மெய்க் கடவுளின் பெயரால் ஆணையிடுவான்;
ஏனெனில், முந்நாளைய துன்பங்கள் மறந்து போயின;
அவை என் பார்வையிலிருந்து மறைந்து போயின.

புதிய படைப்பு[தொகு]


17 இதோ! புதிய விண்ணுலகையும்
புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்;
முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை;
மனத்தில் எழுவதுமில்லை. [6]


18 நான் படைப்பனவற்றில்
நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள்.
இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும்
அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.


19 நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்;
என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்;
இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. [7]


20 இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும்
பச்சிளங்குழந்தையே இராது;
தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்;
ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும்
இளைஞனாகக் கருதப்படுவான்.
பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும்
சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.


21 அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்;
திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.


22 வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை;
மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை;
மரங்களின் வாழ்நாள் போன்றே
என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்;
நான் தேர்ந்து கொண்டவர்கள்
தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள்.


23 வீணாக அவர்கள் உழைப்பதில்லை;
தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை;
ஏனெனில், அவர்கள் ஆண்டவரது
ஆசியைப் பெற்றோரின் வழிமரபினர்!
அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள்.


24 அவர்கள் வேண்டுவதற்கு முன்னே
நான் மறுமொழி தருவேன்;
அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்.


25 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்;
சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்;
பாம்பு புழுதியைத் தின்னும்;
என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும்
கேடு விளைவிப்பாரும் எவருமில்லை,
என்கிறார் ஆண்டவர். [8]


குறிப்புகள்

[1] 65:1 = உரோ 10:20.
[2] 65:2 = உரோ 10:21.
[3] 65:10 = யோசு 7:24-26.
[4] 65:11 எபிரேயத்தில் 'செல்வம்' என்பது பொருள்.
[5] 65:11 எபிரேயத்தில் 'விதி' என்பது பொருள்.
[6] 65:17 = எசா 66:22; 2 பேது 3:13; திவெ 21:1.
[7] 65:19 = திவெ 21:4.
[8] 65:25 = எசா 11:6-9.

அதிகாரம் 66[தொகு]

மக்களினத்தார்க்கு ஆண்டவர் அளிக்கும் தீர்ப்பு[தொகு]


1 ஆண்டவர் கூறுவது இதுவே:
விண்ணகம் என் அரியணை;
மண்ணகம் என் கால்மணை;
அவ்வாறிருக்க, எத்தகைய கோவிலை
நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்?
எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? [1]


2 இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின;
இவை யாவும் என்னால் உருவாகின,
என்கிறார் ஆண்டவர்.
எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும்,
என் சொல்லுக்கு அஞ்சுபவரையும்
நான் கண்ணோக்குவேன். [2]


3 அவர்களுக்கு இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும்
மனிதரைக் கொலைச்செய்வதும் ஒன்றாம்;
ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கொடுப்பதும்
நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்;
உணவுப் படையலைப் படைப்பதும்,
பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்;
நினைவுப் படையலாகிய தூபம் காட்டுதலைச் செய்வதும்
சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்;
அவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்தெடுத்துள்ளனர்;
தங்கள் அருவருப்புகள் மீது அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது.


4 நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்;
அவர்கள் அஞ்சுகின்றவற்றை
அவர்கள்மீது வரச்செய்வேன்;
ஏனெனில், நான் அழைத்தபோது
எவரும் பதில் தரவில்லை;
நான் பேசியபோது
அவர்கள் செவி கொடுக்கவில்லை;
என் கண்முன்னே தீயவற்றைச் செய்தார்கள்;
நான் விரும்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள்.


5 ஆண்டவரின் வாக்குக்கு நடுநடுங்குவோரே,
இதைக் கேளுங்கள்;
என் பெயர் பொருட்டு உங்களை
வெறுத்து ஒதுக்கும் உங்கள் உறவின் முறையார்
'நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காணும் பொருட்டு
ஆண்டவர் தம் மாட்சியைக் காண்பிக்கட்டும்' என்கிறார்கள்.
ஆனால் அவர்கள்தான் வெட்கம் அடைவார்கள்.


6 இதோ, நகரில் பேரொலி கேட்கின்றது!
திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது!
ஆண்டவர் தம் பகைவருக்குத் தக்க
பதிலடி கொடுப்பதால் எழும் இரைச்சலே அது!


