184 வல்லிக்கண்ணன் கதைகள்
'எதுவுமே கிடையாது. நான் பழைய புன்னைவனம் தான்!'
'இந்த வகையிலும் நீங்கள் மாறவில்லை என்று சொல்லுங்கள். பேஷ்பேஷ்! நான் தான் பலவீனமான ஒரு சந்தர்ப்பத்தில், உணர்ச்சிகளின் உந்துதலுக்கு வசப்பட்டு, மனசின் ஒரு தூண்டுதலுக்கு அடிமையாகி. கல்யாணம் செய்துவிட்டு, அப்புறம் அடிக்கடி ஏண்டா இந்த வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டோம் என்று வருத்தப்படுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்’ என அலுப்புடன் பேசினார் அருணாசலம்.
'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்...'
'அதில் எல்லாம் குறைச்சல் இல்லை. ஆறேழு இருக்கு. இதுதான் கடைசிப் பதிப்பு' என்று அறிவித்தார் அவர்.
அவரைப்பார்த்து முகத்தைக் கோணலாக்கி 'லவ்வவ்வே!' என்றாள் வள்ளி.
புன்னைவனத்தினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இதற்குள் ஒரு படையெடுப்பு வந்து சேர்ந்தது அங்கே. அநேக பையன்கள் பெண்கள் அவர்களின் தாய், அவள் தங்கை - இப்படி ஒரு கூட்டமாக வந்தவர்களில் மூத்தவள், 'நல்லாத் தான் இருக்கு உங்ககாரியம். புள்ளையைத் தேடப் போறேன்னு வந்துபோட்டு, இங்கே நின்னு வம்பளக்கிறேளாக்கும்? எல்லாம் புள்ளைகளுக்கும் மொட்டை அடித்தாச்சு. அந்தக் குரங்குதான் ஓடி வந்திட்டுதே!' என்று முழங்கினாள்.
'இவள் தான் என் கிருகதேவதை. அது அவள் தங்கச்சி. இதுகள்ளாம் என் புத்திரபாக்கியங்கள்' என்று அறிமுகப்படுத்தின அருணாசலம், புன்னைவனத்தைப்பற்றி அவர்களுக்கு ஒரளவு சொன்னார். பிறகு வள்ளியைப் பார்த்து, 'ஏட்டி, உனக்கு மொட்டை அடிக்க வேண்டாமோ?’ என்று கேட்டார்.
அவள் பரிதாபமாகப் புன்னைவனத்தைப் பார்வையினால் கெஞ்சினாள். அவர் முகம் சிரிப்பால் மலர்ந்தது . அவளுக்குப் பூவைத்து. தலைமுடிச்சு பள்ளிக்கூடம் போகணும்னு ஆசையிருக்கு. அதைக்கெடுப்பானேன்? மற்றப் பிள்ளைகள் எல்லாம் மொட்டை - மொட்டையின்னு கேலி பண்ணுமேன்னு வருத்தப்படுறா' என்றார்.
'சரி, போகட்டும். இன்னொரு சமயம் பார்த்துக்கலாம். புன்னைவனம், இன்று நீங்க நம்ம அதிதி எங்களோடு வாருங்க' என்றார் அருணாசலம்.
'இந்த மாமா நல்ல மாமா' என்று ராகம் போட்ட வள்ளி அவர் கையைப் பிடித்து ஆட்டியபடி 'உம். வாங்க இப்ப நாங்கள்ளாம்