வல்லிக்கண்ணன் 13 இப்படி ஏன் செய்கிறாய்? நாலுபேரிடம் நல்லவன் என்று பெயர் வாங்குவதுதான் நல்லது. அதை விட்டு விட்டு நீ எல்லோரிடமும் ஏன் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறாய்? என்று ஒரு நண்பர் ஒரு சமயம் அவனிடம் கேட்டார். அவன் சிரித்தான். கொழுக்கட்டையைக் கொழுக்கட்டை என்றுதான் சொல்ல முடியுமேதவிர, குஞ்சாலாடு என அழைக்க முடியுமா? கொழுக்கட்டை செய்தவரின் தயவைப் பெறுவதற்காக ஒரு சிலர் அதை மறுபெயரால் அழைத்தாலும்கூட, அது குஞ்சாலாடாகவோ குளாப்ஜானாகவோ மாறிவிடுமா!' என்று கூறி மேலும் சிரித்தான். சிரிக்கத்தெரிந்த தாமோதரன் அடிக்கடி சிதறும் கருத்துகள் பிறர் இதயத்தில் குத்தும் கிண்டல்களாக விளங்கும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் அல்லது சொல்வார்கள் என்று எண்ணிப் பார்த்துத் தன் கருத்தை அறிவிக்கும் வழக்கமே கிடையாது அவனிடம், இதனாலும் அவன் எத்தனையோ பேர்களின் பகைமையைச் சம்பாதிக்க நேர்ந்துள்ளது. தாமோதரனைச்சந்திக்க வந்த சிலர் அவனது அறையை மேலும் கீழும் பார்த்தனர். வெள்ளை வெளேரென விளங்கிய சுவர்களைக் கவனித்தனர். சுவர்கள் வெறுமனே கிடந்தால் அழகாயிராது என்ற கருத்துடைய ஒருவர் கேட்டார். 'என்ன தாமோதரன் சுவரில் ஏதாவது படங்கள் தொங்கவிடக் கூடாது? என்று. என்ன படங்களைப் போடுவது என்று இழுத்தான் அவன். படங்களுக்கா குறைச்சல்? தலைவர்கள் படங்கள் என்று பேச்செடுத்தவர் முடிக்கவேயில்லை. அதற்குள் தாமோதரன் கத்தினான். எனக்குத் தலைவர்களே கிடையாது. அப்புறமல்லவா அவர்கள் படங்களைத் தேடுவது பற்றி யோசிக்க வேண்டும்' என்று. நீரே தலைவராக விரும்புகிறீர்போலிருக்கு? என்றார் ஒருவர்