7 வேதனை வருமுன்னே சீயோன் பிள்ளை பெற்றாள்!
பிரசவ நேரம் நெருங்குமுன்னே ஆண்மகவை ஈன்றாள்! [3]


8 இத்தகைய நிகழ்ச்சி பற்றிக் கேள்வியுற்றவர் யார்?
இதைப் போன்ற ஒன்றைப் பார்த்தவர் யார்?
ஒரே நாளில் நாடு ஒன்று உருவாகிட இயலுமா?
ஒரு நொடிப்பொழுதில் மக்களினம் ஒன்று பிறக்கக்கூடுமா?
ஆனால் வேதனை ஏற்பட்டவுடனே
சீயோன் தன் பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள்.


9 பேறுகாலத்தை ஏற்படுத்திய நான்
மகப்பேற்றைத் தடை செய்வேனா? என்கிறார் ஆண்டவர்.
மகப்பேற்றுக்குக் காரணமான நான்
கருப்பையை அடைத்துவிடுவேனா? என்கிறார் உங்கள் கடவுள்.


10 எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும்
அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்;
அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும்
அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.


11 அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து
நீங்கள் நிறைவடைவீர்கள்;
அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி
இன்பம் காண்பீர்கள்.


12 ஆண்டவர் கூறுவது இதுவே:
ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்;
பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம்
விரைந்து வரச் செய்வேன்;
நீங்கள் பால் பருகுவீர்கள்;
மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்;
மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.


13 தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல்
நான் உங்களைத் தேற்றுவேன்;
எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.


14 இதை நீங்கள் காண்பீர்கள்,
உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்,
உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்;
ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும்
அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.


15 இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்;
அவர் தேர்கள் புயலென விரையும்;
கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்;
தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது.


16 தம் நெருப்பையும் வாளையும் கொண்டு
மானிடர் அனைவர்மீதும் ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பு வழங்குவார்;
எண்ணிறந்தோரை ஆண்டவர் கொன்றுவிடுவார்.


17 தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத்
தூய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர்,
அதற்கு அணி அணியாய்ச் செல்வோர்,
பன்றி, எலி இவற்றின் இறைச்சி
மற்றும் அருவருப்புகளை உண்போர்
ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்,
என்கிறார் ஆண்டவர்.
18 அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும்
நான் அறிவேன்;
பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும்
நான் கூட்டிச் சேர்க்க வருவேன்;
அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.
19 அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்;
அவர்களுள் எஞ்சியிருப்போரை
மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்;
அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது,
தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள்
ஆகியவற்றிற்குச் செல்வார்கள்.
இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்;
என் மாட்சியைக் கண்டிராதவர்;
அவர்களும் என் மாட்சி பற்றி
மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.
20 அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும்
அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து
ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்;
இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில்
உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு
எடுத்து வருவதுபோல்,
அவர்களைக் குதிரைகள், தேர்கள்,
பல்லக்குகள், கழுதைகள்,
ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி,
எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள்,
என்கிறார் ஆண்டவர்.
21 மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும்
லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.


22 நான் படைக்கின்ற புதிய விண்ணுலகும்
புதிய மண்ணுலகும் என் முன்னே நிலைத்திருப்பது போல்,
உங்கள் வழித்தோன்றல்களும்
உங்கள் பெயரும் நிலைத்திருக்கும், என்கிறார் ஆண்டவர். [4]


23 அமாவாசைதோறும்
ஓய்வுநாள்தோறும்
மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர்,
என்கிறார் ஆண்டவர்.


24 அவர்கள் புறப்பட்டுச் சென்று,
என்னை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோரின்
பிணங்களைக் காண்பார்கள்;
அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை;
அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை;
மானிடர் யாவருக்கும் அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள். [5]


குறிப்புகள்

[1] 66:1 = மத் 5:34,35; 23:22.
[2] 66:1-2 = திப 7:49-50.
[3] 66:7 = திவெ 12:5.
[4] 66:22 = எசா 65:17; 2 பேது 3:13; திவெ 21:1.
[5] 66:24 = மாற் 9:48.


(எசாயா நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை