பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

43



கடற்கரையில் கொண்டு சேர்த்த மகர மீனை ஆற்று மீனாகிய கெண்டை மீன் தொட்டு விடுகிறது; அதன் தீட்டு மறைய அது கங்கை ஆற்றில் முழுகி எழுகிறது. அத்தகைய சிறப்பு உடையது கேகய நாடு என்றாள்.

நெடிய குளத்தில் வாளைக் கொடி மீது தனியாக ஒரு அன்னம் நடந்து செல்கிறது. அது தனிக் கயிற்றில் நடக்கும் கழைக் கூத்து ஆடும் பெண் ஒருத்தியைப் போல விளங்குகிறது. அத்தகைய சிறப்பு உடையவன் காந்தார நாட்டு அரசன் என்றாள்.

சங்குகள் புடைபெயர அதனால் தாமரை மலர்கள் கலங்குகின்றன. அதனால் செந்தேனைப் பூ சிந்துகிறது. அது செங்குவளைக் கதிர்களைப் பொன்போல விளைவிக்க உதவுகிறது. அத்தகைய சிறப்புடைய நாடு சிந்து நாடு என்று கூறினாள்.

பார்த்திபர்கள் பலரை அவள் காட்ட நேர்த்திமிக்க நளனைக் காண அவள் விருப்பம் கொண்டாள். நளன் இருந்த இடத்துக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஒரு நளன் அல்ல; நான்கு நளன்களைக் கண்டாள். தேவைக்கு மேல் கிடைக்கும் செல்வம்தான் அது; அது தன் மன மயக்கம் என நினைத்தாள்.

நளன் உருவில் தேவர்கள் நால்வர் உடன் அமர்ந்திருந்தனர். இந்திரன், அக்கினி, வருணன், இயமன் இந்நால்வர் நளன் உருவில் அமர்ந்திருந்தனர். போலிகள் யார்? நளன் யார்? எப்படி அறிவது? தேவர்களின் சூழ்ச்சி இது என்பதைத் தமயந்தி அறிந்தாள்.

கையில் மாலை நளன் கழுத்தில் போட எடுத்தாள்; ஐவரும் எதிர்பார்த்தனர். நளன் ஏதாவது ஒரு குறிப்பைத் தந்திருக்கலாம். தான்தான் உண்மை நளன் என்று கூறி