பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

27


1. உண்மையான உழைப்பு, 2. உறுதியான உழைப்பு, 3. உற்சாகமுள்ள உழைப்பு. இந்த மூன்றையும் கொஞ்சம் நிதானமாகவே சிந்தித்துப் பாருங்கள் விளங்கும்.

உண்மையான, உறுதியான, உற்சாகமுள்ள உழைப்பு, மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொண்டு வந்து தருகின்றன. எப்படி? அவை மனத்தின் அனத்தல்களை (பிரச்சினைகளை) விரட்டியடிக்கின்றன. அதற்குப் பக்கபலமாக விளங்கும் கெட்ட குணங்களை விட்டொழிக்கச் செய்கின்றன. அதற்கும் மூலகாரணமாக இருக்கும் வறுமையை வரவிடாமல் செய்கின்றன.

ஆகவே, உழைப்பே உற்சாகம், உற்சாகமே உழைப்பு என்ற ஓர் இலட்சியத்தை நாம் கடைப் பிடித்துக் கொண்டால் வாழ்வும், வளமும், புகழும் பெருமையும் நமது காலடியில் வந்து தவம் கிடக்காதா என்ன?

இது எப்படி முடியும்? என்று எதிர் கேள்வி போடுபவர்களுக்கு இந்த நிலை வராது. வரவே வராது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை கெட்டவர்கள். தம்மைப் பற்றித் தாழ்வாகவே தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறவர்கள். உழைப்பின்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்.

ஏனெனில், உழைப்பு என்பதும் வேலை என்பதும் ஒருவரை ஆட்டிப்படைத்து, உலக வாழ்க்கையின் இன்பங்களிலிருந்து வேறுபடுத்திவிடும் என்று தவறான கருத்துகளை அவர்கள் கொண்டிருப்பதால் தான்.