பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பலரும் மாறுவேடம் பூண்டுகொண்டு தப்பியோடினர். இங்ஙனம் கலிங்க மெறிந்து வாகை சூடியவனாகிய கருணாகரத் தொண்டைமான் கடகரியும் குவிதனமும் குலோத்துங்கன் திருமுன்னர் வைத்து வணங்கினன். இப்போர்ச் செய்திகள் யாவும், கலிங்கத்துப் பரணியில் காளிக்குக் கூளி கூறியது என்ற பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

பரணியில் தொண்டைமான்

கருணாகரத் தொண்டைமான் வரலாற்றைக் கலிங்கத்துப் பரணி கொண்டு விளக்கமாகவும், திராட்சா ராமக் கல்வெட்டால் சுருக்கமாகவும் அறிய முடிகிறது. கலிங்கத்துப்பரணி இன்றேல் இவனுடற்றிய கலிங்கப் போரைப் பற்றி நன்கு தெரியாது போயிருக்கும். கருணாகரன் பல்லவர் குலத் தோன்றல். இதனைச் செயங் கொண்டார் கலிங்கத்துப் பரணியில் வண்டை வளம்பதி பாடீரே ... பல்லவர் தோன்றலைப் பாடீரே (தா. 534) என்று குறித்தார் ; அன்றியும் வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகு புகழ் கருணாகரன் (11-132) என்றும், கலிங்கப் பரணி நம் காவலன்மேல் சூட்டிய தோன்றல் தொண்டையர் வேந்தன் (13-33) என்றும், வண்டைமன் தொண்டைமான் (11-16) என்றும், வண்டைநகர் அரசன் (11-30) என்றும், வண்டையர்க் கரசு (11-53) என்றும், கண்ணாகிய சோழன சக்கரமாம் கருணாகரன் (11-52) என்றும், வண்டையர் கோன் (11-160) என்றும், அபயன் மந்திரி முதல்வன் (11-149) என்றும், வண்டையர் கோன் தொண்டைமான் (11-160) என்றும் கருணாகரனைப் பலவாறு புகழ்ந்து கூறியுள்ளார்.