பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

69


தங்களை உழைப்பில் ஆழ்த்தி, திறன் நுணுக்கங்களில் தேர்ந்து வரவேண்டும். தன்னை உணர்ந்து, தெளிந்து தொண்டு, பயிற்சி செய்து பழக்கப்படுத்திக் கொள்வது தான் சிறந்த முறையாகும்.

ஏகலைவன் என்பவன் எந்த குருவும் இல்லாமல் தானே பயிற்சி செய்து, வில்லாற்றலில் தலைசிறந்து விளங்கியதுடன், கற்றுத்தராத குருவே அவன் கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்டதாக புராணக் கதை ஒன்றைப் பார்த்தால் ஒன்று நமக்கு தெள்ளென விளங்குவது. பயிற்சியே சிறந்த குரு என்பதுதான்.

பயிற்சி செய்யச் செய்ய ஒருவரது செயல் பண்பட்டுவிடுகிறது. அது பண்பட்ட அனுபவத்தைப் பரிவுடன் வழங்குகிறது. அணு அணுவாய் வளர்ந்து வருகிற அனுபவம் அருமையான ஞானத்தை வளர்த்து விடுகிறது.

அந்த அற்புத ஞானமே, விளையாட்டுக்குரிய விவேகத்தையும் வெற்றிக்கு வியூகம் அமைக்கும் மதியூகத்தையும் உண்டாக்கிவிடுகிறது. இதன் வழியே செயல்படுவதால், செய்கின்றவரின் கடமையில் எழிலும் ஏற்றமும் நிறைந்து காண்பவர்களைக் கவர்ந்திழுத்து போற்றிப் புகழச் செய்கின்றது.

வெறும் விதிகள் பற்றிய அறிவும் திறமையும் மட்டுமே ஒருவரை விளையாட்டுத் திறன்களில் வல்லுநராக்கி விடாது. சொல்ல உதவும் விதிகள் செயலுக்கு வரும்போது சொல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டுவிடும். ஏனெனில், விளையாட்டு என்பது செயலின் வடிவம்; விதிகள் என்பவை செயலைக் கட்டுப்படுத்தும் படிவம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/71&oldid=1377615" இலிருந்து மீள்விக்கப்பட்டது