பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

பதிற்றுப்பத்து தெளிவுரை


இவர் செய்யுட்கள் பலவும் விறலியரின் ஆடல் பாடல் இசைபோலும் அக்காலக் கலைமேம்பாடுகளைத் தெளிவுறக் காட்டுவனவாக அமைந்துள்ளன. கடற்றுறைகளின் தன்மைகளைத் தெளிவுபட வருணித்துக் காட்டுவதனால் இவரைக் கடற்கரை நாட்டவர் எனக் கருதுதலும் கூடும்.

’சுடர்நுதல், மடநோக்கின், வாள்நகை, இலங்கு எயிற்று, அமிழ்துபொறி துவர்வாய், அசைநடை விறவியர்’ எனவும், ’உயலும் கோதை, ஊறல்அம் தித்தி, ஈரிதழ் மழைக்கண் பேரியல் அரிவை, ஒள்ளிதழ் அவிழகங் கடுக்குஞ் சீறடிப், பல, பல கிண்கிணி சிறுபரடு அலைப்பக், கொல்புனல் தளிரின் நடுங்குவனள் நின்று' எனவும், 'வீங்கு இறைத் தடைஇய அமைமருள் பணைத்தோள், ஏந்தெழில் மழைக்கண், வனைந்து வரல் இளமுலைப், பூந்துகில் அல்குல், தேம்பாய் கூந்தல், மின்னிழை விறலியர்' எனவும், மகளிரை உயிரோவியப்படுத்தும் இவரது சொன்னயம் சொல்லி மகிழ்வதற்கு உரியதாகும்.

'சாவே இல்லாதே நீதான் நெடுநாள் வாழ்வாயாக’ என்று வாழ்த்தும் இவரது வாழ்த்துரைதான் எத்துணைத் திட்பம் செறிந்து விளங்கிச் சேரலாதனின் சிறப்பையும், அதனை வியந்துபாடும் இவரது புலமையையும் காட்டுகின்றது? ’உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று, இருநில மருங்கின் நெடிது மன்னியரோ' என்று வாழ்த்துகின்றார் இவர்.

'நல்ல மனைவியுடைமையும் ஆடவர்க்குத் தனியான சிறப்பாகும்' என்பதனை, ’ஆன்றோள் கணவ!' என்று மிக அழகாகக் குறிப்பார் இவர்.

வந்தவர்கட்கு, மறாது வழங்கி வாழ்ந்த வள்ளல்கள் பலர். ஆனால் சேரலாதனோ அதற்கும் ஒரு நிலையில் உயர்ந்தவனாக, 'வாராராயினும் இரவலர் வேண்டித் தேரில் தந்து அவர்க்கு ஆர்பதம்! நல்கும் சிறப்பினன்' என்கிறார் இவர்.

இவ்வாறு, இவர் புலமையும், மக்கள் நிலைகளை நுட்பமாகக் கண்டுகூறும் சொல்லாற்றலும் அமைந்து விளங்கும் தனிச்சிறப்பைக் காண்கின்றோம்.

போர்மறவரின் மறமாண்பை, 'இன்று இனிது நுகர்ந்தனம்; ஆயின் நாளை, மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவம் அல்லேம் புகா' எனக் கூறுவதன் மூலம் காட்டும் நுண்மான் நுழைபுலப் பெரும்புலவரும் இவராவர்.