பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

85


மகப்பேறும் - திருப்பெயரும் : அலைவாயண்ணல், மாசிப் பெருவிழாக் கொண்டருளும் மாண்பினைக் கண்டு தொழுது, அங்ஙனே சின்னாள் உறைந்திருந்த தம் பதியர் கனவில் ஆறுமுகப் பண்ணவன் ஒரு நாள் தோன்றினான். சுப்பம்மா கருவிலிருப்பவர், ஆறுமுககுரு என்றருளிச் செய்து இருவர்க்கும் திருநீறளித்து மறைந்தான் விடியற் காலைக் கனவினை ஒருவரோடொருவர் கூறிக் குமரக் கடவுள் திருவருளை வியந்து போற்றினர். சில நாள் அங்கிருந்த பின் அவனடி நீங்காச் சிந்தையினராய்த் தென்திசை விட்டு வடக்கு நோக்கி வழிக்கொண்டனர்.

பற்பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு நடு நாட்டையடைந்தனர். சேதிநாட்டுத் தலைநகரம் திருக்கோவலூரை நண்ணினர். அப்போது அம்மையார் நிறைகருவெய்தி யிருந்தனராதலால் மேலும் வழி நடை கொள்ளல் இயலா தாயிற்று. திருக்கோவல் வீரட்ட நாதன் ஆலயத்தை யடுத்திருந்த வீரசைவ மடத்தில் தங்கினர். கலி 4774, ஆநந்த ஆண்டு கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நன்னாள், திருவருணை மலையுச்சியில் சோதிவளர் தோற்றங்காணும் நல் வேளையில் சுப்பம்மா ஆறுமுக குருவாம் ஆண் மகவினைப் பெற்றெடுத்தார். செந்திலாண்டவன் சூட்டிய பெயரே அம்மகவினுக்கு வழங்கப் பெற்றது.

குகை நமசிவாயர் பரம்பரைக்கு உபதேசம் : இந்தத் தெய்வத் திருக்குழந்தையின் தோற்றம், திருவண்ணாமலை ஆறாங்குகை நமசிவாயராகிய மடத்தின் தலைவருக்குப் பல கால முன்னரே, அம்மடத்தின் முதற் குருநாதரால் கனவில் அறிவிக்கப் பெற்றிருந்தது. ஆறாங் குரு நமசிவாயர் சீவியவந்தராயிருந்தபோதே ஏழாந் தலைவர் திருவருளிற் கலந்துவிட்டார். ஒருவருக்கு உபதேசித்தலே முறையாதலால், மற்றொருவர்க்கு உபதேசிக்க அதிகாரமின்மை கருதி மடத்தின் தலைவராகும் பரம்பரை யற்றுவிடுமே என்னுங் கவலையோடிருந்த அவருக்கு இன்ன இடத்தில், இன்னநாளில் இன்ன வேளையில் தோன்றும் புதல்வர் இந்தப் பரம்பரை தழைக்க உபதேசிப்பாரென்று கூறக் கனாக் கண்டிருந்தார். இவ்வரும் புதல்வரின் தோற்றத்தினைத் தம் ஏவலர் வழி அறிந்த அக்குரு நமசிவாயர் மகிழ்ந்திருந்தார். குழந்தை பிறந்த மூன்றா நாள் தாய் சுப்பம்மா சிவத்தை மேவினர். வருத்த மேலீட்டினால் தந்தையாம் சுப்பிரமணிய அய்யர் திருக்கோவலூர் மடத்து வீரசைவரிடமே இக் குழந்தையை வளர்த்துக் கொள்ளும்படி விட்டு விட்டு ஸ்ரீசைலம் சென்று விட்டார்.